புதன், 28 மார்ச், 2018

Maundy Thursday 2018 (B): பெரிய-தூய வியாழன் (பரிசுத்த வாரம்) 29,03,2018



பெரிய-தூய வியாழன்
(பரிசுத்த வாரம்)
29,03,2018
பன்வில, கண்டி
Monday, March 26, 2018

முதல் வாசகம்: விடுதலைப் பயணம் 12,1-8.11-14
பதிலுரைப்ப பாடல்: திருப்பாடல் 116
இரண்டாம் வாசகம்: 1கொரிந்தியர் 11, 23-26
நற்செய்தி: யோவான் 13,1-15

பெரிய வியாழனில், புதிய கட்டளையை ஆண்டவர் சீடர்களுக்கு கொடுத்ததால், கட்டளை வியாழன் என்று லத்தின் மொழியில் அழைக்கப்படுகிறது (mandatum kd;lhJk;). நற்கருணையை ஏற்படுத்திய படியால் இந்த வியாழன் குருத்துவத்தின் வியாழனாகவும், மாற்றம் பெறுகிறது. மிருகங்களையும், பறவைகளையும், தானியங்களையும் ஒப்புக்கொடுத்து தெய்வங்களை திருப்திப்படுத்தும், அக்கால-இக்கால, பயங்கர உலகில் கடவுளே வந்து, பாதங்களைக் கழுவி, தன்னை ஒப்புக்கொடுத்து, பலி என்றால் இதுதான் மக்களே, என்று போதிக்கிறார்
இன்றைய நாள் திருச்சபையின் வரலாற்றிலும் கிறிஸ்தவ கலாச்சாரத்திலும் மிக முக்கியமான நாள். ஒவ்வொரு நாள் திருப்பலியும் இந்த, முதற் திருப்பலியின் மீள் வடிவமாகும். இந்தத் திருப்பலிதான் திருச்சபையின் இதயமும், மூச்சும். பெரிய வியாழனில் திருப்பலிக்கு பின்னர் செய்யப்படுகின்ற திருமணித்தியாலங்கள், கெத்சமனி தோட்டத்தில் ஆண்டவர் இயேசு மனக்கலக்கமும் வேதனையும் அடைந்து செபித்ததை நினைவூட்டுகின்றன, ஆண்டவர் கேட்டதற்கு 
இணங்க நாம் அவரோடு விழித்திருந்து செபிக்க முயல்கிறோம். ஆண்டவரின் இறுதி இராவுணவு
(Ultima Cena cy;jpkh Nrdh) பல்லாயிரம் ஆண்டுகளாக, கிறிஸ்தவ ஓவியம் மற்றும் சிற்பக் கலையின் அங்கமாக மாறியிருக்கிறது. இவற்றுள் இத்தாலிய சிற்ப ஓவியர் வரைந்தது இன்று வரை மனிதரின் கலை ஆர்வத்தையும், ஆன்மாவின் தெய்வீக தேடலையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறது. இறுதி இராவுணவில் ஆண்டவர் பாவித்த கிண்ணத்தை வைத்து பல விதமான கதைகளையும், கட்டுக்கதைகளும் இயேசுவைச் சாராதவர்களால் உருவாக்கப்படுகின்றன. சில குறிப்பிட்ட சினிமாக்காரர்களும், சில உலகியல் மெய்யியல்வாதிகளும், தங்கள் வங்கிக் கணக்குகளை பெருக்க இந்த புனிதமான நாளை பொருளாக பாவிக்க முயல்கின்றனர். இவர்களின் கற்பனை ஆண்டவரை நிந்திக்க முயல்கிறது, இதற்கு நல்ல ஒரு உதாரணம் - பல வருடங்களுக்கு முன் வந்த ' டாவின்சி கோட்' (The Da Vinci Code - Dan Brown) என்ற திரைப்படம்
கிறிஸ்தவர்களாகிய நமக்கு இந்த நாள், உணர்வு பூர்வமான நாள், இதயத்திற்கு நெருக்கமான நாள். கட்டுக்கதைகளையும் புராணங்களையும் நம்ப வேண்டிய ஆன்மீக வறுமையில் நாமோ, நம் திருச்சபையோ, அல்லது இறையரசோ இல்லை. நமக்கு, ஆண்டவரின் கிண்ணத்தைவிட அந்த கிண்ணம் தாங்கிய இரத்தமே முக்கியமானது, ஏனெனில் அது ஆண்டவரின் இரத்தம்

வி.: 12,1-8.11-14

1எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும் ஆரோனுக்கும் பின்வருமாறு கூறினார்: 2உங்களுக்கு மாதங்களில் தலையாயது இம்மாதமே! ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே! 3இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள்; அவர்கள் இம்மாதம் பத்தாம்நாள், குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். 4ஓர் ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள்கள் இல்லையெனில், உண்போரின் எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரைச் சேர்த்துக்கொள்ளட்டும். 5ஆடு குறைபாடற்றதாக, கிடாயாக, ஒரு வயது குட்டியாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுப்பது வெள்ளாடாகவோ செம்மறியாடாகவோ இருக்கலாம். 6இம்மாதம் பதினான்காம் நாள்வரை அதை வைத்துப் பேணுங்கள். அந்நாள் மாலை மங்கும் வேளையில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் அனைத்துச் சபையும் அதை வெட்ட வேண்டும். 7இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும். 8இறைச்சியை அந்த இரவிலேயே உண்ணவேண்டும். நெருப்பில் அதனை வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரையோடும் உண்ண வேண்டும்.

11நீங்கள் அதனை உண்ணும் முறையாவது: இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து விரைவாக உண்ணுங்கள். இது 'ஆண்டவரின் பாஸ்கா'.
12ஏனெனில், நான் இன்றிரவிலேயே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன். எகிப்தின் தெய்வங்கள் அனைத்தின்மேலும் நான் தீர்ப்பிடுவேன். நானே ஆண்டவர்! 13இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள்மேல் வராது.

புளிப்பற்ற அப்ப விழா

14இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும். இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறை தோறும் கொண்டாடுங்கள். இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாக இருப்பதாக!

. பாஸ்கு (פֶּסַח பெசா) என்பது கடந்து போதலைக் குறிக்கும். பாஸ்கு விழா இஸ்ராயேலருடைய முக்கிய விழாவாகி, ஆண்டவர் எகிப்திலே இஸ்ராயேல் மக்களை மீட்டதையும், அழிக்கும் வான தூதர் இஸ்ராயேல் வீடுகளைக் கடந்து சென்றதையும், இஸ்ராயேலர் செங்கடலைக்க கடந்ததையும் குறிக்கின்றன. அநேகமாக நிசான்-சித்திரை மாதம் 14ம் நாள் இந்த விழா கொண்டாடப்பட்டது. ஓரு செம்மறி ஆட்டுக் குட்டியை பலியிட்டு குடும்பமாக கொண்டாடப்பட்ட இந்த விழா, அதே மாதம் 15ம் தொடங்கப்பட்ட புளிக்காத அப்ப விழாவுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இந்த இரண்டு விழாக்களும் வரலாற்றிலே தனித் தனியாக தொடங்கப்பட்டு, பின்நாளில் இஸ்ராயேலிரின் மீட்பு வரலாற்றோடு சேர்ந்து, ஒரே விழாவானது. மத்தேயு, மாற்கு, லூக்கா, பவுல் போன்றோர் ஆண்டவரின் இறுதி உணவை பாஸ்கா விழாவாக காண்கின்றனர், யோவான் இறையியலிலே சற்று முன்னே சென்று ஆண்டவர் சிலுவையில் மரணித்ததே, பாஸ்கா விழாவென்று காண்கிறார்

. குருமரபு பாரம்பரியம் என்று காணப்படும் இந்த பகுதி, மத்திய கிழக்கு பகுதிகளின் நாடோடி வாழ்கையை நினைவுகூறுகிறது என்பர் ஆய்வாளர்கள். வசந்த காலத்தின் தொடக்கத்தில் புதிய மேய்சல் நிலங்களைத் தேடி மந்தைகளை கூட்டிச் செல்கிற நாடோடி மக்கள், தெய்வங்களிடம் பாதுகாப்பு வேண்டி, செய்யப்பட்ட ஒரு வகை பலி விழாக்களை ஒட்டி இது அமைந்துள்ளது. குரு, பலிப்பீடம், ஆலயம் இவை இந்த பகுதியில் இல்லாமையானது, இந்த விழா மிகவும் புரதனமானது என காட்டுகிறது. மதத்திற்கு வெளியில் உண்டாகி, பின்னர், இஸ்ராயேலின் மதத்திற்குள் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும். (எம்முடைய தைப்பொங்கலுக்கும் இப்படியான அழகான வரலாறு ஒன்று உள்ளது). 

வவ. 1-4: பல புராதன கால அட்டவணைகள், வசந்த காலத்தையே வருடத்தின் முதலாவது மாதமாக கொண்டிருந்தன. குடும்ப விழா என்பதும், அயலவரையும் சேர்த்துக்கொள்ளட்டும் என்பதும், மனிதன் ஓரு சமூக பிராணி என்பதற்கு நல்ல உதாரணம். ஆண்டவர் ஆரோனிற்கும் மோசேக்கும் 
இடும் கட்டளையின் பின்னனியில், ஏற்கனவே வேறு மாதங்களை இவர்கள் முதல் மாதமாக கொண்டிருந்தனர் என்பது புலப்படுகிறது. குடும்பங்களின் முக்கியத்துவத்தையும் இந்த வரிகள் காட்டுகின்றன. குடும்பங்கள் தனித்து இயங்கக் கூடாது அவை மற்றவர்களையும் உள்வாங்க வேண்டும் என்ற சிந்தனையும் இங்கே காணப்படுகிறது. குடும்பம் என்பதை குறிக்க எபிரேயம் 'வீடு' (בַּיִת பாயித்) என்ற சொல்லையே பாவிக்கிறது. இதிலிருந்து குடும்பம் இல்லத்தோடு சம்மந்தப்பட்டது என்பது புலப்படுகிறது

வவ. 5-6: ஆட்டின் தேர்வுத்தன்மை விவரிக்கப்படுகிறது. தொடக்க காலத்தில் அனைத்து ஆடுகளும் நல்லவைகளாகவே கருதப்பட்டன, பின்னர் இறையியலும், அறிவியலும் வளர வளர: செம்மறி நல்லதையும், சாதாரண ஆடு தீமையையும் குறிப்பதாக மாறிவிட்டது. இதற்கு இவற்றின் உடலமைப்புக்கள் காரணமாக இருந்திருக்கலாம். குறைபாடு அல்லது நோய் என்பன சாபம் என்று நம்பப்பட்ட அந்த காலப்பகுதியில், குறைபாடுள்ள விலங்குகளும் அவ்வாறே கருதப்பட்டன. ஆண்டவர் வெள்ளாட்டையோ அல்லது செம்மறியாட்டையே தெரிவு செய்யலாம் என்கிறார். ஒரு வருடம் பூர்த்தியான ஆடு அத்தோடு கிடாய் போன்றவை தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதிலிருந்து அக்கால சமுதாயம் பெண்விலங்குள், மற்றும் குட்டி விலங்குகள் மட்டில் அக்கறை உள்ளவர்களாக இருந்தனர் என்பதும் புலப்படுகிறது.  

வவ. 7-8.11: இரத்தங்களை பூசுதல் ஒரு வகை பாதுகாப்பு வேண்டி பலி ஒப்புக்கொடுக்கும் சடங்கு. சட்டங்களிலும் நிலைகளிலும் பூசுதல், இக்காலங்ளில் ஏற்கனவே இவர்கள் சிறிய வகை வீடுகளில் வாழத் தொடங்கிவிட்டனர் எனலாம். (கிறிஸ்து சிலுவையில் தொங்கி, தனது இரத்தத்தால் அனைவரையும் ஒப்புரவாக்கிவிட்டார், ஆனாலும் இன்னும் சில கிறிஸ்தவர்கள் இயேசுவை திருப்திப்படுத்த சில ஆலயங்களில் அப்பாவி மிருகங்களை பலியிடுவதை என்னவென்று சொல்வது? இது கிறிஸ்தவ நாகரீகம் மற்றும் இறையலுக்கு பொருத்தமானது அல்ல) இறைச்சியை உண்ணும் விதமும், கசப்புக் கீரையும், சாதாரண பாலைவன மேய்சல்காரர்களின் வறிய உணவை குறிக்கிறது. வாட்டி உண்ணுதல், சமைக்க பாத்திரம் இன்மையையும், கசப்புக் கீரை அவர்களின் தொட்டுண்ணும் உணவையும் குறிக்கலாம். உண்ணுபவர்களின் முறை, எதோ ஒரு அவசரத்தை காட்டுகிறது. குறிப்பிடப்பட்டுள்ள ஆடை அணிகள் சாதாரண நாடோடி மக்களின் உடைகள். இடையில் கச்சை (מָתְנֵיכֶם חֲגֻרִים மாத்நெகெம் ஹகூரிம்), காலில் காலணி (עֲלֵיכֶם בְּרַגְלֵיכֶם 'அலெகெம் பெராக்லெகெம்), கையில் கோல் (מַקֶּלְכֶם בְּיֶדְכֶם மக்கெல்கெம் பெயெத்கெம்) போன்றவை, இவர்களுக்கு அவசரமான ஒரு பயண அனுபவத்தை நினைவூட்ட சொல்லப்படுகிறது. அத்தோடு இவ்வளவு காலமும் சாதாரன செமித்திய கலாச்சார சடங்காக இருந்தது, இப்போது ஆண்டவரின் பாஸ்காவாக மாறுகிறது. இதுவே விடுதலைப் பயண ஆசிரியரின் மையச் செய்தி

வவ. 12-14: தலைப்பிள்ளைகளின் மரணம், ஒரு இனத்தின் எதிர்காலத்தின் மரணத்தைக் குறிக்கும். கடவுள் கொலை செய்வாரா, எப்படி கடவுள் தன் மக்களை காக்க இன்னொரு மக்களினத்தை சாகடிக்க முடியும் (அவர்கள் பாவிகளானாலும் சரி). இஸ்ராயேலர், கடவுள் மக்கள் என்றால் எகிப்தியர் யார் மக்கள்? இவை தற்காலத்தில் நம்பிள்ளைகளால் எழுப்பப்படும் கேள்விகளில் சில. அவை நியாயமான கேள்விகளும் கூட. இங்கே கடவுள் எகிப்தியரை சாவடித்தார் என்பதை விட, கடவுள் துன்புற்று துணையில்லாமல் இருந்த இஸ்ராயேலரை காக்கிறார் என்பதையே கருப்பொருளாக எடுக்க வேண்டும். பாரவோன் தன்னை கடவுளாக நினைத்ததும், அவர் மக்களும் அவர் தலைவர்களும் இந்த பாரவோனின் மோலாதிக்க சிந்தனைக்கு உரம் இட்டதும், அவர்களின் அழிவிற்கு வழிவகுக்கின்றன. கடவுள் எகிப்தியரை உடனடியாக தண்டித்ததாக விவிலியம் காட்டவில்லை மாறாக பல சந்தர்பங்கள் கொடுக்கப்பட்டதன் பின்னரே தண்டனை இறுதியாக வருகின்றது. அதே வேளை தண்டனையையும் கடவுள் நேரடியாக கொடுக்கவில்லை அதுவும் வானதூதர்கள் வழியாகவே வருகின்றன. கடவுளின் தண்டனையும் அவர் கோபமும் இலகுவில் புரிந்து கொள்ள முடியாதவை, அத்தோடு அவற்றை சூழலியலில் மட்டுமே பார்க்க வேண்டும்
இவற்றை அவற்றின் பின்புலம் அறியாமல் வாசித்தால் நம்முடைய கடவுள் பற்றிய அறிவில் பல சவால்களை சந்திக்கலாம். எல்லாவற்றிக்கும் மேலாக கடவுளின் கோபத்தை மற்றும் தண்டனை பற்றிய ஆன்மீகத்தை இயேசுவின் பார்வையில் வாசிக்க வேண்டும்.   
இந்த வரிகளில், ஆண்டவர்தான் உன்மையான கடவுள் என்று காட்ட ஆசிரியர் கொடுக்கும் விளக்கம். אֲנִי יְהוָה அனி அடோனாய் (நான் கடவுள்), என்று இங்கே கடவுள் மோசேக்கு சொல்வது, பின்நாளில் யோவான் நற்செய்தியில் இயேசு தன்னைப் பற்றி சொல்லும் வசனங்களை ஒத்திருக்கின்றன. இரத்தம் முதல் ஏற்பாட்டில் பல அர்தங்களைக் கொடுக்கிறது. இரத்தம் உயிரின் அடையாளம் என்பது மிகவும் முக்கியாமான ஒரு செய்தி. கடவுள் எகிப்தின் மக்கள், விலங்குகள் மற்றும் தெய்வங்கள் மேல் தீர்ப்பிடக்கூடியவர் என்பதும் இந்த கதையில் மிக முக்கியமான செய்திகளில் ஒன்று (מֵאָדָם וְעַד־בְּהֵמָ֑ה וּבְכָל־אֱלֹהֵי מִצְרַיִם אֶֽעֱשֶׂה שְׁפָטִים אֲנִי יְהוָֽה׃ மெ'ஆதாம் வெ 'அத்-பெஹெமாஹ். வுவெகோல்-எலோஹே மிட்ஸ்ராயிம் ''எசெஹ் ஷெபாதிம் 'அனி அதோனாய்). இரத்தம் உயிரின் அடையாளம் அத்தோடு அதனை மனிதர் சிந்தவோ அல்லது உண்ணவே கூடாது என்று இஸ்ராயேலர் கருதினர், இதன் முக்கியத்துவத்தையும் இங்கு காணலாம். இன்றிலிருந்து இந்த விழா ஆண்டவரின் நினைவு நாளாக இஸ்ராயேல் மக்களுக்கு மாறுகிறது

திருப்பாடல் 115
சாவினின்று தப்பியவர் பாடியது
1அல்லேலூயா! ஆண்டவர்மீது அன்புகூர்கின்றேன்; ஏனெனில், எனக்கு இரங்குமாறு
நான் எழுப்பிய குரலை அவர் கேட்டருளினார்.
2அவரை நான் மன்றாடிய நாளில், எனக்கு அவர் செவிசாய்த்தார்.
3சாவின் கயிறுகள் என்னைப் பிணித்துக் கொண்டன் பாதாளத்தின் துன்பங்கள்
என்னைப் பற்றிக் கொண்டன் துன்பமும் துயரமும் என்னை ஆட்கொண்டன.
4நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்; ‛ஆண்டவரே! என் உயிரைக் காத்தருளும்' என்று கெஞ்சினேன்.
5ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர்; நம் கடவுள் இரக்கம் உள்ளவர்.
6எளிய மனத்தோரை ஆண்டவர் பாதுகாக்கின்றார்; நான் தாழ்த்தப்பட்டபோது
எனக்கு மீட்பளித்தார்.
7‛என் நெஞ்சே! நீ மீண்டும் அமைதிகொள்; ஏனெனில், ஆண்டவர் உனக்கு நன்மை செய்தார்'.
8என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்; என் கண் கலங்காதபடியும் என் கால் இடறாதபடியும் செய்தார்.
9உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.
10‛மிகவும் துன்புறுகிறேன்!' என்று சொன்னபோதும் நான் நம்பிக்கையோடு இருந்தேன்.
11‛எந்த மனிதரையும் நம்பலாகாது' என்று என் மனக்கலக்கத்தில் நான் சொன்னேன்.
12ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு
என்ன கைம்மாறு செய்வேன்?
13மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன்.
14இதோ! ஆண்டவருடைய மக்கள் அனைவரின் முன்னிலையில் அவருக்கு என் பொருத்தனைகளை
நிறைவேற்றுவேன்.
15ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது.
16ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்;
என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர்.
17நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்;
18இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என்
பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்;
19உமது இல்லத்தில் முற்றங்களில், எருசலேமின் நடுவில், ஆண்டவரே! உமக்கு என்
பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். அல்லேலூயா!

இந்த 116வது திருப்பாடல் ஐந்தாவது புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இதனை தனி மனித புகழ்சிப் பாடல் என சில ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். மிகவும் ஆபத்தான சூழ்நிலை ஒன்றை பின்புலமாக காட்டுகிறார் ஆசிரியர். இதற்கு காரணமாக மனிதர்களின் ஏமாற்றுத்தனத்தையும், தன்னுடைய வெகுளிதனத்தையும் அவர் சாடுகிறார். இப்படியான சூழ்நிலையில் செபம் உதவிக்கு வருகிறது, கடவுள் அவர் குரலைக் கேட்கிறார், இந்த கடவுள் அருள் மிக்கவர், இரக்கமும், உண்மையுமுள்ளவர் என்று பாடல் தொடர்ந்து முன்னேருகிறது. எபிரேய கவிநடையான 'படி அடுக்கு' முறையில் இந்த பாடல், அமைக்கப்பட்டுள்ளது

1. துன்ப நாளின் கடவுளை கூவி அழைத்தல் (வவ.1-2)
1. செபத்தினால் துன்பங்களை சந்தித்தல் (வவ.3-4)
1. கடவுளில் முழுமையாக தங்கியிருத்தல் (வவ. 5-7)
1. நம்பிக்கை அனைத்தையும் புதியதாக்கிறது (வவ. 8-11)
2. கடவுள் துன்பங்களுக்கு விடையளிக்கிறார். (வவ.12-14)
2. கடவுள் துன்பங்களை அகற்றுகிறார் (வவ.15-16)
2. மீட்பு நாளின் கடவுளை கூவி அழைத்தல் (வவ. 17-19)

.1: அல்லேலூயா என்ற புகழ்ச்சி வார்த்தையில் இந்த திருப்பாடல் தொடங்குகிறது (הַלְלוּ־יָהּ ஹல்லூ-யாஹ்). இந்த புகழ்ச்சி சொல் எபிரேய விவிலியத்தில் 115வது திருப்பாடலின் இறுதியான சொல்லாக இருக்கிறது. 116வது திருப்பாடலின் முதலாவது சொல்லாக இல்லை
ஆசிரியர், தான் ஏன் கடவுள் மீது அன்புகூருகிறார் (אָהַבְתִּי 'ஆஹவ்தி- அன்புகூறுகிறேன்) என்பதற்க்கு, ஆண்டவர் தன் குரலைக் கேட்டதை காரணமாகச் சொல்கிறார். ஆண்டவர் ஒருவரின் குரலைக் கேட்கிறார் என்பது, ஒருவருக்கு துன்பத்திலும் மன ஆறுதலைக் கொடுக்கிறது. இதனை ஆசிரியர் அழகாக வெளிப்படுத்துகிறார்

.2: முதலாவது வரியில் சொன்ன அதே அர்த்தம் வேறு சொற்பிரயோகங்களில் இந்த வரியிலும் திருப்பிக்கூரப்படுகிறது. மன்றாடிய நாளில் ஆண்டவர் தனக்கு செவிசாய்த்ததாகச் சொல்கிறார்
בְיָמַי אֶקרָֽא׃ வெயாமய் 'எக்ரா'- நான் கூப்பிடும் நாட்களில். இந்த வரியின் இரண்டாவது பிரிவை, 'நான் வாழுகின்ற வரை, தேவையில் ஆண்டவரை உதவிக்காக கூப்பிடுவேன்' என்று சில ஆங்கில விவிலியங்கள் மொழிபெயர்க்கின்றன

.3: தன்னுடை துன்பத்தின் நிலையை அடையாளங்களில் அவர் உருவகிக்கின்றார். சாவின் கயிறுகள் தன்னை பிணித்துக்கொண்டன என்கிறார். இதனை சாவின் கண்ணிகள் என்னை சூழ்ந்து கொண்டன என்று எபிரேய பாடம் தருகிறது אֲפָפ֤וּנִי ׀ חֶבְלֵי־מָ֗וֶת 'அபாபூனி ஹெவ்லே மோவெத். மேலும்  இதனை வேறு சொற்களில், பாதாளத்தின் துன்பங்கள் தன்னை பற்றிக்கொண்டன என்கிறார். பாதாளம் (שְׁאוֹל ஷெ'ஓல்), இங்கே இவருக்கு மரண அனுபவத்தைக் கொடுத்திருக்கும்
இப்படியான அனுபவங்கள் தனக்கு துன்பத்தையும் துயரத்தையுமே தருகிறது என்கிறார். צָרָ֖ה וְיָגוֹן אֶמְצָא׃ ட்சாராஹ் வெயாகோன் 'எம்ட்சா'- துன்பத்தையும் துயரத்தையும் நான் கண்டுகொள்கிறேன்

.4: ஆசிரியர் தான் ஆண்டவரை தொழுததாகச் சொல்கிறார், இதனை எபிரேய விவிலியம், בְשֵׁם־יְהוָה אֶקְרָא (பெஷெம்-அதோனாய் 'எக்ரா'), நான் ஆண்டவரின் பெயரில் அழைத்தேன் என்று வாசிக்கிறது
இதனை அந்த வரியின் இரண்டாவது பிரிவு, 'என் உயிரைக் காக்குமாறு கெஞ்சினேன்' என்று மீள சொல்கிறது

.5: ஆண்டவரின் கெஞ்சி மன்றாடுவதற்கான காரணத்தை அவர் விளக்குகிறார். கடவுள் அருளும் இரக்கமும் உள்ளவராக இருப்பதுதான் அதற்கான காரணம் என்கிறார். חַנּוּן יְהוָֹ֣ה וְצַדִּ֑יק ஹனூன் அதோனாய் வெட்சாதிக். ஆண்டவருடைய அருளும் நீதியும் இன்னொரு சொல்லின் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது, அதாவது ஆண்டவர் இரக்கம் உள்ளவராக பாடப்படுகிறார்

.6: ஆண்டவர் எளிய மனத்தோரை பாதுக்கிறவர் (פְּתָאיִם பெதா'யிம்- எளியோர்), தன்னையும், தான் தாழ்த்தப்பட்ட போது (דַּלּוֹתִי தல்லோதி- நான் தாழ்த்தப்பட்டேன்) பாதுகாக்கிறார் என்கிறார். அதாவது தான் எளியமனத்தவர் இதனால்தான் ஆண்டவரின் பாதுகாப்பு தனக்கு கிடைக்கிறது என்கிறார். வாசகர்களும் எளிய மனத்தோராய் ஆண்டவரின் பாதுகாப்பை பெறமுடியும் என்பது இவர் வாதம்

.7: தன் நெஞ்சை அமைதி கொள்ளச் சொல்கிறார். இந்த இடத்தில் தன் நெஞ்சை இரண்டாவது ஆளாக வர்ணித்து அதற்கு தான் முதலாவது ஆளாக கட்டளை கொடுக்கிறார். பல மொழிகளின் இலக்கியங்கள் இப்படியான வழிமுறையை பின்பற்றுகின்றன. எபிரேய மொழி இதனை (שׁוּבִי נַפְשִׁי) ஷுவி நப்ஷி - என் ஆன்மாவே திரும்பு என்று காட்டுகிறது. அதாவது தன் ஆன்மா, இதனை உயிர் அல்லது சுயம் என்றும் மொழி பெயர்க்கலாம்: இப்படியான அலையும் ஆன்மாவை மீண்டும் அமைதிக்கு திருப்ப கட்டளை கொடுக்கிறார். இதற்கு காரணமாக, ஆணடவர் அதற்கு நன்மை செய்தார் என்று பாடுகிறார். நன்மை செய்ததை, ஆசிரியர் இறந்த காலத்தில் குறிப்பிடுகிறார், ஆக ஆண்டவரின் நன்மைத்தனம் வெறும் எதிர்காலம் அல்ல என்பது புலப்படுகிறது

.8: மூன்று விதமான ஆண்டவரின் நன்மைத்தனங்கள் நினைவுகூறப்படுகின்றன, அதாவது
. அவர் உயிர் சாவினின்று விடுவிக்கப்படுகிறது (חִלַּצְתָּ נַפְשִׁי ஹில்லாட்ஸ்தா நப்ஷி)
. அவர் கண் கலங்காமல் பாதுகாக்கப்படுகிறது (אֶת־עֵינִי מִן־דִּמְעָה 'எத்-'எனே மின்-திம்'அஹ்). 
. அவர் கால் இடறாதபடி காக்கப்படுகிறது  (אֶת־רַגְלִ֥י מִדֶּֽחִי 'எத்-ரக்லி மித்தெஹி). 

.9: இந்த வசனம் மிகவும் இனிமையான வசனம். இஸ்ராயேலர்கள் தங்கள் நாட்டை உயிர்வாழ்வேர் நாடு என்று அழைப்பார்கள் (בְּאַרְצ֗וֹת הַחַיִּים பெ'அர்டஸொத் ஹஹய்யிம்). இவர்கள் இரண்டாவது வாழ்வு அல்லது மரணத்தின் பின் வாழ்வு என்ற சிந்தனையை கொண்டிருக்காத படியால், வாழ்வோரின் நாடே இவர்களின் இல்க்காக இருக்கிறதை இந்த வரியில் காணலாம்
அதுவும் இந்த வாழ்வோர் நாட்டில், தான் ஆண்டவரின் திருமுன் வாழ்ந்திடுவதாகச் சொல்கிறார். இதனை ஆண்டவர் முன் நடந்திடுவேன் என்று எபிரேய விவிலியம் காட்டுகிறது
இரண்டும் ஒரே அர்த்தத்தைத்தான் கொடுக்கிறது (אֶתְהַלֵּךְ לִפְנֵי יְהוָ֑ה 'எத்ஹல்லெக் லிப்னே அதோனாய்). 

.10: இஸ்ராயேல் புலம்பல் பாடல்கள் கூட நம்பிக்கையை மய்யமாக கொண்ட பாடல்களே. தமிழ்க் கலாச்சாரத்தைப் போல, இஸ்ராயேல் கலாச்சாரத்திலும், புலம்பல் என்பது உண்மையில் நீதிக்கான ஒரு வேண்டலே
இந்த வரியில் தான் மிகவும் துன்புறுகிறதாக சொன்னாலும் (אֲנִ֗י עָנִיתִי 'அனி 'அநிதி- நான் துன்புற்றாலும்), அவர் நம்பிக்கையோடு இருந்ததாகச் சொல்கிறார்

.11: இந்த வரியில் எந்த மனிதரையும் நம்பலாகாது என்று தன்னுடைய ஆதங்கத்தைப் பாடுகிறார். இது அவர் மனிதர்களால் வெறுக்கப்பட்டு அல்லது ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்ற பின்புலத்தைக் காட்டுகிறது எனவும் எடுக்கலாம்
இங்கே இவர் மனிதர்களை சபிக்கிறார் என்பதைவிட, மனிதர்களிலும் கடவுளை அதிகமான நம்புகிறார் என்ற சிந்தனைதான் மேலோங்கி இருக்கிறது எனலாம். இங்கே எழுவாய்ப் பொருள், மனிதர் மீதான கோபமல்ல, மாறாக கடவுள் மீதான ஆழமான விசுவாசம். எந்த மனிதரையும், என்று சொல்லி அனைத்து மனிதர்களையும் உள்வாங்குகிறார் போல தோன்றுகிறது. எபிரேய மூல பாடம் அனைத்து மனிதர்களையும், பொய்யர்கள் என்கிறது (כָּל־הָאָדָם כֹּזֵב கோல்-ஹா'ஆதாம் கோட்செவ்). 

.12: முக்கியமான ஒரு கேள்வியை அனைத்து வாசகர்களிடமும் கேட்கிறார். ஆனால் கேள்வியை அவர் தன்னிடமே கேட்பது போல அமைக்கிறார். ஆண்டவர் செய்த அனைத்து நன்மைகளுக்கும், எப்படி ஒருவரினால், பிரதிபலன் செய்ய முடியும் என்பது அவர் கேள்வி. இதற்கு விடையாக, மனிதர்களினால் எந்த விதமான கைமாறையும் கடவுளுக்கு செய்ய முடியாது என்பது விடையாக வரும்

.13: மீட்பின் கிண்ணம் என்ற சொல் இங்கே எழுவாய்ப் பொருளாக வருகிறது, כּוֹס־יְשׁוּע֥וֹת אֶשָּׂ֑א கோஸ்-யெஷு'ஓத் 'எஸ்ஸெ' (மீட்பின் கிண்ணத்தை உயர்த்துவேன்). இந்த மீட்பின் கிண்ணத்தைக் கொண்டு ஆண்டவரின் திருப்பெயரை தொழுவதாகச் சொல்கிறார்
இந்த வரி புதிய ஏற்பாட்டில், நற்கருணைக் கிண்ணத்திற்கு ஒப்பிட்படுகிறது. இருப்பினும் 
இந்த இடத்தில் இது திரவ பலிக்கான கிண்ணத்தையே குறிக்கிறது எனலாம். முதல் ஏற்பாட்டுக் காலத்தில், ஆண்டவருக்கு மிருக பலி, தானிய பலி, மற்றும் திரவப் பலிகள் காணிக்கையாக கொடுக்கப்பட்டன. திரவ பலி என்பது எண்ணெய் மற்றும் இரசத்தைக் குறிக்கும்

.14: இந்த வரியுடன் ஒப்பிடுகின்றபோது, முதல் வரி காணிக்கையை குறிப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆண்டவருக்கு பொருத்தனைகளை தான் நிறைவேற்றுவதாகச் சொல்கிறார் 
(נְדָרַי לַיהוָה நெதாரய் லஅதோனாய்-ஆண்டவருக்கு பொருத்தனைகள்). பல விதமான பொருத்தனைகள் வழக்கிலிருந்திருக்கின்றன. உழைப்பில் பத்தில் ஒன்றைக் கொடுத்தல், நகர்களை கடவுளுக்கு அர்ப்பணித்தல், தலைச்சான் உயிரிணங்களை கடவுளுக்கு கொடுத்தல், செபங்களை பொருத்தனையாக் கொடுத்தல், அத்தோடு தலைமுடியையும் பொருத்தனையாகக் கொடுத்தலும் பிற்காலத்தில் வழக்கிலிருந்திருக்கின்றன
இவர் என்ன பொருத்தனை செய்வார் என்பது இந்த வரியில் சொல்லப்படவில்லை, ஆனால் அதனை அவர் ஆண்டவர் மக்கள் முன்னிலையில் செய்வதாகச் சொல்கிறார் (כָל־עַמּֽוֹ கோல்-'அம்மோ, அனைத்து அவர் மக்கள்). 

.15: இந்த வரியும் இன்னும் சற்று வித்தியாசமாக இருக்கிறது. வழக்கமாக மரணத்தை 
இஸ்ராயேலர்கள் போற்றுவது கிடையாது, முக்கியமாக முதல் தேவாலயத்தின் காலத்தில். மரணத்தை அவர்கள் கடவுளின தண்டனை அல்லது ஒருவகையான துன்பமாகவே பார்த்தார்கள். அதுவும் சிறு பாராயத்தில் மரணம், அல்லது நல்லவர்களின் மரணம் போன்றவை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. அவர்கள் மரணத்தின் பின் வாழ்வையும் முதல் தேவாலயத்தின் காலத்தில் நம்பவில்லை
இந்த வரியில், ஆண்டவருடய அன்பர்களின் மரணம் அவர் பார்வையில் மதிப்புக்குரியது என்கிறார் ஆசிரியர். יָקָר בְּעֵינֵ֣י יְהוָ֑ה הַ֝מָּ֗וְתָה לַחֲסִידָֽיו׃ யாகார் பெ'எனே அதோனாய், ஹம்மாவெதாஹ் லஹசிதாய்வ். கடவுளுடைய கண்களில்ல ஒப்பற்றது, அவர் அன்பர்களின் சாவு

.16: தன்னுடைய அடையாளத்தை பல ஒத்த கருத்து வரிகள் தெளிவு படுத்துகிறார். தன்னை ஆண்டவரின் ஊழியன் என்கிறார் (אֲֽנִי־עַבְדְּךָ 'அனி-'அவ்தேகா- நான் உம் ஊழியன்). இந்த வரி மீண்டும் இன்னொருமுறை அதே வார்த்தைகளில் சொல்லப்படுகிறது. தமிழ் விவிலியம் ஊழியன், பணியாளன் என்ற ஒத்த கருத்துச் சொற்களைப் பாவித்தாலும். எபிரேயம் ஒரே சொல்லை இரண்டு முறைபாவிக்கிறது (עַבְדְּךָ 'அவ்தேகா), இப்படியாக எபிரேயத்தில் முக்கியமான வரிகள் அமைக்கப்படுகின்றன. இறுதியாக தன்னை ஆண்டவரின் அடியாளின் மகன் என்றும் சொல்கிறார் (בֶּן־אֲמָתֶךָ பென்- 'அமாதெகா- உம் அடியாளின் மகன்). இதுவும் ஆண்டவரின் பணியாளனை குறிக்கும் மிக முக்கியமான வார்த்தை பிரயோகம்

வவ.17-18: இறுதியாக தான் கடவுளுக்கு என்னனென்ன செய்யப்போகிறார் என்பதை தெளிவாக விளங்கப்படுத்தகிறார். ஆண்டவருக்கு நன்றிப் பலி செலுத்தி (זֶבַח תּוֹדָה ட்செவாஹ் தோதாஹ்- நன்றிப் பலி), அவர் பெயரைத் தொழுவதாகச் சொல்கிறார். நன்றிப்பலி பலி வகைகளில் ஒன்று
அத்தோடு மக்கள் முன்னிலையில் ஆண்டவருக்கு பொருத்தனைகள் நிறைவேற்றுவதாகச் சொல்கிறார். இந்த வாக்குறுதியை அவர் ஏற்கனவே சொல்லியிருக்கிறார்

.19: ஆண்டவருக்கு அவர் செய்யவிருக்கின்ற பொருத்தனைகளை எங்கே செய்யப்போகிறார் என்பது விவரிக்கப்படுகிறது. அதனை அவர் ஆண்டவரின் இல்லத்தின் முற்றத்தில் செய்யவிருக்கிறார். அது எருசலேம் தேவாலயம் என்ற அடுத்த வரி விளங்கப்படுத்துகிறது. இந்த வரி மூலமாக இந்த திருப்பாடல் இரண்டாம் தேவாலயத்தின் காலப் பாடல் என எடுக்கலாம், போல தோன்றுகிறது
இறுதியாக இந்த திருப்பாடல் அல்லேலூயா என்ற புகழ்சசி சொல்லுடன் நிறைவேறுகிறது (הַֽלְלוּ־יָֽהּ ஹல்லூ-யாஹ், ஆண்டவரை புகழுங்கள்). 


1கொரி 11,23-26

23ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, 24கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப்பிட்டு, 'இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்' என்றார். 25அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, 'இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் 
இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்' என்றார். 26ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.

புதிய ஏற்பாட்டில் நற்செய்திகளைத் தாண்டி, நற்கருணை ஏற்பாட்டினைப் பற்றி விவரிக்கின்ற முக்கியமான பகுதி இதுவாகும். இந்த விவரிப்பின் மூலம், நற்செய்திகள் எழுதப்படுவதற்கு முன்னமே ஆரம்ப திருச்சபை நற்கருணைக் கொண்டாட்டங்களை நிறைவேற்றியது என காணலாம். பவுல் எழுதியிருக்கும் வசனங்கள், நற்செய்தியாளர்கள் எழுதியிருக்கும் வசனங்களோடு அதிகமாக ஒத்திருப்பததைக் காணலாம். 1கொரிந்தியர் 11வது அதிகாரம், ஆரம்பகால திருச்சபைக் கொண்டாட்டங்களில் இருந்த பிணக்குகளை தீர்க்க எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. பவுல் இந்த வசனங்களை நினைவூட்டியதன் வாயிலாக இன்று போல அன்றும் நற்கருணைக் கொண்டாட்டங்களில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்திருந்ததையும் இது எண்பிக்கிறது

. 23: பவுல் தன்னுடைய செய்திகளுக்கும், தான் பெற்றுக்கொண்ட செய்திகளுக்கும் வித்தியாசம் காட்டுகிறார். திருத்தூதர்களிடமிருந்தே பவுல் இந்த வரிகளைப் பெற்றிருப்பார், ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன் Εγὼ γὰρ παρέλαβον  ἀπὸ τοῦ κυρίου, ὃ καὶ παρέδωκα ὑμῖν, ( எகோ கார் பாரெலாபொன் அபொ டூ கூரியூ, ஹொ காய் பாரெதோகா ஹுமின்- நான் இதனை ஆண்டவரிடமிருந்தே பெற்றுக்கொண்டேன், அதை உங்களிடம் ஒப்படைத்தேன்) என்று அவற்றிக்கு உரமேற்றுகிறார். அதுவும் இந்; இரவை அவர், ஆண்டவர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவு என்கிறார் (νυκτὶ ᾗ παρεδίδετο நுக்டி ஹே பாரெதிதெடொ). 

. 24: ஆக ஆண்டவர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவிலேதான் யூதர்களின் பாஸ்கு விழா கொண்டாடப்பட்டிருக்கிறது என நிறுவலாம். இந்த வரியில் சில முக்கியமான வினைச் சொற்கள் பாவிக்கப்படுகின்றன. இயேசு ஆண்டவர் முதலில் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார் (εὐχαριστήσας எவுகாரிஸ்டேசாஸ்- நன்றிசெலுத்திக்கொண்டு). நன்றி செலுத்துதல் இங்கே ஒரு தொடர் வினையாக நடைபெறுகிறது. பின்னர், ஆண்டவர் அப்பத்தை உடைக்கிறார் (ἔκλασεν எக்லாசென்-உடைக்கிறார்). பின்னர் இந்த நிகழ்வின் முக்கியமான வார்த்தைகள் சொல்லப்படுகின்றன

வவ. 24-25: நினைவாகச் செய்ய சொன்னதை பவுல் மையப்படுத்துகிறார். விடுதலைப்பயண நூல், 12வது அதிகாரத்தில், முன்னைய பாஸ்காவை, ஆண்டவர் தன் நினைவாகவே செய்யச் சொன்னார், ஆனால் இங்கே அப்பத்தை தன் உடலாகவும், இரசத்தை தன் இரத்தமாகவும் மாற்றி புதிய உடன்படிக்கையை நினைவுகூற சொல்கிறார் என்று பவுல் அழகாக சொல்லுகிறார். இங்கே பவுல் ஆண்டவருடைய சொந்த வரிகளை உச்சரிக்கிறார், ஆண்டவர் இதனை அரமேயிக்கத்தில் சொல்லியிருக்க வேண்டும், அந்த வரிகள் இங்கே கிரேக்க மொழியில் பதியப்படுகின்றன (τοῦτό  μού ἐστιν τὸ σῶμα  τὸ ὑπὲρ ὑμῶν· τοῦτο ποιεῖτε εἰς τὴν ἐμὴν ἀνάμνησιν - டூடொ மூ எஸ்டின் டொ சோமா டொ ஹுபெர் ஹுமோன். டூடொ பொய்யெய்டெ எய்ஸ் டேன் எமேன் அனாம்னேசின்  'இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்': τοῦτο τὸ ποτήριον ἡ καινὴ διαθήκη ἐστὶν ἐν τῷ  ἐμῷ αἵματι· τοῦτο ποιεῖτε, ὁσάκις ἐὰν πίνητε, εἰς τὴν ἐμὴν ἀνάμνησιν டூடொ டொ பொடேரியோன் ஹே காய்னே தியாதேகே எஸ்டின் என் டோ எமோ அய்மாடி. டூடொ பொய்யெய்டெ, ஹெசாகிஸ் எயான் பினேடெ, எய்ஸ் டேன் எமேன் அனாம்னேசின் 'இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்')

. 26: இதுவே பவுலுடைய முக்கிய செய்தி, நினைவுகூரப்படும் இந்த உணவு, ஆண்டவரின் சாவை முன்னறிவிக்கிறது. ஆக ஆயத்தம் இல்லாமலும், தகுதியில்லாமலும் உண்ணப்படும் இவ்வுணவு அவரின் சாவை கொச்சைப்படுத்துகிறது எனலாம், καταγγέλλετε (காடான்கெல்லெடெ- அறிவிக்கின்றீர்கள்).  ஆண்டவருடைய சாவை அறிவித்தல், முக்கியமான நற்செய்தி அறிவிப்பாக இருந்திருக்கிறது என எடுக்கலாம்

யோவான் 13,1-15
சீடரின் காலடிகளைக் கழுவுதல்

1பாஸ்கா விழா தொடங்கவிருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள் மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார். 2இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச்செய்திருந்தது. இரவுணவு வேளையில், 3தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்தது போல் அவரிடமே திரும்பச் செல்லவேண்டும் என்பதையும் அறிந்தவராய், 4இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார். 5பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார். 6சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர், 'ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்?' என்று கேட்டார். 7இயேசு மறுமொழியாக, 'நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது பின்னரே புரிந்து கொள்வாய்' என்றார். 8பேதுரு அவரிடம், 'நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன்' என்றார். இயேசு அவரைப் பார்த்து, 'நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை' என்றார். 9அப்போது சீமோன் பேதுரு, 'அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும் அல்ல, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவும்' என்றார். 10இயேசு அவரிடம், 'குளித்துவிட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மையாகிவிடுவார். நீங்களும் 
தூய்மையாய் இருக்கிறீர்கள். ஆனாலும் அனைவரும் தூய்மையாய் இல்லை' என்றார். 11தம்மைக் காட்டிக்கொடுப்பவன் எவன் என்று அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. எனவேதான் 'உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை' என்றார். 12அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்துகொண்டு மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது: 'நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? 13நீங்கள் என்னைப் 'போதகர்' என்றும் 'ஆண்டவர்' என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். 14ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். 15நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்.

யோவான் நற்செய்தி பல அர்தங்களையும் அடையாளங்களையும் ஒருங்கே கொண்டிருப்பதால் அதனை அவதனமாக வாசிக்க வேண்டும். 13 தொடக்கம் 17வரையான அதிகாரங்கள், இயேசுவுக்கும் அவரது சீடர்களுக்கும் இடையில் நடந்த தனித்துவமான உரையாடல்களை கொண்டமைந்துள்ளன. இன்றைய வாசகத்திலே வருகின்ற பாதங்களை கழுவுகின்ற நிகழ்வு, யோவான் நற்செய்தியின் தனித்துவத்தைக் காட்டுகின்ற பகுதிகளில் மிக முக்கியமான ஒன்று என்று கருதலாம். யோவான் நற்செய்தியாளர், இயேசுவைப் பற்றி மற்றைய நற்செய்திகள் தராதவற்றை தெரிவு செய்து தருவதில் வல்லவர், இவருக்கு மாற்கு நற்செய்தி மற்றும், வேறு மூல தரவுகளை விட, இன்னும் அதிகமான தரவுகளும் பாரம்பரியங்களும் கிடைத்திருக்கிறது எனலாம்.

.1: குறிப்பிட்ட பாஸ்கா விழாவை சீடர்கள் எப்போது கொண்டாடினார்கள் என்பதை இந்த வசனத்தில் இருந்து கணிப்பது கடினம். சமநோக்கு நற்செய்தியாளர்களுக்கும், யோவானுக்கும் 
இடையில் பாஸ்கா விழாவின் நாள் மட்டில் பல வேறுபாடுகள் தோன்றுவது போல உள்ளது. யோவானுடைய கணிப்பின்படி இயேசு பாஸ்கா உணவுண்ட நாளை மற்றவர்களை விட ஒரு நாள் முன்கூட்டி கணித்தது போல தோன்றுகிறது. இதற்கான காரணம், இரண்டு வகையான கால அட்டவணைகள் பாவிக்கப்பட்டிருக்கலாம் என எடுக்கலாம். ஆனால் இந்த விடையும்  திருப்திகரமானதாக இல்லை என்றே தோன்றுகிறது. எவ்வாறு எனினும் நிசான் மாதம் 15ம் நாள் இவ்விழா கொண்டாடப்பட்டது எனலாம். யோவான் நற்செய்திப்படி இயேசு காலங்களையும் நேரங்களையும் நன்கு அறிந்திருக்கிறார். தமக்குரியோர் (τοὺς ἰδίους டூஸ் இதியூஸ்- தனக்குரியவர்கள்) என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவர்கள், சீடர்களைக் குறிக்கலாம். யோவானின் நற்செய்தியின் வேறு இடங்களில், இது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களைக் குறிக்கிறது
இயேசு தனக்குரியவர்களிடம் இறுதி வரைக்கும் அன்பு செலுத்துகிறார் (τέλος ἠγάπησεν αὐτούς டெலொஸ் ஏகாபேசென் அவ்டூஸ்). இந்த தமக்குரியோர் இவ்வுலகில் வாழ்ந்தவர்கள்தான் என்பதும் சொல்லப்படுகிறது

.2: இயேசுவை காட்டிக்கொடுக்கும் திட்டம் யூதாசுடையது என்பதையும் தாண்டி, அது அலகையுடையது என்கிறார் யோவான். யூதாசினுடைய இதயம் இப்போது கடவுளுடைய இடமல்ல, மாறாக அலகையுடையது என்கிறார் யோவான் (διαβόλου ἤδη βεβληκότος εἰς τὴν καρδίαν  ἵνα παραδοῖ αὐτὸν Ἰούδας Σίμωνος Ἰσκαριώτου தியாபொலூ ஏதே பெப்லேகொடொஸ் எய்ஸ் டேன் கார்தியான் ஹினா பாராதொய் அவுடொன் இயூதாஸ் ட்சிமோனொஸ் இஸ்காரியோடூ- சாத்தான், இதயத்துள் போட்டிருந்தான், அதாவது சீமோனின் யுதாஸ் இஸ்காரியோத்திற்கு காட்டிக்கொடுக்கும் எண்ணத்தை).

.3: மீண்டுமொருமுறை தன்னுடைய பணிகளை நன்கு அறிந்திருந்தார் இயேசு என்று கூறி, இயேசுவின் தெய்வீகத்தை மீண்டும் மீண்டும் தன்னுடைய வாசகர்களுக்கு நினைவூட்டுகிறார் யோவான். முதல் ஏற்பாட்டு கடவுளைப்போல இயேசுவே அனைத்தையும் தீர்மானிக்கிறார். தந்தை தன் கையில் அனைத்தையும் கொடுத்துள்ளார் என்பதை இயேசு அறிந்திருக்கிறார் (πάντα  ἔδωκεν αὐτῷ பான்டா எதோகென் அவுடோ-அனைத்தும் அவருக்கு கொடுக்கப்பட்டது). 
அத்தோடு அவர் தந்தையிடம் இருந்து வந்தவர், அவரிடமே திரும்பி செல்ல வேண்டும் என்பதையும் அறிந்திருக்கிறார் (ἀπὸ θεοῦ ἐξῆλθεν καὶ πρὸς τὸν θεὸν ὑπάγει, அபொ தியூ எட்செல்தென் காய் புரொஸ் டொன் தியூன் ஹுபாகெய்- கடவுளிடம் இருந்து வந்தவர், அத்தோடு கடவுளிடம் போகிறவர்). 

வவ.4-5: இங்கே சில நோக்கப்படவேண்டிய செயற்பாடுகள் நடைபெறகின்றன

. பந்தியிலிருந்து எழும்புதல் (ἐγείρεται ἐκ τοῦ δείπνου எகெய்ரெடாய் எக் டூ தெய்ப்னூ- இரவிலிருந்து எழும்புகிறார்): பணிசெய்ய ஒருவர் தன்னுடைய நிலையை விட்டு எழுந்திருக்க வேண்டும் என்பதனைக் குறிக்கலாம். உணவருந்துதல் போல இப்போது தான் செய்யப்போகும் செயலும் முக்கியம் என்பது காட்டப்படுகிறது.  

. மேலுடைகளை கழட்டி வைத்தல் (τίθησιν τὰ ἱμάτια திதேசின் டா ஹிமாடியா- உடையை எடுக்கிறார்): ஒருவர் தன்னுடைய மேன்மையை தியாகம் செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கலாம். யூதர்கள் மூன்றுபடியான உடைகளை அணிந்தனர். இங்கே இயேசு மேலுடைகளை கழற்றுகிறார். வெற்றுடம்பை காட்டுவது யூத கலாச்சாரத்திற்கு ஒவ்வாது என்பதை அறிந்திருந்த படியால் அவர் மூன்றாம் அடுக்கு உடையை மட்டுமே கழற்றியிருக்க வேண்டும் என்பது புலப்படுகிறது.  

. துண்டை இடுப்பில் கட்டுதல் (λαβὼν λέντιον διέζωσεν ἑαυτόν லாபோன் லென்டியோன் தியெட்சோசென் ஹெஅவ்டொன்- துன்டொன்றை எடுத்து தன்னைச்சுற்றி கட்டினார்): இன்னொரு குறைவான நிலைக்கு தன்னை அர்ப்பணித்ததைக் குறிக்கும்.

. பின்னர் குவளையில் தண்ணீர் எடுத்து (ὕδωρ ஹுதோர்-நீர்), சீடர்களுடைய காலடிகளைக் கழுவி (πούς பூஸ்-கால்), இடுப்பில் இருந்து துண்டால் துடைக்கிறார் (ἐκμάσσειν τῷ λεντίῳ எக்மாஸ்சென் டோ லென்டியோ-துண்டால் துடைத்தார்). காலடிகளைக் கழுவுதலும், அதனை தன்னுடைய துண்டால் துடைத்தலும், சாதராணமாக சேவகர்கள் அல்லது அடிமைகள் செய்கின்ற வேலை, அதனை ஆண்டவரே செய்கின்றமை, நல்ல ஒரு உதாரணமாக அமைகிறது. காலடிகளைக் கழுவவும், பின்னர் கால்களை துடைக்கவும், மேலுடைய இடைஞ்சலாக இருக்கும், அதனால்தான் அதனை கழற்றி வசதியான துண்டு உடுத்தப்படுகிறது. இந்த அடையாளம் வாயிலாக, மேலுடைகள் என்ற சில அமைப்புக்கள் கழற்றப்பட்டால்தான் பணிசெய்ய முடியும் என்ற செய்தியை யோவான் தனக்கே உரிய பாணியில் தருகிறார் எனலாம்

இங்கே இரண்டு செய்திகளை அவதானிக்கலாம்
). ஒருவர் பாதங்களைக் கழுவ, மற்றவரை தன்னைவிட உயர்ந்தவராக கருதவேண்டும்
). தன்னுடைய மேன்மையில் இருந்து அவர் இறங்கி வர வேண்டும்

வவ. 6-10: பேதுருவின் கேள்விகளும், ஆண்டவரின் பதிலும் புதிய ஏற்பாட்டில் பேதுருவின் நடத்தையை பற்றி தெரிந்த வாசகர்களுக்கு பெரிய வியப்பாக இருக்காது. பேதுருவின் கணிப்பின்படி, இயேசு, மெசியா மற்றும் இறைவனின் உத்தம மகன், அவர், ஒரு சாதாரண கலிலேய யூதனின் பாதங்களை கழுவுவதை சகித்துக்கொள்ள முடியாது. அதே வேளை, அனைத்தையும் அறிந்திருக்கிற இயேசு ஆண்டவர் காரணமின்றி எதையும் செய்ய மாட்டார் என்ற முன்கூட்டிய அறிவும் இப்போது இந்த பேதுருவுக்கு இல்லை
ஆண்டவரே நீரா என் பாதங்களை கழுவுவது? (κύριε, σύ μου νίπτεις τοὺς πόδας; கூரியே, சு மூ நிப்டெய்ஸ் டூஸ் பொதாஸ்? ஆண்டவரே நீர் என் பாதங்களை கழுவுவதா?) என்ற கேள்வியின் மூலம், பாதங்களை ஆண்டவர் நிலையில் இருப்பவர் கழுவுவதை யூத கலாச்சாரம் ஏற்காது என்பது அழகாகச் சொல்லப்படுகிறது
இங்கே அவரின் சாதாரண அறிவிற்கப்பாற்பட்ட அன்பு பேசுகிறது (γνώσῃ δὲ μετὰ கினோசே தெ மெடா-பின்னர் அறிவாய்). பேதுருவின் அறியாமையை நன்கு அறிந்திருந்த ஆண்டவர் தன்னுடைய கழுவுதலின் முக்கியத்துவத்தைப் பற்றி அடையாளமாக சொல்ல, பேதுரு அதனை உடல் ரீதியான கழுவுதலாக எடுத்து ழுழு உடலையையும் கழுவச் சொல்லி கேட்கிறார். கடவுளோடு கூடவே இருந்தாலும், பணியாளர்கள் தங்களை இற்றைப்படுத்தாவிட்டால், ஆண்டவரின் எண்ணங்களை செவ்வனே புரிந்து கொள்ள முடியாது என்பதற்கு பேதுரு ஒரு நல்ல உதாரணம்
இந்த உரையாடலின் மூலமாக ஒருவர் இயேசுவின் சீடனாக மாற அவருக்கு இயேசுவுடன் பங்கிருக்க வேண்டும். இந்த பங்கு இயேசுவை செயலாற்ற அனுமதிப்பதன் வாயிலாக வருகிறது
இதனால்தான் இயேசு பேதுருவை அவருடைய கால்களை கழுவ தன்னை அனுமதிக்குமாறு கேட்கிறார். பாதங்களை கழுவுதல் ஆரம்ப காலத்திலே ஒரு முழுமையான குளியலாக இருந்து பின்னர் அது ஒரு அடையாள தூய்மை சடங்காக மாறியது. இயேசுவும் அதனை ஒரு அடையாள சடங்காகவே செய்கிறார். இந்த சடங்கை செய்வதன் மூலம் அனைவரும் தூய்மை அடைய முடியாது, ஏனெனில் தூய்மை என்பது ஒருவருடைய உள்மனத்துடன் சம்மந்தப்பட்டது
இதனால்தான் யூதாசின் கால்களை இயேசு கழுவியும் அவர் தூய்மையில்லாதவராகவே தொடர்ந்தும் இருக்கிறார்.

. 11: யூதாசைப் பற்றி இயேசுவிற்கு முதலே தெரிந்திருந்தது என்று சொல்லி மீண்டுமாக இயேசு அனைத்தையும் அறிந்திருந்த ஆண்டவர் என்கிறார் யோவான் (ᾔδει γὰρ τὸν παραδιδόντα αὐτόν· ஹேதெய் கார் டொன் பாராதிதொன்டா அவ்டொன்- தன்னை காட்டிக்கொடுப்பவரை முன்னரே அறிந்திருந்தார்).


வவ. 12-15: இந்த வரிகள் இந்த பகுதியின் மிகவும் முக்கியமான செய்திகளைத் தாங்கி வருகிறது. பணியாளர்கள் தங்களின் செயற்பாடுகளின் பின்னர், தமது நிலைக்கு திரும்பி வரவேண்டும் என்கிறார் போல. ஆண்டவர் பாதங்களை கழுவியதன் பின்னர், தன்மேலாடையை அணிந்து கொண்டு மேசைக்கு திரும்புகிறார். தன்னுடைய செயலின் அடையாளத்தை அவர்கள் புரிந்துகொண்டார்களா என்பதில் அவர் கவனமாக இருக்கிறார் (γινώσκετε τί πεποίηκα ὑμῖν; கினோஸ்கெடெ டி பெபொய்ஏகா ஹுமின்- நான் செய்தது உங்களுக்கு புரிந்ததா?). 
யோவான் நற்செய்தியில் இயேசு தன்னுடைய தெய்வீகத்தை அப்படியே ஏற்று உறுதிப்படுத்துவார். இங்கே தனக்கே உரித்தான இரண்டு சொற்பதங்களை ஏற்றுக்கொள்கிறார். (ὁ διδάσκαλος καί· ὁ κύριος ஹோ திதாஸ்கலோஸ் காய் ஹோ குரியோஸ்- ஆசிரியரும் ஆண்டவரும்) தான்தான் உண்மையான ஆசிரியரும் ஆண்டவரும் என்கிறார். செய்தி என்னவெனில் இந்த ஆசிரிய-ஆண்டவரின் முன்மாதிரியையை (ὑπόδειγμα ஹுபொதெய்க்மா-உதாரணம்) தனது சீடர்கள் பின்பற்ற வேண்டும் என்பது, முதல் ஏற்பாட்டில் நானே கற்றுத்தருவேன் என்று கடவுள் எரேமியாவிற்கு சொன்னதை நினைவிற்கு கொண்டுவருகிறது (காண் எரே 31,34). இங்கே யோவான் முக்கியமான சில படிப்பினைகளை முன்வைக்கிறார்:


குருத்துவத்திற்கு வரைவிலக்ணமும் அகராதியும் கொடுத்தவர் ஆண்டவர் இயேசு!
இயேசு இல்லாத குருத்துவம், மூட நம்பிக்கையின் அடையாளம்.  
இயேசு, நற்கருணையிலே கடவுளையே பலிப்பொருளாக்கி,
 மனிதத்தின் தெய்வீகத்தை போதிக்கிறார்
பாதங்களை கழுவ விடுவதல்ல
மாறாக கழுவுவதே, குருத்தவம் என்கிறார்.

ஆண்டவரே, குருத்துவத்தின் நாளில், குருக்கள் உம்மையே பற்றிக் கொள்ள வரம் தாரும்
ஆமென்

தம்பிக்கும், அனைத்து குருத்துவ உடன் சகோதரர்களுக்கும், முக்கியமாக அக மற்றும் புற காரணிகளால் துன்புறும் குருக்களுக்கு சமர்ப்பணம்

(காப்பக அறிவிப்பு:
இந்த விளக்கவுரை 2016ம் வருடம் ஏற்கனவே இத்தாலி, றெஜியோ எமிலியாவில், 21, பங்குனி 2016 இல் எழுதப்பட்டது, இப்போது மீண்டும் தொகுக்கப்படுகிறது). இந்த விளக்கவுரைகள்
http://jegankumaromi.blogspot.it என்ற வலைப்பூ பதிவிலும், எனற் யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியத்தின் http://www.tamilcatholic.de/sundaySermon/JeganKumarFr_biblical_explanations.html என்ற வலைத்தளத்திலும்
ஏற்றப்படுகின்றன. அங்கே முன்னைய பதிவுகளை தரவிறக்கிக் கொள்ளலாம்).




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் இருபத்திமூன்றாம் ஞாயிறு (ஆ) (08.09.2024)

ஆண்டின் பொதுக்காலம் இருபத்திமூன்றாம் ஞாயிறு ( ஆ ) (08.09.2024) முதல் வாசகம் : எசாயா 35,4-7 பதிலுரைப் பாடல் : திருப்பாடல் 146 இர...