வியாழன், 25 பிப்ரவரி, 2016

தவக்காலம் மூன்றாம் வாரம் (இ), 28,02,2016: Third Sunday of Lent (C)



முதல் வாசகம்: 
வி.ப 3,1-8.13-15
1மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார். அவர் அந்த ஆட்டு மந்தையைப் பாலை நிலத்தின் மேற்றிசையாக ஓட்டிக் கொண்டு கடவுளின் மலையாகிய ஓரேபை வந்தடைந்தார். 2அப்போது ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். அவர் பார்த்தபோது முட்புதர் நெருப்பால் எரிந்து கொண்டிருந்தது. ஆனால் அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை. 3'ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை? இந்த மாபெரும் காட்சியைப் பார்ப்பதற்காக நான் அப்பக்கமாகச் செல்வேன்' என்று மோசே கூறிக்கொண்டார். 4அவ்வாறே பார்ப்பதற்காக அவர் அணுகி வருவதை ஆண்டவர் கண்டார். 'மோசே, மோசே' என்று சொல்லிக் கடவுள் முட்புதரின் நடுவிலிருந்து அவரை அழைக்க, அவர் 'இதோ நான்' என்றார். 5அவர், 'இங்கே அணுகி வராதே உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு; ஏனெனில் நீ நின்று கொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்' என்றார். 6மேலும் அவர், 'உங்கள் மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே' என்றுரைத்தார். மோசே கடவுளை உற்று நோக்க அஞ்சியதால் தம் முகத்தை மூடிக்கொண்டார். 7அப்போது ஆண்டவர் கூறியது: எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன். 8எனவே எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு — அதாவது கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் வாழும் நாட்டிற்கு — அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கிவந்துள்ளேன். 13மோசே கடவுளிடம், 'இதோ! இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, 'அவர் பெயர் என்ன?' என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்கு என்ன சொல்வேன்?' என்று கேட்டார். 14கடவுள் மோசேயை நோக்கி, 'இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே' என்றார். மேலும் அவர், 'நீ இஸ்ரயேல் மக்களிடம், 'இருக்கின்றவர் நானே' என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்' என்றார். 15கடவுள் மீண்டும் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: 'நீ இஸ்ரயேல் மக்களிடம், 'உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் — ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் — என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்' என்று சொல். இதுவே என்றென்றும் என்பெயர்; தலைமுறை தலைமுறையாக என் நினைவுச் சின்னமும் இதுவே!

முதல் ஐந்து நூல்களில் (தோரா תּוֹרָה) இரண்டாவதும் முக்கியமானதுமான இந்த நூல், விடுதலைப்பயண நூல் என்று செப்துவாயின்துவை ஒட்டி அழைக்கப்படுகிறது. செப்துவாயின்ந்தின் ἔξοδος-எக்ஸோதோஸ், என்றால் புறப்பட்டு போதல் என்று பொருள். மூல எபிரேய மொழியில் இது שְׁמוֹת ஷெமோத்- பெயர்கள் என்று அழைக்கப்படுகிறது. இதன் ஆசிரியரோ அல்லது காலமோ இலகுவில் கண்டு பிடிக்கப்பட முடியாதவை. பாரம்பரியமாக இதனை மோசே எழுதினார் எனவும், இது ஒரு முழுப்புத்தகம் எனவும் நம்பப்பட்டது. இதற்கான வாய்ப்புக்கள் மிக மிக குறைவாகவே உள்ளன. இஸ்ராயேல் மக்களுடைய விடுதலைப்பயணத்தை முன்னிட்டு இதன்காலத்தை கணிக்க சிலர் எண்னுகின்றனர். ஆனால் இஸ்ராயேல் மக்கள் எப்போது எகிப்திலிருந்து வெளியேறினர் என்பதை கணிப்பதும் மிகவும் கடினம். வி.ப நூல் எகிப்திய மன்னர்களின் பெயர்களைத் தரவில்லை. மாறாக, அவர்களை 'பாரவோன்' என்றே அழைக்கிறது. இது ஒரு பொதுப்பெயர், தமிழில் அரசன் அல்லது அரச அதிகாரம் எனக் கொள்ளலாம். கிட்டத்தட்ட கி.மு 1300களில் இஸ்ராயேலர் வெளியேறி இருக்கலாம். வி.ப நூல் இரண்டு இறையியல் வாதங்களை முன்வைக்கிறது, அ). கடவுளுடனான உறவின் தொடக்கம் ஆ). கடவுள் இஸ்ராயேலருடன் செய்து கொண்ட உடன்படிக்கை. வி.ப நூல் பல வரலாற்று பதிவுகளைக் கொண்டிருந்தாலும், இது உண்மையில் ஒரு இறையியல் புத்தகம் ஒரு விசேட தேவைக்காக எழுதப்பட்டது என்பதை விசுவாச வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். 

வ.1: ஆபிரகாமிற்கு கெத்தூராவினால் பிறந்த ஒருவரே மிதியானியரின் குலமுதுவர் என இஸ்ராயேலர் கருதுகின்றனர். பாரசீக வளைகுடாவின் வடமேற்கு திசையில் உள்ளதே இந்த நிலப்பகுதி. மோசே பாரவோனிடம் தப்பி இங்கேயே வருகிறார், இங்குதான் திருமணமும் செய்து கொள்கிறார். இத்திரோ எந்த கடவுளின் குரு என்பது தெளிவாக இல்லை, எண்ணிக்கை நூல் (10,29) இவரை இரகுவேல் என்கிறது. இவர்கள் இருவரா அல்லது ஒருவரா என்பதும் தெளிவில்லை. சிலர் கடவுளைத்தான் மோயிசனுக்கு முன்னர் மிதியானியர் வழிபட்டனர் என்கின்றனர். பெயர்கள் பலவாயினும் கடவுள் ஒருவராயிருப்பதற்கு பல வாய்புக்களை இங்கு காணலாம். ஒரேபு கடவுளின் மலை என அழைக்கப்படுகிறது, சீனாய் இதற்கு இன்னொரு பெயர். மந்தைகளை ஒட்டிக்கொண்டு மலைக்கு வருவது பின்னர் மக்களை கடவுளிடம் கொண்டுவருவதை குறிக்கலாம். 

வவ. 2-3: முதலில் தோன்றியது கடவுளின் தூதரே, இவர் நெருப்புச் சுடரில் தோன்றினாரா அல்லது நெருப்புச் சுடராகத் தோன்றினாரா என்பதில் மயக்கம் உள்ளது. இந்த முற்புதர் (סְּנֶה செனே) இஸ்ராயேலரைக் குறிக்கலாம். நெருப்பு வி.ப நூலில் கடவுளின் முக்கிய உருவகம். முட்புதர் எரிவது இஸ்ராயேலரின் துன்பத்தைக் குறிக்கலாம். தீய்ந்துபோக வில்லை என்பது மக்கள் துன்பத்தால் அழியார் என்பதைக் குறிக்கலாம். இங்கே மோசே மட்டும் இருப்பதனால் அவர் தனக்கு தானே பேசுகிறார் என எடுக்கலாம்.

வவ. 4-5: இப்போது மோசேயைக் காண்பது கடவுள், தூதர் அல்ல. முதல் ஏற்பாட்டில் பல வேளைகளில் கடவுளும் தூதர்களும் மாறி மாறி வருவதனைக் காணலாம். கடவுள் மோசேயை அழைப்பதும், மோசே இதோ என சொல்வதும் ஓர் இறைவாக்கினரின் அழைப்புப்போல தெரியலாம். கடவுளின் தூய்மை என்பதும் விப. நூலின் இன்னொரு முக்கிய செய்தி. பாதணிகளைக் கழற்றச் சொல்வது இதனையே குறிக்கிறது. பாதணிகள் அக்கால மக்கள் பாவித்த மிக விலைகுறைந்த சாதாரண அணிகலன். விவிலியத்தில் பாதணிகளைக் கழற்றுவது பல அர்த்தங்களைக் கொடுக்கும். இங்கே மரியாதையைக் காட்ட இவை கழற்றப்படுகின்றன. யோசுவாவும் இதனைச் செய்தார் (யோசுவா 5,15). காண் (ரூத் 4,6-10).

வவ. 6-8: கடவுள், தன்னை மூதாதையரின் கடவுள் எனச்சொல்லி, தனக்கு வரலாறு கட்டுப்பட்டது என்கிறார். ஆபிரகாமின், ஈசாக்கின், யாக்கோபின் கடவுள் என்பது, கடவுளுக்கான முக்கியமான சொல்லணி.  முகத்தை மறைத்தல் பலவேளைகளில் மக்கள் காட்டும் மரியாதையின் உருவகம். கடவுள் மூன்று வினைச்சொற்களை மக்களின் துன்பங்களின் பொருட்டு பாவிக்கிறார். அவை: துன்பங்களைப் பார்த்தேன், அழுகையைக் கேட்டேன், வேதனையை அறிவேன். கடவுளின் இறங்கிவருதல் இரண்டு காரணங்களைக் கொண்டுள்ளது: எகிப்தியரிடமிருந்து மீட்கவும், பாலும் தேனுமுள்ள நாட்டுக்கு அழைத்துச்செல்வதும் ஆகும். கானானை பாலும் தேனும் உள்ள நாடாக காட்டுவது, பல அர்த்தங்களைக் கொடுக்கிறன. இவை ஒரு வளமான நாட்டையோ அல்லது கடவுளுடைய தாய்மையின் குணத்தையோ காட்டலாம். இந்த மக்கட் கூட்டம் இந்நிலப்பரப்பில் இருந்தவர்களைக் குறிக்கிறது. இஸ்ராயேல் மக்களும் வந்து குடியேறியவர்கள் என்பதனையும் குறிக்கிறது. 

வவ. 13-15: மோசேயின் நியாயமான கேள்வியால், மக்களின் நம்பாத் தன்மையை, அழகாக கேள்வியாக்குகிறார் ஆசிரியர். 14வது வசனம் விவிலியத்தில் மிக மிக முக்கியமான வசனம். இங்கு கடவுள் தன்னுடைய பெயரை முதல் முதல் வெளிப்படுத்துகிறார். 'இருக்கிறவராக இருக்கிறவர் நாமே', என்பதை பலவாறு மொழிபெயர்கலாம் (אֶהְיֶה אֲשֶׁר אֶהְיֶה எஹ்யே அஷெர் எஹ்யே). வினையெச்ச சொல்லே இங்கே பாவிக்கப்படுகிறது, ஆனால் எபிரேயத்தில் வினைமுற்று, இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும் குறிக்கும். ஆக இங்கே கடவுள் காலத்தை கடந்தவர் என்பதை குறிக்கிறார். யோவான் நற்செய்தியிலும் பல வேளைகளில் இயேசு 'நானே' என்பதை கூறுவதை நினைவில் கொள்வோம். காலங்களும் நேரங்களும் மனிதனுடையவை. ஆசிரியர் காரணத்தோடே பெயர்தெரியாத பாரவோனையும் பெயர்சொன்ன கடவுளையும் விவரிக்கின்றார் என நினைக்கிறேன். கடவுளாகிய ஆண்டவர் என்பது எபிரேயத்தில் (יְהוָה אֱלֹהִים யாவே எலோகிம்) இதில் முதலாவது இறை பெயர், மரியாதையின் நிமித்தம் உச்சரிக்கப்படுவதில்லை.

ஒரேபு மலையைப் பற்றி மேலும் அறிய:


தி.பா: 103
கடவுளின் அன்பு
(தாவீதுக்கு உரியது)

1என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! 2என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! 3அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். 4அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். 5அவர் உன் வாழ்நாளை நலன்களால் நிறைவுறச் செய்கின்றார்; உன் இளமை கழுகின் இளமையெனப் புதிதாய்ப் பொலிவுறும். 6ஆண்டவரின் செயல்கள் நீதியானவை; ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர் உரிமைகளை வழங்குகின்றார். 7அவர் தம் வழிகளை மோசேக்கு வெளிப்படுத்தினார்; அவர் தம் செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார். 8ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். 9அவர் எப்பொழுதும் கடிந்து கொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர். 10அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. 11அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவுபோன்று உயர்ந்தது. 12மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதேர் அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். 13தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார். 14அவர் நமது உருவத்தை அறிவார்; நாம் தூசி என்பது அவர் நினைவிலுள்ளது. 15மனிதரின் வாழ்நாள் புல்லைப் போன்றது; வயல்வெளிப் பூவென அவர்கள் மலர்கின்றார்கள். 16அதன்மீது காற்றடித்ததும் அது இல்லாமல் போகின்றது; அது இருந்த இடமே தெரியாமல் போகின்றது. 17ஆண்டவரது பேரன்போ அவருக்கு அஞ்சுவோர்மீது என்றென்றும் இருக்கும்; அவரது நீதியோ அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள்மீதும் இருக்கும். 18அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடித்து அவரது கட்டளையின்படி நடப்பதில் கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும். 19ஆண்டவர் தமது அரியணையை விண்ணகத்தில் நிலைநிறுத்தியுள்ளார்; அவரது அரசு அனைத்தின்மீதும் பரவியுள்ளது. 20அவர்தம் சொற்கேட்டு நடக்கும் வலிமைமிக்கோரே! ஆண்டவரின் தூதர்களே! அவரைப் போற்றுங்கள். 21ஆண்டவரின் படைகளே! அவர் திருவுளப்படி நடக்கும் அவர்தம் பணியாளரே! அவரைப் போற்றுங்கள். 22ஆண்டவரின் ஆட்சித் தலத்தில் வாழும் அனைத்துப் படைப்புகளே! ஆண்டவரைப் போற்றுங்கள்! என்னுயிரே! ஆண்டவரைப் போற்றிடு!

கடவுளை அன்பான தந்தையாக காட்டும் இந்த திருப்பாடல் ஒரு வகை புகழ்ச்சிப்பாடல். பாடல் ஆசிரியர் பல வழிகளில் கடவுளின் குறையாத அன்பை சுவைத்தவராக தனது ஆன்மாவிற்கு கருத்துச் சொல்வது போல பாடுகிறார். தாவீதுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. 22 வரிகளைக்கொண்ட இப்பாடலின் 1வது வசனமும் 22வது வசனமும், ஒருவர் தன்னுயிரை கடவுளைப் போற்ற கேட்பது போல எழுதப்பட்டுள்ளது. 

வவ. 1-5: ஆண்டவரின் செயல்கள் விவரிக்கப்பட்டுள்ளன: குற்றங்களை மன்னிக்கிறார், நோய்களை குணமாக்குகிறார் (சாவுக்குரிய நோய்களை என்பது எபிரேய பாடம்), படுகுழியினின்று மீட்கிறார், பேரன்பாலும், இரக்கத்தாலும் முடிசூட்டுகிறார், நலன்களால் நிரப்புகிறார், இளமையால் பொழிவாக்குகிறார். (இங்கே ஆசிரியர் கழுகை இளமைக்கு உதாரணபடுத்துகிறார், கழுகு தனது இறக்கைகளை மாற்றுவது போல)

வவ. 6-13: ஆண்டவரின் தன்மைகள் விவரிக்கப்பட்டுள்ளன: அவர் செயல்கள் நேர்மையானவை, ஒடுக்கப்பட்டோருக்கு நீதியானவை, மோசேயும் மக்களும் அவர் வழியை கண்டனர், பரிவும் அருளும் கொண்டவர், மெதுமையான கோபமும் நிறைவான அன்பும் கொண்டவர், எப்பொழுதும் குற்றம் சுமத்தி கோபம் கொள்பவர் அல்லர், எம் குற்றப்படியும் பாவங்களின்படியும் நடத்தாதவர், வானம்போல் உயர்ந்தது அவர் அன்பு, உலகத்தின் மேற்கு கிழக்கு எல்லையைப்போல நமது மீறுதல்களை குணப்படுத்துகிறார், ஒரு தந்தையைப் போல அன்பு காட்டுகிறார். 

வவ. 14-18: கடவுளும் மனிதரும் ஒப்பிடப்பட்டுள்ளனர்: மனிதர் புல்லையும் பூவையும் போன்ற தூசியாவர், காற்றடித்தால் இருந்த இடம் தெரியாமல் போவர், ஆனால் ஆண்டவருடைய இரக்கமே என்றென்றைக்கும், அவருடைய நேர்மையோ பல தலைமுறைகளுக்கு. இவை ஆண்டவரின் கட்டளைகளை நினைந்து  கடைப்படிப்போருக்கு கிடைக்கும் என்கிறார் ஆசிரியர். 

வவ. 19-22: கடவுள் வானகத்தில் தனது அரியணையை நிறுவியுள்ளதால், வானதூதர்களையும், வீரர்களையும், பணியாளர்களையும், படைகளையும், உதவியாளர்களையும், ஆண்டவரை அவருடைய எல்லா கருமங்களிலும், இடங்களிலும் புகழக்கேட்கிறார். ஆண்டவர் கோவில்களுக்கு மேற்பட்டவர் என்பது இப்பாடலில் உள்ள ஒரு கருத்து.    

இரண்டாம் வாசகம்
1கொரிந் 10,1-6.10-12
1சகோதர சகோதரிகளே, நீங்கள் ஒன்றை அறிந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன். நம் முன்னோர் அனைவரும் மேகத்தின்கீழ் வழிநடந்தனர். அவர்கள் அனைவரும் கடலைக் கடந்து சென்றனர். 2அவர்கள் அனைவரும் மோசேயோடு இணைந்திருக்கும்படி மேகத்தாலும் கடலாலும் திருமுழுக்குப் பெற்றார்கள். 3அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிக உணவை உண்டனர். 4அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிகப் பானத்தைப் பருகினர். தங்களைப் பின்தொடர்ந்து வந்த ஆன்மிகப் பாறையிலிருந்து அவர்கள் பருகினார்கள். கிறிஸ்துவே அப்பாறை. 5அப்படியிருந்தும், அவர்களில் பெரும்பான்மையோர் கடவுளுக்கு உகந்தவராய் இருக்கவில்லை. பாலை நிலத்திலேயே அவர்கள் கொல்லப்பட்டார்கள். 6அவர்கள் தீயனவற்றில் ஆசைகொண்டு இருந்ததுபோல நாமும் இராதவாறு இவை நமக்கு ஒரு முன்னடையாளமாக நிகழ்ந்தன.10அவர்களுள் சிலர் முணுமுணுத்தனர். இதனால் அவர்கள் அழிவு விளைவிக்கும் தூதரால் அழிக்கப்பட்டனர். அவர்களைப்போல் நாமும் முணுமுணுக்கக் கூடாது. 11அவர்களுக்கு நிகழ்ந்த இவையனைத்தும் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமைகின்றன. இறுதிக்காலத்தில் வாழும் நமக்கு இவை அறிவுரையாக எழுதப்பட்டுள்ளன. 12எனவே தாம் நிலையாக நிற்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர் விழுந்து விடாதபடி பார்த்துக் கொள்ளட்டும்.

பவுல் கொரிந்தியருக்கு, நற்செய்தி அனைவருக்கும் உரியது என்பதை விளங்கப்படுத்துகிறார். இவர், ஒப்புவமை வாயிலாக விசுவாச படிப்பினைகளை தருவதில் எவ்வளவு வல்லவர் என்பதை இங்கே காணலாம். கிறிஸ்து யாரும் அறிந்திராத புதியவர் அல்ல மாறாக ஏற்கனவே நமது முன்னோர்கள் அவரை அறிந்திருந்தனர் என்பது பவுலுடைய வாதம். 

வ. 1: கிரேக்க மூலத்தில், 'நீங்கள் அறிவிலிகளாக இருக்க்கூடாது என விரும்புகிறேன்', என்கிறார் பவுல். மேகத்தையும் கடலையும் உருவகித்து, தனது வாசகர்களை விடுதலைப்பயண அனுபவத்திற்கு அழைக்கிறார். 

வவ. 2-4: 'மோசேக்குள் இருக்கும்படி திருமுழுக்கு' என்பது பவுலுடைய வித்தியாசமான கருத்து. ஒரே ஆன்மீக உணவு-பானம் என்று மன்னாவையும் தண்ணீரையும் சொல்கிறார் போல. பாலைவனத்தில் தண்ணீர் வந்த அந்த பாறை இயேசு என்கிறார். இயேசுவை உணவாகவும், பானமாகவும் மற்றும் பாறையாகவும் கண்டு பாவிக்கிறார் பவுல். 

வவ. 5-6: முன்னைய உருவகத்தை முன்வைத்ததற்கான காரணத்தை சொல்கிறார். ஆன்மீக பானத்தை பருகியபோதும் முன்னோர்கள், கடவுளுக்கு உகந்தவர்களாக இல்லாத காரணத்தினால் இறந்தார்கள். இந்த நிகழ்வு கிறிஸ்தவர்களுக்கு முன்னடையாளம் என்று மக்களை எச்சரிக்கிறார். 

இன்றைய வாசகத்தில் 7-9 வசனங்கள் விடப்பட்டுள்ளன. அவற்றில், சிலை வழிபாட்டுக்காரர்களாகவும், நெறிகெட்டவர்களாகவும், கிறிஸ்துவை சோதிக்கிறவர்களாகவும் இருக்க வேண்டாம் என்றும், இதுவேதான் முன்னோர்களின் அழிவுக்கு காரணமாக அமைந்தது என்றும் சொல்கிறார். 

வவ. 10-11: முணுமுணுத்தல் கொரிந்திய திருச்சபையின் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். அழிவு விளைவிக்கும் தூதர் என்ற சொல் இங்கு மட்டும்தான் பு.ஏ பாவிக்கப்பட்டுள்ளது. கிரேக்க மூலம் இதனை ὀλοθρευτής ஒலோத்ரெயுடெஸ், அழிப்பவன் என்று சொல்கிறது. பவுல் இதனை யாருக்கு ஒப்பிடுகிறார் என்று அறிய முடியவில்லை. சாத்தானாகவோ அல்லது கடவுளின் கட்டளையை நிறைவேற்றும் தூதனாகவோ இருக்கலாம். முன்பு நடந்தவற்றைக் கொண்டு முன்னையவர்களை தீர்ப்பிடாமல், தனது மக்கள் தாம் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்பதே பவுலின் போதனை. இதனை யூதர்களுக்கு எதிரான வாதமாக எடுக்க முடியாது. 

வ. 12: தற்பெருமை கொரிந்தியருக்கிருந்த இன்னொரு, தீர்க்கப்பட வேண்டியிருந்த சிக்கல். இங்கே மறைமுகமாக தற்பெருமையுடையவர்களை சாடுகிறார். 

நற்செய்தி
லூக் 13,1-9
1அவ்வேளையில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். 2அவர் அவர்களிடம் மறுமொழியாக, 'இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? 3அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள். 4சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? 5அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்' என்றார்.
காய்க்காத அத்திமரம். 6மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: 'ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. 7எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், 'பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?' என்றார். 8தொழிலாளர் மறுமொழியாக, 'ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன். 9அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்' என்று அவரிடம் கூறினார்.'

பொந்தியுஸ் பிலாத்து, யூதேயாவில் எப்போதும் மக்களால் வெறுக்கப்பட்ட உரோமைய அதிகாரியாகவே இருந்தான். ஃபீலோ இவனை இரண்டாம் தர படைகளின் கட்டளை அதிகாரி என்று எழுதினார். கி.பி 26-36 களில் இவன் யூதேயாவில் அதிகாரம் செலுத்தினான். லூக்கா இவனை அவ்வளவு கெட்டவனாக காட்டவில்லை, இரண்டு தடவை இவன் ஆண்டவரை விடுதலை செய்ய முயற்சித்ததை பதிவுசெய்கிறார் (23,4.7.16). லூக்காவிற்கு, கிறிஸ்துவின் உடன்-யூதர்களே அவரின் மரணத்திற்கு காரணமானவர்களாக இருந்ததனை காட்ட வேண்டிய தேவையிருந்தது. ஆண்டவரைப் பற்றிய கனவு, பிலாத்துவின் மனைவி கண்டதும் லூக்கா நற்செய்தியிலேதான். யோசேப்புஸ் பிலாத்துவை அரக்க குணம் கொண்டவனாக ஊழல் நிறைந்தவனாகவும் சித்தரிக்கிறார். பல மோதல்களையும் இரத்தங்களையும் சிந்த காரணமாக இருந்த இவன், உரோமைக்கு அழைக்கப்பட்டு பின்னர் பதிவியிழந்தான் என்று ஒரு வரலாறு சொல்கிறது. லூக்காவிற்கு இவனைவிட பல பாவிகள் எருசலேமில் இருந்தனர் என்பது ஒரு வாதம். 

வவ. 1-2: பிலாத்து கலிலேயரைக் கொலைசெய்த நிகழ்வு நற்செய்தியைவிட வேறு எங்கும் பதிவு செய்யப்படவில்லை. இங்கே இந்த 'சிலர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளவர், இரண்டு நபர்களை குற்றம் சுமத்துகின்றனர், ஒன்று கலிலேயர் மற்றது பிலாத்து. இந்த சந்தர்பத்தை பாவித்து இயேசு அவர்களிடம் முக்கியமான கேள்வியொன்றை கேட்கிறார். 

வவ. 3-5: அப்பாவிகளின் மரணம் அவர்களை பாவிகளாக்காது. இதனை நாம் சுனாமியிலும், பல ஈழப் போர்களிலும் அனுபவித்திருக்கிறோம். இதை எழுதும் போதும்கூட பல அப்பாவிகள் கொலை செய்யப்பட்டுக்  கொண்டிருக்கிறார்கள். பாவம் மரணத்திற்கு காரணம் என்று விவிலியத்தில் சில இடங்களில் காணலாம். (காண் யோபு 4,7: யோவான் 9,2). கடவுளே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார் என்றால், இந்த மரணத்தையும் அவரே தீர்மானிக்கிறார் என்பது இவர்களின் வாதம். இயேசு இங்கே அப்பாவிகள் பாவிகள் இல்லை என்பதை தெளிவு படுத்துகிறார், ஆனால் அவர்களின் மரணத்தின் மர்மத்தையல்ல. சீலோவாம் கோபுரம் விழுந்து பதினெட்டு போரைக் கொன்ற நிகழ்வு சீலோவாம் குளத்தின் தெற்கு பகுதியில் நடந்திருக்கலாம். இக்குளம் எருசலேமின் தெற்கு பகுதியில் இருக்கிறது. மனமாறாவிட்டால் அனைவரும் அழிவர் என்பதே இங்கே நோக்கப்பட வேண்டிய செய்தி. தீயவர்களின் வாழ்வதற்கான வாய்ப்பு அவர்களை நீதிபதிகளாக்காது. அப்பாவிகளின் துன்பத்திற்கு இன்றுவரை சரியான விடையை இயேசுவாலன்றி, எவராலும் தர முடியவில்லை.

வ. 6: இந்த பழம்கொடாத மலட்டு மரங்களைப் பற்றிய கதைகள் அக்காலத்தில் புழக்கத்தில் இருந்தன. இயேசு இதனை சொல்கின்ற போது மக்களுக்கு இவற்றைப் பற்றிய தெளிவு எற்கனவே இருந்திருக்க வேண்டும். அக்கால கதைகளில் அந்த மரங்களின் தலைவர்கள் மரத்தை வெட்ட வரும்போது மரம் இன்னொரு முறை தவனை கேட்கும், ஆனால் தவணை கொடுக்கப்படாது. 

வ. 7: இங்கேயும் அதே பிரச்சனையைத்தான் லூக்கா பதிவு செய்கிறார். ஆனால் இங்கே தலைவர் பேசுவது மரத்தோடு அல்ல, தோட்ட தொழிலாளியோடு. 

வ. 8-9: தொழிலாளி மரத்திற்காக இரைஞ்சுவது, லூக்கா நற்செய்தியின் இரக்க பண்பினை தெளிவு படுத்துகிறது. ஆனால் ஒரு வருடமே இங்கே தவணையாக கொடுக்கப்படுகிறது. இது விவிலிய எண்கணக்கில் மிகவும் குறுகிய காலம். இதன் மூலமாக லூக்கா அழிவினை, மனமாறாவிட்டால் தடுக்க முடியாது என்கிறார். 

கிறிஸ்தவ விளக்கவுரையாளர்கள் இந்த அத்தி மரத்தை, இஸ்ராயேல் அல்லது யூத மக்களாகவும், தலைவராக கடவுளையும், தோட்டக்காரராக இயேசுவையும் கண்டனர். இது இப்படியிருக்கவேண்டிய தேவையில்லை என நினைக்கிறேன். முதல் ஏற்பாட்டில் பல வேளைகளில் அத்தி மரமும் திராட்சை தோட்டமும் இஸ்ராயேல் மக்களை குறித்தது உண்மைதான். இந்த மரம் கிறிஸ்தவர்களையோ அல்லது வாய்ப்பு கிடைத்தும் அதனை பாவிக்காத அறிவுள்ள எந்த மனிதரையும் குறிக்கலாம். இந்த கதை உருவகக் கதையாக பார்க்கப்படாமல் (allegorie), உவமையாக பார்க்ப்பட்டால், லூக்கா சொல்லிய மரம் நம்மையும் குறிப்பதை தியானிக்கலாம். கனி என்று லூக்கா குறிப்பிடுவது (καρπός கார்போஸ்), பல அர்தங்களைத் தரவல்லது: மரத்தின் கனி, ஒரு செயலில் விளைவு, கிறிஸ்தவ அன்பு, இறையரசை அடைய தேவையான வேலை, நீதியான வாழ்வு, என்றும் பொருள் படும். 

யார் அந்த மரம்? என்று என்று அயலவரை பார்க்காமல், நம்மை அந்த மரமாக பார்த்து தியானிக்க, 
இன்னொரு வருடம் இரக்கம் கேட்டு வளருவோம்! 

ஆண்டவரே தூய்மையான காலணிகளை, அசுத்தமென களைந்துவிட்டு, அசுத்தமான இதயங்களோடு உம்மை தரிசிக்க பழகியிருக்கும் எமக்கு, நல்ல அறிவைத்தாரும் இன்னொரு வருடம் தவணை தந்து உமது உரத்தை உள்வாங்க பக்குவத்ததையும் தாரும். ஆமென்

மி. ஜெகன்குமார்அமதி, 
வியாழன், 25, 2016

வியாழன், 18 பிப்ரவரி, 2016

தவக்காலம் இரண்டாம் வாரம் (இ) 21,02,2016

Lenten Season, Second Sunday, C, 21,02,2016



தொ.நூ 15,5-12.17-18: 
5அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, 'வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்' என்றார். 6ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார். 7ஆண்டவர் ஆபிராமிடம், 'இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே' என்றார். 8அதற்கு ஆபிராம், 'என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்து கொள்வேன்?' என்றார். 9ஆண்டவர் ஆபிராமிடம், 'மூன்று வயதுள்ள இளம் பசு, மூன்று வயதுள்ள வெள்ளாடு, மூன்று வயதுள்ள செம்மறியாடு, ஒரு காட்டுப்புறா, ஒரு மாடப்புறா ஆகியவற்றை என்னிடம் கொண்டுவா' என்றார். 10ஆபிராம் இவற்றை எல்லாம் அவரிடம் கொண்டுவந்து, அவைகளை இரண்டிரண்டு கூறுகளாக வெட்டி, ஒவ்வொரு பகுதியையும் அததற்கு இணையான பகுதிக்கு எதிரெதிரே வைத்தார். ஆனால் பறவைகளை அவர் வெட்டவில்லை. 11துண்டித்த உடல்களைப் பறவைகள் தின்ன வந்தபொழுது ஆபிராம் அவற்றை விரட்டிவிட்டார். 12கதிரவன் மறையும் நேரத்தில் ஆபிராமுக்கு ஆழ்ந்த உறக்கம் வந்தது. அச்சுறுத்தும் காரிருள் அவரைச் சூழ்ந்தது. 17கதிரவன் மறைந்ததும் இருள்படர்ந்தது. அப்பொழுது புகைந்து கொண்டிருந்த தீச்சட்டி ஒன்றும் எரிந்து கொண்டிருந்த தீப்பந்தம் ஒன்றும் அந்தக் கூறுகளுக்கிடையே சென்றன. 18அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, 'எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ள 19 கேனியர், கெனிசியர், கத்மோனியர், 20இத்தியர், பெரிசியர், இரபாவியர் 21எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் ஆகியோர் வாழும் இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்' என்றார்.

இந்தப் பகுதி கடவுள் ஆபிரகாமுடன் (அவரின் பெயர் இன்னும் மாற்றப்படவில்லை) செய்த உடன்படிக்கையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிக்கு சற்று முன்னர் ஆபிரகாம் கீழைத்தேய அரசர்களை லோத்துவின் பொருட்டு தோற்கடித்திருந்தார். அத்தோடு விவிலியத்தில் கிறிஸ்துவுக்கு முன்அடையாளமாக கருதப்பட்டு பல கேள்விகளை இன்னும் எழுப்பிக்கொண்டிருக்கும் சாலமின் அரசர் மெல்கிசதேக்கின் ஆசீரையும் பெற்றிருந்தார், இருந்தும் தனக்கு வாரிசில்லாத துன்பம் அவரை வாட்டிக்கொண்டிருந்தது. இப்படியான வேளையில்தான் உண்மையான ஆசீர் கடவுளிடம் இருந்து வருகிறது. இந்தப்பகுதியிலே விவிலிய ஆசிரியர், ஆபிரகாமின் விசுவாசத்தையே மையக்கருத்தாக காட்டுகிறார். இதனை பல வேளைகளில் பவுல் தனது கடிதங்களில் கோடிடுவார். ஆண்டவர் இயேசுவும் ஆபிரகாமின் விசுவாசத்தை பாராட்டுவார். இங்கே பல பாரம்பரியங்கள் (யாவே மற்றும் எலோயிஸ்து) ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளதாக சில அறிஞர்கள் கருதுகின்றனர். ஆழமாக வாசித்தால் சில வித்தியாசங்களைக் காணலாம். வ5 இரவுக் காட்சியை காட்டுகிறது, வவ12,17 மாலைக் காட்சிகளைக் காட்டுகின்றன. வ6 ஆபிரகாமின் விசுவாசத்தை காட்டுகிறது, வ7 கடவுளின் பெயரை மீண்டும் நினைவூட்டுகிறது, எற்கனவே வ2ல் ஆபிரகாம் கடவுளின் பெயரைத் தெரிந்திருக்கிறார். இங்கே சில பகுதிகள் 1-6, 13-16 எதிர்கால சந்ததியை பற்றி கூறும் வேளை, 17-21 உடன்படிக்கை சடங்குகளைப் பற்றி கூறுகிறது. 

வ5: ஆபிரகாமின் இறைவாக்கினர்-தன்மை காட்டப்படுகிறது. ஒர் இறைவாக்கினரைப் போல ஆபிரகாம் வெளியே அழைக்கப்படுகிறார். விண்மீன்கள், அளவிட முடியா எண்ணிக்கையையும் என்றும் அசையாத உறுதியையும் குறிக்கின்றன.

வ.6: அதிகமாக புதிய ஏற்பாட்டில் பாவிக்கப்படுவது. (காண் உரோ 4,3.20-24: கலா 3,6: யாக் 2,23), இதுவே இந்த பகுதியின் மையக்கருத்தாக இருந்திருக்க வேண்டும். நீதியாக கருதுதல், ஒரு குருத்துவ மொழி. ஒருவரின் காணிக்கை இவ்வாறே ஏற்றுக்கொள்ளப்பட்டது. இங்கே ஆபிரகாமின் நம்பிக்கையே அவருடைய காணிக்கையாக கடவுளால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. (צְדָקָה ட்செதெக்காஹ் - நீதியாக)

வவ. 7-8: இந்த வரிகள் கடவுளுக்கும் ஆபிரகாமிற்கும் இடையிலான உடன்படிக்கை உரையாடல். ஆபிரகாமின் கேள்விக்கு பின்னால் தன்னுடைய வாரிசைப்பற்றிய கவலை தெரிகிறது. இந்த உரையாடல் ஆபிரகாமிற்கு மட்டுமல்ல பல வேளைகளில் தங்களது எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்ட போது, இஸ்ராயேல் மக்களுக்கு நம்பிக்கை தருவாத அமைந்தது. இன்று நமக்கும் சரியாக பொருந்தும். 

வவ.9-11: மிகவும் ஆச்சரியத்திற்குரிய பகுதி. இது மெசப்தேமியாவில் இருந்த உடன்படிக்கை சடங்குகளை ஒத்திருக்கிறது. மூன்று வயதுள்ள பசு, செம்மறி, வெள்ளாடு போன்றவை நிறைவான பலிகளைக் குறிக்கலாம். மிருகங்களை வெட்டியவர் புறாக்களை வெட்டவில்லை ஏன் என்று இன்றுவரை சரியாகத் தெரியாது. தின்ன வந்த பறவைகளை சில ஆய்வாளர்கள் எகிப்திய அடிமைத்தனமாகவும், வெட்டப்பட்ட மிருகங்களை, எகிப்தில் பலியான இஸ்ராயேலரை குறிப்பதாகவும் காண்கின்றனர். 

வவ.12,17: அந்தி, உறக்கம், காரிருள், படர்ந்த இருள், புகை மற்றும் தீப்பந்தம் என்பவை கடவுளை குறிக்கவும், அவருடைய வெளிப்பாட்டை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டு;ள்ளன. சிலர் இதனை எகிப்திலிருந்து மக்களை மீட்டதற்கான முன் அடையாளமாகவும் காண்கின்றனர். 

வவ. 18-20: இந்த மக்கள் கூட்டம் அக்காலத்தில் இந்த பகுதியிலே வாழ்ந்தவர்களை குறிக்கிறது. எகிப்தின் ஆறு என்பது நைல் நதியைக் குறிக்காது. இந்த பகுதிகள் உண்மையில் சாலமோனின் காலத்தில் மட்டும்தான் இஸ்ராயேலரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த பத்து வகையான மக்கள் கூட்டம் இந்த இடத்தில் மட்டுமே தனித்துவமாக உள்ளது. இங்கு நோக்கப்பட வேண்டியது, அனைத்து நிலங்களும் கடவுளுடையவை, அவர் தான் விரும்பியவர்களுக்கு கொடுக்கிறார். யாரும் இந்த பூமியை பரம்பரை சொத்தாக கொள்ள முடியாது. சிலர் தங்களைத் தவிர மற்றவரை வெளிநாட்டவர், வந்தேரிகள் என்று கூறுவது வேடிக்கையானது. 

பதிலுரைப்பாடல் 
தி.பா 27
ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? என்று தொடங்கும் இந்த 27வது திருப்பாடல், 14 வரிகளைக் கொண்டுள்ளது. ஒரே பாடல் போல தோன்றினாலும், உற்று நோக்கின் இரண்டு பகுதிகளைக் காணலாம். 1-6: நம்பிக்கைப்பாடல் 7-14 புலம்பல் பாடல். முதலாவது வாசகத்தைப் போல் இங்கும் நம்பிக்கை என்னும் சிந்தனை மையமாக வருவதை அவதானிக்கலாம் (இது சில ஆய்வாளர்களின் கருத்து மட்டும்) இந்த திருப்பாடலை நான்கு பகுதிகாளாக பிரித்து நோக்குவோம்:

அ. 1-3: ஆண்டவரே ஒளியாகவும், மீட்பாகவும் அடைக்கலமுமாகவும் இருப்பதானால் அஞ்சவும் நடுங்கவும் வேண்டாம் என்று கேள்வியாக விடையைச் சொல்கிறார் ஆசிரியர். ஒளி (אוֹרִ ஓர்), மீட்பு (יֵשַׁע யேஷா), அடைக்கலம் (מָעוֹז மாஓட்ஸ்) போன்றவை கடவுளை குறிக்கும் காரணச் செற்கள். இந்த சொற்களுக்கு பின்னால் இருக்கும் ஆசிரியரின் நம்பிக்கையை தியானிக்க வேண்டும். 

ஆ. 4-6: இங்கே எருசலேம் ஆலயம், மையப் படுத்தப்படுகிறது. இல்லம், கோவில், கூடாரம் மற்றும் குன்று, எருசலேம் ஆலயத்தை குறிக்கும் ஒத்த கருத்துச் சொற்கள். ஆண்டவரின் அழகை காணவேண்டும் என்பது அவரது பிரசன்னத்தை காணவேண்டும் என்பதைக் குறிக்கும். அழகு என்பதற்கு அருள் மற்றும் இனிமையைக் குறிக்கும் சொல் பாவிக்கப்பட்டுள்ளது (נֹעַם நோஆம், இனிமை) 

இ. 7-10: இங்கே ஆசிரியரின் வேண்டுதல்கள் வியங்கோல் வாக்கியத்தில் ஆரம்பிக்கின்றது. கேட்டருளும், இரக்கம்கொள்ளும், பதிலளியும், மறைக்காதேயும், விலக்கிவிடாதேயும், தள்ளிவிடாதேயும், கைவிடாதிரும், என்ற வியங்கோள் வார்தைகள் ஆசிரியரின் ஏக்கத்தை காட்டுகிறன்றன. ஆனால் 10வது வசனத்தில் நம்பிக்கையோடு முடிக்கிறார். 

ஈ. 11-14: மீண்டும் ஏவல் வார்தைகளை மையமாக கொண்டுள்ளது. துன்பத்தில் இருந்தாலும் ஆண்டவரின் வழியைக் கற்பியும் என்று ஆசிரியர் பாடுவது அவருடைய நம்பிக்கைக்கு சிறந்த உதாரணம். 13வது வசனம் வாழ்வோரின் நாடு என்று கூறுவது இந்த உலகத்தையே முதலில் குறிக்கும் (אֶרֶץ חַיִּים). ஆண்டவருடைய ஆசிர்வாதங்கள் இந்த உலகத்திற்கும் உரியவையே. ஆண்டவருக்காக காத்திரு திடம்கொள் என்று ஆசிரியர் பாடுவது அழவரது ஆன்மாவிற்கல்ல கடவுளின் பிள்ளைகளாகிய நம் ஒவ்வொருவருக்கும். வ.14. நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு மன உறுதிகொள்;, உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு.

இரண்டாம் வாசகம்
பிலி 3,17-4,1: 
17சகோதர சகோதரிகளே, நீங்கள் அனைவரும் என்னைப்போல் வாழுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய முன்மாதிரியின்படி வாழ்பவர்களைப் பின்பற்றுங்கள். 18கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர் பலர் உள்ளனர். அவர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் உங்களிடம் கூறியுள்ளேன். இப்பொழுதும் கண்ணீரோடு சொல்கிறேன். 19அழிவே அவர்கள் முடிவு; வயிறே அவர்கள் தெய்வம்; மானக்கேடே அவர்கள் பெருமை; அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே. 20நமக்கோ விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம். 21அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணியவைக்கவும் வல்லவர். 1ஆகவே என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, என் வாஞ்சைக்குரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி; நீங்களே, என் வெற்றி வாகை அன்பர்களே, ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள்.

பிலிப்பி நகரம் பல வகைகளில் உரோமையருக்கும் கிரேக்கருக்கும் மிக முக்கியமான நகரம். வெளியிலிருந்த சின்ன உரோமை என இதனை அழைத்தனர் (சில்லாலையை சின்ன உரோமை என அழைப்பது போல) காண்: தி.ப 16,12. உரோமையர் அனுபவித்த பல சுகபோகங்களை இந்நகரும் அனுபவித்தது. அலெக்ஸான்டரின் தந்தை பிலிப்புவின் பெயரைத்தான் இந்நகர் கொண்டிருந்தது. உரோமையர்களின் பல போர்களை இந்நகர் சந்தித்திருந்தது. இதுதான் திருத்தூதர் பவுலின் முதலாவது ஐரோப்பிய மறைத்தலம். இங்கு அவர் சீலாவோடும் திமோத்தேயுவோடும் பணியாற்றினார். இங்கே தான் லிதியா என்ற பெண் பவுலுக்கு பல உதவிகளைச் செய்தார். இங்கே பவுல் சிறைபடுத்தப்பட்டாலும், அவர் நிறுவிய தலத்திருச்சபை என்றும் அவருக்கு பிரமாணிக்கமாய் இருந்தது. பவுலுடைய திருச்சபைகளில் அவருக்கு பிடித்த தலத்திருச்சபையாக இதனைக் கொள்ளலாம். பிலிப்பியருக்கான திருமுகம் அவர் செசாரியாவில் சிறையில் இருந்தபோது எழுதினார் என பலர் கருதுகின்றனர். இன்றைய இரண்டாம் வாசகம் விண்ணக குடியுரிமையைப் பற்றி விவரிக்கின்றது. பவுல் உலக வாழ்க்கை தீயது என்று சொல்லவில்லை மாறாக உலக வாழ்வை அர்த்தமுள்ளதாகக் கேட்கிறார். 

வ.17. இந்த வசனத்தை, 'என்னுடைய முன்மாதிரிகையை பின்பற்றுகிறவர்களாய் இருங்கள்' என்றுதான் அர்த்தப்படுத்த வேண்டும். இங்கே எழுவாய் பொருள் பவுல் அல்ல இயேசு ஆண்டவர். இரண்டாவது பகுதியில் உதாரண நடத்தைக்கு தன்னோடு இருந்தவர்களையும் பவுல் உள்வாங்குகிறார். 

வ.18. கிறிஸ்துவின் சிலுவைக்கு எதிரானவர்கள் என்று பவுல் குறிப்பிடுவது, கிளர்ச்சி அல்லது பிரிவினை செய்பவர்களாக இருக்கலாம். இவர்கள் யூதர்கள், கிரேக்க-உரோமையர்கள் அல்லது கிறிஸ்தவர்களாக கூட இருக்கலாம். கண்ணீரோடு சொல்லுதல், அக்கால பவுலின் மன ரீதியான வேதனைகளைக் காட்டுகிறது. ஒருவேளை பவுல், இயேசு தன் மக்களை நினைத்து அழுததை பின்பற்றுகிறார் எனச் சொல்லலாம். 

வ.19. இவர்களின் செயல்களை விவரிக்கின்றார்: இதிலிருந்து எதோ உணவுச் சடங்குடன் சம்பந்தப்பட்டவர்களை பவுல் சாடுவதைப் போல தெரிகிறது. பிலிப்பு நகரில் இப்படியான பல சடங்குகள் அக்காலத்தில் பாவனையிலிருந்தன. சில யூத கிறிஸ்தவர்களும், திருமுழுக்கு பெற்றவர்கள் யூதச் சடங்குகளை பின்பற்ற வேண்டும் என்று குழப்பம் செய்தனர். 

வ.20-21: சடங்குகளுக்காக மகிழ்வாக இருப்பவர்களுக்கு எதிர் மக்களாக கிறிஸ்தவர்கள் விண்ணகத்தை தாய் நாடாக அமைக்கக் கேட்கிறார். தாய் நாடு என்ற கருத்துக்கு கிரேக்க மூல மொழியில் குடியுரிமை அல்லது பொநுநலவாயம் என்ற சொல்லே பாவிக்கப்பட்டுள்ளது (πολίτευμα). இந்தச் சொல்லின் ஊடாக பல கடமைகளையும் பல உரிமைகளையும் சொல்லுகிறார். மீட்பர் என்ற சொல்லை பவுல் இயேசுவிற்கு மிக அரிதாகவே பாவிப்பார் (σωτήρ சோதேர் மீட்பர்), இச் சொல் சீசருக்கு பாவிக்கப்பட்டது. சில தேவைகளுக்காக பவுல், இச்சொல்லை பாவித்து சீசரை அல்லது மனித தலைவர்களை விட உன்னதமானவர் என்கிறார். அழியக்கூடிய உடலை மீட்கக்கூடியவர் இயேசு ஒருவரே என்பது பவுலுடைய வாதம்.

வ.1: இந்த வசனம் பவுல் பிலிப்பிய திருச்சபையை எவ்வளவு அன்பு செய்தார் எனக் காட்டுகிறது. பவுல் பாவிக்கும் அன்பு சொற்கள்: என் சகோதர சகோதரிகளே, அன்பிற்குரியவர்களே, விரும்பப்பட்டவர்களே, எனது மகிழ்சியானவர்களே, என் முடியானவர்களே. மகிழ்ச்சி (χαρά காரா) என்பதுதான் பிலிப்பியர் கடிதத்தின் முக்கியமான செய்தி. பவுல் பிலிப்பியர்களை தனது முடி, வாகை (στέφανος ஸ்டெஃபானோஸ்) எனச் சொல்லி தன்னை ஒரு மெய்வல்லுனராக காட்டுகிறார். விசுவாச வாழ்வு ஒரு ஓட்டப் போட்டி என்பதும் பவுலுடைய ஒரு உதாரணம். ஆண்டவரின் அன்பில் நிலைத்திருங்கள் என்பதே பவுலுடைய பிலிப்பியருக்கான காதல் செய்தி. 

நற்செய்தி
லூக் 9,28-36
28இவற்றையெல்லாம் சொல்லி ஏறக்குறைய எட்டுநாள்கள் ஆனபிறகு இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார். 29அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது. 30மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக் கொண்டிருந்தனர். 31மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
32பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள். 33அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, 'ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்' என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார்.
34இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைக் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள். 35அந்த மேகத்தினின்று, 'இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்' என்று ஒரு குரல் ஒலித்தது. 36அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.

இந்த பகுதி லூக்கா நற்செய்தியின் ஆழத்திற்கு இன்னொரு உதாரணம். 4-8 அதிகாரங்களில் பல போதனைகள் புதுமைகளை செய்த ஆண்டவர் தன்னுடைய எருசலேம் பயணத்திற்கு ஆயத்தம் செய்கிறார். லூக்கா இங்கே பதிவு செய்யும் ஆண்டவருடைய திரு உருமாற்றக் காட்சி, முதலாம் வாசகத்திலே ஆண்டவர் ஆபிரகாமுக்கு காட்சி கொடுத்ததை பல வழிகளில் ஒத்திருக்கிறது. அத்தோடு முதல் ஏற்பாட்டில் சீனாய் மற்றும் ஒரேபு மலைகளில் ஆண்டவர் மோசே எலியாவுக்கு காட்சிகளை கொடுத்ததையும் நினைவூட்டுகின்றது. லூக்கா, மாற்கு நற்செய்தியில் இருந்து முக்கியமான மூலங்களைப் பெற்றார் எனினும் இன்னும் பல ஆதாரங்களை இங்கே சேர்கிறார். ஒப்பிட்டு பார்க்க (மத் 17,1-9: மாற் 9,2-10, லூக் 9,28-36). லூக்காவினுடைய இந்த பதிவு, இயேசுவின் கிறிஸ்தியலிலும், மெசியா-நிலையிலும் மிக முக்கியமான படிப்பினைகளைக் தருகிறது. இதனை ஆறு பகுதிகளாக பிரித்து அவதானிப்போம். 

௧. இயேசு மலைக்குச் செல்லுதல், வ.28: 
லூக்கா எட்டு நாட்கள் என்று இன்னொரு வடிவத்ததை பதிவு செய்கிறார். அத்தோடு மற்றைய நற்செய்திகளை விட சீடர்களின் பெயர்களின் வரிசையிலும் மாற்றம் செய்கிறார். இயேசு செபிப்பதற்கே மலைமீது ஏறினார் என்று சொல்லி இன்னொரு செய்தியையும் இங்கே சேர்க்கிறார். இந்த மலையினுடைய இட அமைவு சரியாக சொல்லப்படவில்லை. சிலர் எர்மோன் எனவும், சிலர் தார்போர் எனவும் எண்ணுகின்றனர். இந்த மலை  அனுபவம், மோசே எலியாவின் சீனாய், ஒரேபு மலை  அனுபவங்களை ஒத்திருக்கிறது. 

௨. திரு உருமாற்றம், வ.29:
முக மாற்றம், உடைகளின் வெண்மை இயேசுவை கடவுளாக காட்ட பயன்படலாம். மோசே சீனாய் மலையில் கடவுளைக் திரிசித்த போது அவரின் முகம் மின்னியது. ஆண்டவரின் விண்ணேற்றத்தின் பின் தோன்றிய இரண்டு மனிதர்கள் வெண் ஆடைகளிலேயே இருந்தனர் (தி.ப 1,10). 

௩. மோசே எலியாவின் தோற்றங்கள், வவ.30-33அ:
இந்த இரண்டு தலைவர்களின் தோற்றம் பல எண்ணங்களை முன்வைக்கிறது. சிலர் மோசே-சட்டம், எலியா-இறைவாக்கு இயேசுவில் நிறைவடைவதாக இதனை காண்பர். இதற்கு அதிகமான வாய்ப்புக்கள் உள்ளது. பல வேளைகளில் இது லூக்காவின் நோக்கமாக இருக்கிறது. இவர்கள் இயேசுவின் இறப்பைப் பற்றி பேசுகிறார்கள். கிரேக்க மூலம் விடுதலைப் பயணத்தைப் பற்றி பேசினார்கள் (ἔξοδος எட்ஸோடொஸ்) என்கிறது. லூக்கா ஆண்டவரின் மரணத்தை உண்மையான விடுதலைப் பயணமாக காண்கிறார் போலும். அதே. சீடர்கள் தூக்க மயக்கமாய் இருக்கிறார்கள் ஆனால் மூவரையும் காண்கின்றனர். ஆபிரகாமும் தூக்க மயக்கத்தில் இருந்தது நினைவுக்கு வருகிறது. பல முக்கியமான வேளைகளில் இவர்கள் தூக்க முகமாகவே இருக்கின்றனர். (லூக் 22,46)

௪. பேதுருவின் பதில், வ.33ஆ:
பேதுருவின் கூடாரம் அமைக்கும் ஆலோசனை, பாலைவன சந்திப்புக் கூடாரத்தை 
நினைவூட்டலாம். கிரேக்க மூலத்தில் அவர் ஆண்டவரை (κύριος கூரியோஸ்), தலைவரே (ἐπιστάτης எபிஸ்டாடேஸ்) என்று அழைக்கிறார். இன்னும் மயக்கத்தில்தான் இருக்கிறார் போல.

௫. மேகத்திலிருந்து குரல், வவ.34-35:
மேகம் கடவுளின் இருப்பை காட்டும் மிக முக்கியமான உருவகம். விடுதலைப் பயணத்திலும், தானியேல் நூலிலும் இதனை நன்கு அவதானிக்கலாம். திரு முழுக்கின் போது கேட்டதனைப்போல இன்னொரு குரல் இயேசுவை கடவுளின் அன்பு மகனாக விளக்கம் கொடுக்கிறது. லூக்கா எசாயா 42,1ஐ நினைவூட்டுகிறார். இயேசு தெரிவு செய்யப்பட்ட மகனாகக் மோசேயையும் எலியாவையும் பின்னுக்கு தள்ளுகிறார்.  
௬. சீடர்களின் செயல், வவ.36: மாற்கு நற்செய்தியை போலல்லாது, இங்கே இன்னொரு விதமான அமைதி காக்கிறார்கள். ஆண்டவரின் உயிர்ப்புக்குப்பின் பின்னர் நிறைவாக அறிக்கையிடுவார்கள். 

ஆண்டவரே! இயேசுவே! இரக்கமில்லாத சட்டங்களையும், 
இறை இல்லாத இறைவாக்குகளையும் விடுத்து, 
உம்மை பற்றிக்கொள்ள வரம் தாரும். ஆமென்.

மி. ஜெகன் குமார் அமதி
உரோமை
செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

வியாழன், 11 பிப்ரவரி, 2016

First Week of Lent, 2016: தவக்காலம் முதல் வாரம்: 14,02,2016

 தவக்காலம் முதல் வாரம்: 14,02,2016


முதல் வாசகம்
இ.ச 26,4-10
4அப்போது, குரு அந்தக் கூடையை உன் கையிலிருந்து எடுத்து, அதை உன் கடவுளாகிய ஆண்டவரது பலிபீடத்தின்முன் வைப்பார். 5நீ உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அறிக்கையிட்டுக் கூறவேண்டியது: 'நிரந்தரக் குடியற்ற அரமேயரான என் தந்தை எகிப்து நாட்டுக்கு இறங்கிச் சென்றார். அங்கு மக்கள் சிலருடன் அன்னியராய் இருந்தார். ஆனால் அங்கேயே பெரிய, வலிமைமிகு, திரளான மக்களினத்தைக் கொண்டவர் ஆனார். 6எகிப்தியர் எங்களை ஒடுக்கினர்; துன்புறுத்தினர்; கடினமான அடிமை வேலைகளை எங்கள்மீது சுமத்தினர். 7அப்போது நாங்கள் எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பினோம். ஆண்டவர் எங்கள் குரலைக் கேட்டார். எங்களுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அவதியையும் கண்டார். 8தம் வலிய கரத்தாலும், ஓங்கிய புயத்தாலும், அஞ்சத்தக்க பேராற்றலாலும், அடையாளங்களாலும், அருஞ்செயல்களாலும் ஆண்டவர் எங்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்தார். 9அவர் எங்களை இந்த இடத்திற்குக் கூட்டிவந்தார். பாலும் தேனும் வழிந்தோடும் இந்த நாட்டை எங்களுக்குத் தந்தார். 10எனவே ஆண்டவரே, இதோ, நீர் எனக்குக் கொடுத்த நிலத்தின் முதற்பலனைக் கொண்டு வந்துள்ளேன்' என்று சொல்லி, அதை உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் வைத்து, அவரைப் பணிந்து தொழுவாய்.

இணைச்சட்ட நூல், தோராவினுடைய இறுதி நூலாகும். 'இணைச்சட்ட வரலாற்றை' தொடங்கி அதனை யோசுவா, நீதிபதிகள், சாமுவேல், அரசர்கள் நூல்கள் வரை இது கொண்டு செல்கிறது. இந்ந நூல் இஸ்ராயேல் மக்களுடைய நம்பிக்கை வரலாற்றில் மிக முக்கியமானது. இறந்த காலத்தில் நடந்தவற்றை விவரிப்பது போல், உண்மையில் இஸ்ராயேல் பிள்ளைகளுக்கும் நமக்கும், இது எதிர்காலத்தையே போதிக்கிறது. இஸ்ராயேல் மக்கள் தங்களது வரலாற்றில் இருந்து மீண்டும் கற்க வேண்டும், அதற்கு அவர்கள் பாலைவன நாட்களை நினைத்து பார்க்க வேண்டும், மோசேயுடைய சட்டங்களை அமுல்படுத்த வேண்டும். சுருங்கச் சொல்லின் 'கடவுளுக்கு பணி, அதனால் வாழ்' என்பதே இதனுடைய அர்த்தம். மண்ணை மெது மெதுவாக இழந்து கொண்டு, அடையாளங்களை தொலைத்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழருக்கு இந்த நூலின் போதனைகள் மிகவும் முக்கியமானது. இன்றைய வாசகம் 'அறுவடைக் காணிக்கைகள்' எவ்வாறு செலுத்தப்படவேண்டும் என்ற பகுதியில் இருந்து எடுக்கப்படுகிறது. இந்த அறுவடைக்கால காணிக்கைகள் அநேகமாக வசந்த கால முடிவில் நடைபெற்றிருக்கலாம். 

வ.4: இங்கே முதல் கனிகள் ஆண்டவர் தரும் நிலத்தில் இருந்து எடுக்கப்படுகின்ற படியால் அவருக்கு கொடுக்கப்பட வேண்டியவை என்கிறது. பலிப்பீடம் ஆண்டவரது பிரசன்னத்தை குறிக்கப் பயன்படலாம். 

வ.5: இனிவருகின்ற வசனங்கள் இஸ்ராயேலுடைய விசுவாசப் பிரமானத்தை உள்ளடக்கியதாக அமைகிறது. 'நிரந்தரக் குடியற்ற அரமேயனான என் தந்தை' (אֲרַמִּי אֹבֵד אָבִ֔י) என்பது இங்கு யாக்கோபை குறிக்கும். அலைந்து திரி என்பதற்கு அழிந்து போ என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. (אָבַד அவாத் -அழி, தொலை). நாடற்று அகதியாய் அலைந்தால், எவ்வளவு செல்வந்தம் இருந்தாலும் அழிந்தே போவார்கள் என்பது வரலாறு தரும் பாடம். நமக்கு சாலப் பொருந்தும். யாக்கோபின் தாய், ரெபேக்கா ஒரு அரமேயாள் என்பதாலும், அவர் இருபது ஆண்டுகளுக்கு மேல் அரமேயாவில் (சிரியா) இருந்ததாலும் இவ்வாறு அழைக்கப்படுகிறார். எகிப்துக்கு சென்றார், சிறுமையாய் இருந்தார், அங்கே பெரிய மக்களினத்தைக் பெற்றார் என்பது இஸ்ராயேல் மக்களுடைய எகிப்திய ஆரம்ப கால வளமான நாட்களை குறிக்கிறன. 

வவ. 6-7: இவ்வசனங்கள், எகிப்திலே அவர்கள் எவ்வாறு அடிமைகள் ஆயினர், கடவுள் எவ்வாறு தன் மக்களின் குரலைக் கேட்டார் என விவரிக்கின்றன. 

வவ. 8-9: ஆண்டவருடைய வலிய செயல்கள் நினைவு கூறப்படுகின்றன. வலிய கரம், ஓங்கிய புயம், பேராற்றல், அடையாளம், அருஞ்செயல்கள், போன்றவை கடவுளுடைய மகத்துவத்தை நினைவுபடுத்தும் ஒத்த கருத்துச் சொற்கள். ஆசிரியர் இங்கே, ஆண்டவருடைய செயல்கள்தாம் மக்களுக்கு எகிப்திலிருந்து விடுதலை தந்தது என நேர்தியாக நினைவுபடுத்துகிறார். இஸ்ராயேல் பாலும் தேனும் பொழியும் நாடு என்பது, மீண்டும் மீண்டும் விவிலியத்தில் வரும் அழகான விவரணம். (חָלָב וּדְבָשׁ கலாவ் வுதெவாஷ்) பாலும் தேனும் என்று, 54 தடவைகளாக முதல் எற்பாடு, கானான் நாட்டை விவரிக்கிறது. பாலும் தேனும் இயற்கையான விலையுயர்ந்த அக்கால அரிய பொருட்கள். 

வ. 10. ஆண்டவருக்கு முன்னால் வைத்து வணங்குதல் என்பது, ஒருநாளும் கடவுள் செய்தவற்றை மறக்காதே அல்லது தொடர்ந்து சொந்த நாட்டில் குடியிருக்க உன் ஆண்டவரை மறவாதே என்பதை நினைவூட்டுகிறது. 

பதிலுரைப்பாடல்
திருப்பாடல் 91.

'தீங்கு உமக்கு நேரிடாது வாதை உம் கூடாரத்தை நெருங்காது. நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர்'. விவிலியத்தில் அதிகமாக பாடப்பட்ட வரிகளில் இதனையும் ஒன்றாகக் கொள்ளவேண்டும். திருப்பாடல்களை நான்கு புத்தகங்களாக பிரிக்கின்றவர்கள் 90-106 வரையான பாடல்களை நான்காம் புத்தகமாகக் வகுக்கின்றனர். இது யாருடையது என்பதில் பல வாத பிரதிவாதங்களைக் காணலாம். இதன் பாடகர், நோயினால் வாடுகின்றவர் போலவும், தாவீது அரசர் போரின் போது பாடுவது போலவும், இடப்பெயர்வின் பின்னர் ஒரு இஸ்ராயேலர் ஆலயத்தில் பாடுவது போலவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திருப்பாடல் பல அழகான படிப்பினைகளை மீள மீள ஞாபகப்படுத்துகிறது. கடவுளே எமது கேடயமும் அரனும் என்பதே இப்பாடலின் மையக் கருத்து. இப்பாடலுக்கு 'முரண்தொடர் அணிநயம்' (உhயைளஅரள) அதிகமாக பாவிக்கப்பட்டுள்ளது

அ. கடவுள்தான் அடைக்கலத்தின் ஊற்று: מַחְסִי וּמְצוּדָתִי - என் புகலிடம் என் கோட்டை

ஆ. கடவுளின் செயல்கள்: கண்ணியினின்றும் கொள்ளை நோயினின்றும் தப்புவிப்பார், சிறகுகளால் அரவணைப்பார், செல்லும் இடமெல்லாம் காக்குமாறு தன் தூதருக்கு கட்டளையிடுவார், அவர்கள் உம்மை தாங்குவர் (இந்த வார்த்தைகளை சாத்தான் கடவுளுக்கே நற்செய்தியில் நினைவூட்டும்), அவர்களை விடுவிப்பார், அவர்களை பாதுகாப்பார், மன்றாட்டுக்கு பதிலளிப்பார், துன்பத்தில் அவர்களோடு இருப்பார், அவர்களை பெருமைப்படுத்துவார், நீடிய ஆயுளையும் மீட்பையும் அளிப்பார். 

இ. கடவுளை நம்புவோருக்கு நடப்பவை: கடவுளின் இறக்கைகளின்கீழ் புகலிடம் காண்பர், அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும், இரவின் திகிலோ அல்லது கொள்ளை நோயோ பகலின் அம்போ அல்லது வாதையோ அச்சப்படுத்தாது. தம் வீரர் மரணமோ அல்லது பகைவீரர் தாக்குதலோ பயம்தராது, பொல்லாரின் தண்டனையை காண்பர். 'தீங்கு உம்மை அணுகாது வாதை உம் கூடாரத்தை அனுகாது' என்பதும் விவிலியத்தின் மிக அதிகம் அறியப்பட்ட அழகான வரிகள். 

ஈ. கடவுளை நம்புவோர் செய்பவை: சிங்கத்தின் மீதும் பாம்பின் மீதும் நடப்பர் (இந்த மிருகங்கள் மனிதர்களால் அடக்க முடியாதவை என அறியப்பட்டவை), இளஞ்சிங்கத்தையும்; நாகத்தையும் மிதிப்பர். 

உ. கடவுளின் அழகான இரண்டு பெயர்கள்: அதி உன்னதர் (עֶלְיוֹן எல்யோன்), சகலவல்லவர் (שַׁדַּי ஷதாய்)

இரண்டாம் வாசகம்
உரோமையர் 10,8-13

8அதில் சொல்லியிருப்பது இதுவே 'வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது.' இதுவே நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என நாங்கள் பறைசாற்றும் செய்தியாகும். 9ஏனெனில், 'இயேசு ஆண்டவர்' என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள். 10இவ்வாறு உள்ளூர நம்புவோர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவர்; வாயார அறிக்கையிடுவோர் மீட்புப் பெறுவர். 11ஏனெனில், 'அவர் மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளாக மாட்டார்' என்பது மறை நூல் கூற்று. 12இதில் யூதர் என்றோ கிரேக்கர் என்றோ வேறுபாடில்லை அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே. அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப் பொழிகிறார். 13'ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர் எவரும் மீட்புப் பெறுவர்' என்று எழுதியுள்ளது அல்லவா?

பவுல் தன்னுடைய மூன்றாவது திருத்தூது பயணத்தின் முடிவில் கொரிந்து நகரில் இருந்து, ஏ.கு, கி.பி. 56ல் இந்த கடிதத்தை உரோமைய கிறிஸ்தவர்களுக்கு எழுதினார் என நம்பப்படுகிறது. பவுல் உரோமைய திருச்சபையை நிறுவவில்லை. கி.பி 49ல் கிளாவுதியுஸ் சீசர் யூதர்களை வெளியேற்றிய போது யூத கிறிஸ்தவர்களும் வெளியேறினர். கி.பி 54ல் இவர்கள் திரும்பியபோது மற்றைய கிறிஸ்தவர்களை உரோமையை திருச்சபையில் சந்திக்கின்றனர். இப்படியான நிலவரத்தை பவுலுடைய இக்கடிதம் சந்திக்கிறது. இன்றைய பகுதி 'மீட்பு எல்லாருக்கும் உரியதும் இலகுவானதும்;' என்ற அமைப்பினுள் உள்ளது. விவிலியம் பல வேளைகளில் தனி நபரை முத்தரப்பு பார்வைக்கிணங்க (வசipயசவவைய) காண்கிறது. அவை: கை-கால்கள், இதயம்-கண்கள், மற்றும் வாய்-காதுகள். லேவியர் புத்தகம் (18,5) கை-கால்கள் பார்வைக்கிணங்க, தோராவை பின்பற்றுபவர் அச்செய்கையால் வாழ்வர் என்கிறது. பவுல் பல இறைவார்த்தைகளை இங்கே பாவனைக்கு அழைப்பதைக் காண்போம். பவுல் இதயம்-கண்கள் முறையை கிறிஸ்தவர்கள் பாவிக்க வேண்டும் என்கிறார். அதாவது சட்டத்தை கடைபிடித்தல் என்பதைவிட நம்பிக்கையை வாழுதல் என்பதாகும். 

வ.8: பவுல் இங்கு இணை.சட். 30,14ஐ காட்டுகிறார். இங்கே அவர் 'வார்த்தை' எனக் குறிப்பதை (הַדָּבָר ஹதாவார், ῥῆμά ரேமா) சட்டமாக (தோராவாக) எடுக்கலாம், ஆனால் அதை அவர் விசுவாசம் என கிறிஸ்தவ விளக்கம் கொடுக்கிறார். அந்த விசுவாசம் கை-கால்களில் இல்லை மாறாக இதயத்தில் இருக்கிறது என்கிறார். அத்தோடு அதுவே அவர் தரும் செய்தியாகும் என்றும் சொல்கிறார். பவுல் லாவகமாக தோராவை இயேசு ஆண்டவருக்கு சமப்படுத்துகிறார். 

வ.9: மீட்புப்பெற இரண்டு செயல்களைச் செய்யச் செல்கிறார்: அ. வாயால் இயேசுவை ஆண்டவர் என அறிக்கையிடுவது, ஆ. இதயத்தால் இயேசுவை கடவுள் இறந்தோரிடமிருந்து உயிர்தெழச்செய்தார் என நம்புவது. 

வ.10-11: இதயத்தால் நம்புவோரும் வாயால் அறிக்கை இடுவோருமே மீட்புப்பெறுவர் என்றும், சட்டங்களை அதாவாது இயேசுவை நடைமுறைப்படுத்த சட்டம் தேவையில்லை விசுவாசமே தேவை என்கிறார் இலாவகமாக. இதற்கு சார்பாக எசாயா 28,16ஐ கோடிடுகிறார். (הַמַּאֲמִין לֹא יָחִישׁ நம்புகிறவர் கவலையடைய தேவையில்லை) நம்புகிறவரே ஏற்புடையவர் ஆவர் என்பது இவ்வரிகளின் செய்தி. (δικαιοσύνη திகாய்யோசுனே - ஏற்புடமை)

வவ.12-13: யூதருக்கும் கிரேக்கருக்கும் நம்பிக்கையை பொறுத்தமட்டில் பெரிய வித்தியாசம் இல்லை என்பது உரோமைய திருச்சபைக்கு பவுலுடைய போதனை. கடவுளை கூப்பிடுகிறவர்களை கடவுள் கண்நோக்குகிறார் என்பது பவுலுடைய வாதம் அதற்கு அவர் யோவேல் 2,32ஐ காட்டுகிறார். (כֹּל אֲשֶׁר־יִקְרָא בְּשֵׁם יְהוָה  יִמָּלֵט
கடவுளின் பெயரால் அழைக்கிற அனைவரும் மீட்படைவர்). 

இயேசுவை கடவுளாக அறிக்கையிடுங்கள் என்பது ஆரம்ப கால திருச்சபையின் முக்கியமான படிப்பினைகளில் ஒன்று (κύριον Ἰησοῦν கூரியோன் யியேசூன் - இயேசுவை கடவுளாக). இது ஆரம்ப கால திருச்சபையின் திரு முழுக்கு விசுவாச அறிக்கையாக இருந்திருக்க வேண்டும்.  

நற்செய்தி
லூக்கா 4,1-13

1இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு யோர்தான் ஆற்றை விட்டுத் திரும்பினார். பின்னர் அவர் அதே ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். 2அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. அதன் பின் அவர் பசியுற்றார். 3அப்பொழுது அலகை அவரிடம் , 'நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்' என்றது. 4அதனிடம் இயேசு மறுமொழியாக,
''மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை' என மறைநூலில் எழுதியுள்ளதே' என்றார்.
5பின்பு அலகை அவரை அழைத்துச் சென்று உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி, 6அவரிடம், 'இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன் நான் விரும்பியவருக்கு இவற்றைக் கொடுப்பேன். 7நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும்' என்றது. 8இயேசு அதனிடம் மறுமொழியாக, ''உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக' என்று மறைநூலில் எழுதியுள்ளது' என்றார். 9பின்னர் அது அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்று கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, 'நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்; 10'உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்' என்றும் 11'உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது' என்றது. 12இயேசு அதனிடம் மறுமொழியாக, ''உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்' என்றும் சொல்லியுள்ளதே'' என்றார். 13அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது.

இந்த பகுதி இயேசு ஆண்டவர் பொதுப்பணிக்காக தன்னை ஆயத்தப்படுத்தியதன் இறுதி நிகழ்வாகவும், அவருடைய திருமுழுக்கின் பின்னர் நடைபெற்றதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. யோவான் தன்னுடைய முழு பணியையும் யோர்தானுக்கு அருகிலிருந்த பாலைநிலப் பகுதிகளிலே செய்து வந்தார். இயேசு இங்கே யோவானைப் போல பணிசெய்ய வரவில்லை. மாறாக தன்னை ஆயத்தம் செய்யவே வருகிறார். பாலை நிலம் அல்லது வனாந்தரம் என நாம் யாருமற்ற பகுதியை அழைக்கிறோம். இதனை ஈழத்தில் காண்பது மிக அரிது. மத்திய கிழக்கு அரேபிய மற்றும் வட ஆப்பிரிக்க பகுதிகளில் இது சாதாரண புவியியல் நில அமைவு. (ἔρημος ஏரேமொஸ் பாலை நிலம், வனாந்தரம்). விவிலியம் சீனாய் பாலை நிலத்தையும், அங்கே இஸ்ராயேல் மக்கள் 40 வருடம் அலைந்ததையும், வரலாறாகவும் அனுபவமாகவும் பல வேளைகளில் உருவகிக்கிறது. பாலை நிலத்தோடு, உடன்படிக்கை, கடவுளின் அதிசய வழங்கள் மற்றும் நீதித் தீர்ப்பு போன்ற இறையியல் கருத்துக்கள் பிணைக்கப்பட்டுள்ளன. பாலை நிலத்தை கானான் நாட்டிற்கு எதிர் பதமாக கண்டு நோக்க வேண்டும் என நினைக்கிறேன். முதல் ஏற்பாட்டு இறைவாக்கினர்கள் அதிகமாக தங்களது செய்தியில் இந்த பாலை நில அனுபவத்தை உள்வாங்கினர். புதிய ஏற்பாடும் இதே அனுபவத்தையே தனது அடிப்படையாகக் கொண்டுள்ளது. பாலை நிலத்தின் வளமில்லா தன்மை, அதனை தீய சக்திகளின் உறைவிடமாகவும், கடவுள் வாழாத இடமாகவும் கருதத் தூண்டியது. (ஒப்பிடுக: மத் 4,1-11: மாற் 1,12-13). லூக்கா இந்த பாலைவன சோதனை நிகழ்வூடாக 1) இயேசுவின் இறைத்தன்மையையும், 2) இஸ்ராயேல் நாட்டினுடனான அவரது பாரம்பரிய உறவையும், 3) கடவுளின் சக்திக்கும் சாத்தானின் சக்திக்குமான போராட்டத்தையும், 4) இயேசுவின் பணி இறைவாக்குகளை நிறைவு செய்கிறது என்பதையும், 5) இந்த சோதனை நிகழ்வு சீடர்களுக்கு ஒரு முன்மாதிரிகையை வழங்குவாதாகவும், காட்சிப்படுத்துகிறார். 

வவ.1-2: இங்கு காட்சி அமைப்பு நடைபெறுகிறது. லூக்கா நன்றாக விவரிக்கிறார். யோர்தான் நதியிலிருந்து 'நிறை தூய ஆவியுடன்' வந்த இயேசு இப்போது 'ஆவியால்' அல்லது 'ஆவியில்' பாலை நிலத்துக்கு இழுக்கப்படுகிறார். லூக்கா 'தூய' என்ற பெயரடைச் சொல்லை விட்டு விடுகிறார் அத்தோடு ஆவியாலா? அல்லது ஆவியிலா? என்று நான்காம் வேற்றுமை உருபில் சிந்திக்க தூண்டுகிறார். இது எந்த ஆவி? என்பது எமது கேள்வி. 40 நாட்கள் இஸ்ராயேலருடைய 40 வருட பாலை நில பயண- அனுபவத்தையும், அவர்களது பலவீனத்தையும் குறிக்கலாம். முதல் ஏற்பாடு 90 தடவைகளுக்கு மேலாக இந்த 'நாற்பது நாட்கள்' என்ற சிந்தனையை விவரிக்கிறது. நோவா, யாக்கோபு, மோசே, யோசுவாவின் ஒற்றர்கள், எலியா, யோனா இன்னும் பலர் இந்த சிந்தனையோடு பல செய்திகளை விவிரிக்கின்றனர். 

வவ.3-4: (διάβολος-தியாபொலொஸ், சாத்தான், குற்றம் சுமத்துவது, அலகை, சோதிப்பது) அலகையின் முதலாவது சோதனை. இங்கு இயேசுவின் இறைதன்மையும் மகன்தன்மையும் சோதிக்கப்படுகிறது. உடல் தேவையை முன்வைத்து, மன்னாவை ஆண்டவருக்கு சாத்தான் ஞாபகப்படுத்துகிறது. இயேசு இ.ச 8,3ஐ சாத்தானுக்கு விடையாக தருகிறார். லூக்கா அதனுடைய முழு வரியையும் நமக்கு தரவில்லை (காண்க இ.ச. 8,3). இயேசு, தனக்கு அதிசயம் செய்வதைவிட நிறைய வேலை இருப்பதாக சாத்தானுக்கு சொல்கிறார்.

வவ.5-8: உலகின் அரசுகள், அரசியல் அநியாயங்கள், அவற்றின் மேன்மைகள் அனைத்தும் சாத்தானுடைய வல்லமைக்கு கட்டுப்பட்டவை என்று அழகாக காட்டுகிறார் இந்த மாண்புமிகு வைத்தியர். சாத்தான் இயேசுவை உயர்த்தி என்ற (ἀναγαγὼν) ஒரு பதத்தை பயண்படுத்தி (வ.5) சோதனையின் தன்மையை விளக்குகிறார். இங்கே ஆண்டவரின் அதிகாரம் சோதிக்கப்படுகிறது. 'அதிகாரம் (ἐξουσία 
எசூசியா)' என்ற சொல்லை அதிகமாக பயன்படுத்துவார் லூக்கா, அது இயேசுவிற்கு மட்டுமே உரியது என்பது அவரின் நம்பிக்கை. பல இடங்களில் இந்த அதிகாரம் இயேசுவை கடவுளாக காட்டும். அலகை இயேசுவை தன்னை வணங்க கேட்கிறது (προσκυνέω தாழ் பணி, வணங்கு, கையை முத்தமிடு, ழுழந்தாள் படியிடு, ஆராதி). இயேசு விடையாக இ.ச 6,13: 10,20களை கொடுக்கிறார். இணைச்சட்ட λατρεύσεις-வழிபாடு என்ற சொல்லை லூக்கா, தன் நற்செய்தியில் προσκυνέω-வணங்கு என்று மாற்றி ஆழப்படுத்துகிறார். 

வவ.9-12: உச்சகட்ட சோதனை எருசலேமில் நடைபெறுகிறது. πτερυγίον-கோயிலின் முகடு, இதனை ஏன் லுக்கா பாவிக்கிறார் என காண்பது கடினம். எருசலேம் கோவிலின் தென்கிழக்கு பகுதியாக இருக்கலாம். எருசலேம் கடவுளின் நகர், அங்கேதான் கடவுள் கொலைசெய்யப்பட்டார் அல்லது உயிர்தியாகம் செய்தார். இப்போது அலகை ஆண்டவருக்கு இறைவார்த்தையை போதிக்கிறது. தி.பா 91,11-12ஐ கோடிடுகின்றது. இன்னொருமுறை இயேசுவின் இறைமகன் தன்மையை சோதிக்கிறது. இத்தப்பாடல் தாவீதுக்கு இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனுபவத்தைக் கொடுத்தது. அலகை இப்போது இறைமகனை தனது தெரிவையே சந்தேகிக்கக் கேட்கிறது. இயேசு மீண்டும் இ.ச 6,16 விடையாகத் தருகிறார். (לֹא תְנַסּ֔וּ אֶת־יְהוָה אֱלֹהֵיכֶ֑ם உங்கள் கடவுளாகிய ஆண்டவரை சோதிக்காதீர்கள்). இந்த செய்தி இயேசுவிற்கல்ல அலகைக்கும் நமக்கும், கடவுளை சோதிப்பவர்களுக்கு லூக்கா சொல்லுவது. சாத்தானுடைய கேள்வி இயேசுவின் தெய்வீகத்தை சோதிப்பதற்கல்ல மாறாக அவரது முயற்சியை உடைப்பதற்கே. பல வேளைகளில் அவருடைய சீடர்களையோ மக்களையோ விட அலகை இயேசு யார் என்பதை நன்கு அறிந்திருந்தது. 

வ.13: அலகை சோதனைகளை முடித்துக்கொண்டு திரும்பியது என்பது, அலகையினுடைய செயற்பாடுகள் தொடரும் எனவும் காட்டுகிறது. தகுந்த காலம் என்று என்று லூக்கா கூறுவது ஆண்டவரின் பாடுகள் மரணத்தையா அல்லது ஆண்டவரின் விண்ணேற்றத்தின் பின்னர் வரும் காலத்தையா என்று ஆராய வேண்டும்.

ஆண்டவராகிய இயேசுவே! சோதனைகளில் வீழ்ந்து மயங்கி விழாது, 
எங்களின் உடல் உள தேவைகளை விட உம்மை அன்பு செய்ய வரம் தாரும்.


மி. ஜெகன்குமார் அமதி. 
உரோமை. 

வியாழன், 4 பிப்ரவரி, 2016

Fifth Sunday in Ordinary Time, C, பொதுக்காலம் ஐந்தாம் வாரம் (இ) 07,02,2016



பொதுக்காலம் ஐந்தாம் வாரம் (இ) 07,02,2016

எசா 6,1-2.3-8: திருப்பா. 137: 1கொரி 15,1-11: லூக் 5,1-11

எசாயா 6,1-2.3-8:
1உசியா அரசர் மறைந்த ஆண்டில், மிகவும் உயரமானதோர் அரியணையில் ஆண்டவர் அமர்ந்திருப்பதை நான் கண்டேன்; அவரது தொங்கலாடை கோவிலை நிரப்பி நின்றது. 2அவருக்கு மேல் சேராபீன்கள் சூழ்ந்து நின்றனர்; ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருந்தன் ஒவ்வொருவரும் இரண்டு இறக்கைகளால் தம் முகத்தை மூடிக்கொண்டனர்; இரண்டு இறக்கைகளால் தம் கால்களை மூடி மறைத்தனர்; மற்ற இரண்டால் பறந்தனர். 3அவர்களுள் ஒருவர் மற்றவரைப் பார்த்து: 'படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்; மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது' என்று உரத்த குரலில் கூறிக் கொண்டிருந்தார். 4கூறியவரின் குரல் ஒலியால் வாயில் நிலைகளின் அடித்தளங்கள் அசைந்தன் கோவில் முழுவதும் புகையால் நிறைந்தது. 5அப்பொழுது நான்: 'ஐயோ, நான் அழிந்தேன். ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்; தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே' என்றேன். 6அப்பொழுது சேராபீன்களுள் ஒருவர் பலி பீடத்திலிருந்து நெருப்புப் பொறி ஒன்றைக் குறட்டால் எடுத்து அதைத் தம் கையில் வைத்துக் கொண்டு என்னை நோக்கிப் பறந்து வந்தார். 7அதனால் என் வாயைத் தொட்டு, 'இதோ, இந்நெருப்புப்பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது; உன் பாவம் மன்னிக்கப்பட்டது,' என்றார். 8மேலும் 'யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?' என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன். அதற்கு, 'இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்' என்றேன்.

முதலாவது எசாயா புத்தகத்தில் இருந்து எடுக்கப்படும் இந்தப் பகுதி எசாயா இறைவாக்கினருடைய அழைப்பை விவரிக்கிறது. சாதாரணமாக அழைப்புப் பகுதி நூலின் தொடக்கத்தில் வரும். ஆறாம் அதிகாரத்தில் வருவதால் இங்கே தனது அழைப்பைவிட இறைவாக்கினர் வேறு எதையோ சொல்ல விழைகிறார் எனக் கொள்ளலாம். 

வ.1: உசியா (עֻזִּיָּהוּ உட்சியாகு- கடவுள் வல்லவர்), இந்த மன்னனின் இறப்பை அறிவிப்பதன் வாயிலாக எசாயா படிப்பினைகளை முன் வைக்கிறார். கிட்டத்தட்ட 740 கி.மு. ஊசியா மன்னர் இறந்தார். நீண்ட காலம் ஆட்சி செய்த இவர், நல்லவராக இருந்து அகங்காரம் பிடித்தவராக மாறி தொழுநோயால் இறந்தார் என வரலாறு சொல்கிறது. இவருடைய காலத்தில் மெதுவாக யூதா தனது சுதந்திரத்தை அசிரியாவிடம் இழக்கிறது. ஆண்டவரின் உயரமான அரியணை, தொங்கலாடை என்பவை, கடவுளுக்கு முன் மனிதர் எவ்வளவு சிறியவர் எனக் காட்டுகின்றன. கோயிலை நிரப்புதல், கடவுளுடைய பிரசன்னத்தை உலகக் கோவில்கள் கொள்ள முடியாது என காட்டுகிறது. 

வ.2: செராபீன்கள் (שְׂרָפִים செராஃபிம்), இவர்களை யாரும் கண்டதில்லை, எசாயாவைத் தவிர. எரி அல்லது தூய்மையாக்கு என்ற அடியிலிருந்து இந்த சொல் வருகிறது. பாம்பு-மனிதர்களை ஒத்தவர்களாக இவர்களை உருவகிக்கலாம். விவிலியம் சில இடங்களில் இவர்களை சக்தியுள்ள பாம்புகளாகவும், கானானிய தெய்வங்களாகவும் காட்டும் (காண். எண் 21,6: இ.ச 8,15). இவர்கள் இறகுகளால் பறப்பது, உடல்களை மூடுவது கடவுளின் தூய்மையைக் காட்டுகிறது. கால்களை மூடுதல், ஒரு மங்கல வழக்கு (நரிhநஅளைஅ), 'இடக்கரடக்கா'; வழக்குச் சொல். அதாவது அவர்கள் தங்கள் நிர்வாணத்தையே மூடினர். 

வ.3-5: தூயவர் என்று மூன்றுமுறை கூறுவதை சில கத்தோலிக்க ஆய்வாளர்கள் தமதிருத்துவமாகக் காண்பர். (קָדוֹשׁ கோதோஷ் தூயது, தூயவர்), மண்ணுலகும் விண்ணுலகும் மாட்சிமையால் நிறைந்துள்ளது என்று வானக வாசிகள் நன்கு அறிந்துள்ளனர், மனிதர்கள் இன்னும் அறியவில்லை என்கிறார். எசாயா தானும் தான் வாழும் உலகமும் கடவுளுக்கு முன்னால் தூய்மையற்றது என்கிறார். கடவுளை யாரும் கண்டதில்லை, எசாயா கண்டது அவரது மாட்சிமையை மட்டுமே. அசுத்த உதடுகள் அசுத்தமான சிந்தனைகளையும் பேச்சையும் குறிக்கலாம். 

வ.6-8: நெருப்புபொறி தூய்மைச் சடங்கை குறிக்கிறது. இங்கே ஆசிரியர் எசாயா மட்டுமே தூய்மையாக்கப்படுவதை குறிக்கிறார், மக்கள் தொடந்தும் தூய்மையற்றவர்களாக இருக்கின்றனர் போலும். 5வது வசனத்தில் பயந்த இறைவாக்கினர், இங்கே தன்னை அனுப்பக்கேட்கிறார். மனிதக் குரல் இறைவனின் திரு அவையில் கேட்கப்படுவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 

எசாயாவின் அழைப்பு காட்சி போல தெரிந்தாலும், எசாயாவின் சூழலில் வைத்துப் பார்க்கும்போது இது ஆண்டவரின் மாட்சியையும், அவரில் ஏன் மக்கள் நம்பிக்கை வைக்கவேண்டும் என்பதையும், இறைவாக்கினர்கள் பேச்சில் உண்மையுள்ளது என்பதையும் எண்பிப்பது போல பதியப்பட்டிருக்கிறது. 

பதிலுரைப் பாடல்
திருப்பாடல்,138

1ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். 2உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன்; உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். 3நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். 4ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர். 5ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்; ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது! 6ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்; எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்; ஆனால், செருக்குற்றோரைத் தொலையிலிருந்தே அறிந்து கொள்கின்றீர். 7நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், என் உயிரைக் காக்கின்றீர்; என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக உமது கையை நீட்டுகின்றீர்; உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர். 8நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும்.

இது ஒரு புகழ்சிப்பாடல் வகையைச் சார்ந்தது. (வ.1) தெய்வங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, பிற தெய்வங்களையோ அல்லது வானக வாசிகளையோ குறிக்கலாம். நன்றி செலுத்துதல், புகழ்தல், திரும்புதல், வணங்குதல், என்பவை பாடல் ஆசிரியரின் நம்பிக்கையை குறிக்கின்றன. தாவீதின் பாடல் என்று சொல்கிற படியால், இங்கே வருகின்ற திருக்கோவிலை, கூடாரம் என்றே எடுக்க வேண்டும். தாவீதின் காலத்தில் கோவில் இருந்திருக்கவில்லை. 

ஆண்டவரைப் புகழ்வதற்கு காரணத்தை 2-3 வசனங்களில் கூறுகிறார். ஆண்டவர் நலிந்தோரை கண்ணோக்கிறவர் எனினும், செருக்குற்றோரை தண்டிப்பவர் என்பதன் மூலம், ஆண்டவர் நீதியுள்ளவர் எனக்காட்டுகிறார். 

வவ 7-8: மனிதர் துன்பத்திலிருந்து விலகமுடியாது ஆனால் நம்பிக்கை தருபவை ஆண்டவருடைய பிரசன்னமும் காத்தலுமாகும் என்கிறார். வலக்கையால் காப்பாற்றுதல், முழு பலத்தோடும் காப்பாற்றுதலைக் குறிக்கும். இறுதியாக தன்னை ஆண்டவருடைய கைவினைப் பொருள் என்று கூறுகிறார். 

இரண்டாம் வாசகம்,
1கொரி.15,1-11
1சகோதர சகோதரிகளே, உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக் கொண்டீர்கள்; அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள். 2நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்; இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே. 3நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, 4அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். 5பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். 6பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்து விட்டனர். 7பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். 8எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.9நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப்பெறத் தகுதியற்றவன். ஏனெனில் கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன். 10ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். அவர் எனக்களித்த அருள் வீணாகிவிடவில்லை. திருத்தூதர்கள் எல்லாரையும்விட நான் மிகுதியாகப் பாடுபட்டு உழைத்தேன். உண்மையில் நானாக உழைக்கவில்லை; என்னோடிருக்கும் கடவுளின் அருளே அவ்வாறு உழைக்கச் செய்தது. 11நானோ மற்றத் திருத்தூதர்களோ யாராயிருந்தாலும் இதையே பறைசாற்றுகிறோம். நீங்களும் இதையே நம்பினீர்கள்.
இப்பகுதியை உயிர்ப்பைப் பற்றிய விளக்கவுரையின் முன்னுரையெனெக் கொள்ளலாம். இந்தப் பகுதி ஆரம்ப கால திருச்சபைக்கு திருத்தூதர்கள் கையளித்த விசுவாசத்தின் உள்ளடக்கத்தை எடுத்துரைக்கிறது. 

வவ.1-2: பவுல் தன்னையும் திருச்சபையில் உள்வாங்கி கிறிஸ்தவர்களை சகோதர சகோதரிகள் என விளிக்கிறார். ἀδελφοί அதேல்ஃபொய் என்பது ஆண்களையும் பெண்களையும் குறிக்கும். தான் போதித்த நற்செய்தியும், பெற்றுக்கொண்ட நற்செய்தியும் ஒரே நற்செய்தி என்பது ஒன்றே என்பது இங்கு நோக்கப்பட வேண்டும். நம்பிக்கை கொண்டிருந்தால் மட்டும் போதாது அதை முழுமையாக பற்றிக் கொள்ள வேண்டும் என்பது பவுலுடைய முக்கியமான வாதம். 

வவ 3-4: நற்செய்தியை விளக்குகிறார். அ. கிறிஸ்து நமக்காக இறைவாக்கின் படியே இறந்தார். ஆ. புதைக்கப்பட்டார். இ. இறைவாக்கின்படி மூன்றாம் நாள் உயிர்க்கப்பெற்றார். இதுதான் ஆரம்ப கால திருச்சபைக்கு திருத்தூதர்கள் வழங்கிய நற்செய்தி. பவுலுடைய போதனையில் அது எந்ந மாற்றமும் செய்யப்பட வில்லை என்பதை நோக்க வேண்டும். 

வவ. 5-9: உயிர்த்த ஆண்டவரைக் கண்டவர்கள்: முதலில் கேபா (பேதுரு), பவுல் சில வேளைகளில் இவருடன் கருத்தில் முரண்பட்டாலும், முதலாவது திருத்தூதர் இவர்தான் என்பதில் எந்த சந்தேகத்தையும் கொண்டிருக்கவில்லை. பின்னர், பன்னிருவர் (δώδεκα தோதேக்கா), பின்னர் ஐநூறுக்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள். பின்னர் யாக்கோபுக்கும் எல்லா திருத்தூதருக்கும் (τοῖς ἀποστόλοις πᾶσιν) இங்கே இவர்கள் அனைத்து சீடர்களை குறிக்கலாம். இறுதியாக தன்னையும் இணைத்துக்கொள்கிறார். சிலர் பவுல் ஆண்டவரை சந்திக்கவில்லை அதனால் உண்மையான திருத்தூதன் இல்லை என்று குழப்பி வந்தனர், இது அவர்களுக்கு. பவுல் தன்னை திருத்தூதர் என்று அழைக்கிறார். பன்னிருவருள் ஒருவர் என்று சொல்லவில்லை. பன்னிருவர் அனைவரும் திருத்தூதர்கள், ஆனால் பன்னிருவர் மட்டும்தான் திருத்தாதர்கள் என்றில்லை. 

வவ. 10-11. பவுல் திருத்தொண்டிற்காக கடினப்பட்டு உழைத்ததை அடிக்கடி நினைவூட்டுவார். அதோடு கடவுளுடைய அருளையும் அதிகமாக விவரிப்பார். (χάρις காரிஸ் இறையருள்) வசனம் 11: இதுதான் இங்கு நோக்கப்பட வேண்டியது. பன்னிருவரோ அல்லது பவுலோ முக்கியமானவர்கள் அல்ல, மாறாக நற்செய்தியே முக்கியமானது எனப் பாருங்கள் என்கிறார். கொரிந்தியர் மத்தியிலிருந்த பிரிவினை வாதங்களை இது எமக்கு மறைமுகமாக காட்டுகிறது. இந்த பிரச்சனை இன்றும் தொலைவில் இல்லை. 


நற்செய்தி
லூக்கா 5,1-11
1ஒரு நாள் அவர் கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர். 2அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகைவிட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர். 3அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.4அவர் பேசி முடித்தபின்பு சீமோனை நோக்கி, 'ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்' என்றார். 5சீமோன் மறுமொழியாக, 'ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்' என்றார். 6அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, 7மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகைகாட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன. 8இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, 'ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்' என்றார். 9அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர். 10சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, 'அஞ்சாதே இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்' என்று சொன்னார். 11அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

(Γεννησαρὲτ கென்னேசரேட்) கெனசரேத் ஏரிக் கடலை திபேரியாக் கடல், கலிலேயாக் கடல் என்றும் அழைப்பர், இது ஒரு கடல் அல்ல ஒரு கலிலேய ஏரி. இயேசுவினுடைய சொந்த ஊரும், திருத்தூதர்களுடைய ஊர்களும், இயேசுவினுடைய அதிகமான போதனைகளைப் பெற்ற இடங்களாகவும் இந்த மாகாணத்தை கொள்ளலாம் (கலிலேயா). வில்யாழை ஒத்த அமைப்பை கொண்டிருந்தபடியால் இதனை 'கின்னேரோத்' என்று அழைத்தனர். இங்கே லூக்கா வர்ணிக்கும் காட்சி, முதலில் மக்கள் ஆண்டவரிடம் வருவதாகவும், பின்னர் திருத்தூதர் அனைத்தையும் விட்டுவிட்டு ஆண்டவரைப் பின்பற்றுவதாகவும் அமைந்துள்ளது. முதல் வாசகத்தில் எசாயா பார்த்த திருக்காட்சியை ஒத்த, பேதுரு காணும் திருக்காட்சி போலுள்ளது.

வவ.1: திரளான மக்கள் (ὄχλος ஒக்லோஸ்), சாதாரண மக்களைக் குறிக்கும். இவர்கள் யோவானிடம் சென்றதைப்போன்று இயேசுவிடமும் வருகின்றனர், அல்லது இயேசு அவர்களிடம் செல்கிறார்.

வவ.2-4: இரண்டு படகுகள் இரண்டு திருத்தூதர்களைக் காட்ட பயன்படுகிறது. மாற்குவும் மத்தேயுவும், பேதுருவையும் அந்திரேயாவையும் காட்டுவர் (காண். மத் 4,18: மாற் 1,16). லூக்கா பேதுருவை மட்டும் காட்டுகிறார். வலைகளைக் கழுவுதல், வேலை முடிந்ததைக் காட்டுகிறது. மீனவர்கள் இந்த பகுதியில் அதிகமாக வாழ்ந்த பின்தங்கிய யூதர்கள். படகினுள் இயேசு ஏறுவதை, லூக்கா 'வினைஎச்சத்தில்' காட்டுவார். 'இயேசு படகினுள் ஏறிக்கொண்டு, சொன்னார்' என்றே மொழிபெயர்க்க வேண்டும். இது ஆண்டவர் மக்கள் வாழ்வினிலும் திருச்சபையில் உள்ளும் தொடர்ந்து ஏறுவதைக் குறிக்கும். இப்போது இயேசு மக்கள் நடுவில் இல்லை. முன்னால் கடலில் மேல் நின்று போதிக்கிறார். இது அவருடைய தெய்வீகத்தை குறிக்கலாம். கடல் என்னும் ஓரு பெரிய சக்தி இயேசுவின் காலடியில் இருக்கிறது. 

வவ.5-6: ஆழத்திற்கு போகச்சொன்னது, இயேசுவின் கட்டளையைக் குறிக்கும். (ἐπιστάτης எபிஸ்டாடேஸ்) என்பது ஐயா அல்லது கங்காணியார் என்பதைக் குறிக்கும். முன்பின் தெரியாதவரை இவ்வாறு விளிப்பதும், மீனவர் அல்லாதவருக்கு, பேதுரு செவிசாய்ப்பதும் வாசகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கலாம். இரவு வேலை இங்கு பயன் இல்லாத வேலையை குறிக்கிறது. உமது சொற்படியே போடுவேன் என்பது, பேதுருவின் திருத்தூதர் தலைமைப் பண்பைக் காட்டுகிறது. 

வவ. 6-7: பெருந்திரளான மீன்கள், வலைகளின் கிழியும் தன்மை, படகுகளின் மூழ்கும் தன்மை, வெற்றிகரமான மறைபரப்பு பணியைகாட்டுவதனைப் போல் உள்ளது. இயேசுவின் வருகை இங்கே மீன்பாட்டில் மாற்றத்தை கொண்டுவருகிறது. ஆரம்ப கால கிறிஸ்தவர்களின் அடையாளமாக மீன் இருந்ததையும் நினைவில் கொள்ளுவோம்.

வவ. 8-9: முதலில் இயேசுவை ஐயா என்று அழைத்தவர், இப்பபோது ஆண்டவரே என்று அழைக்கிறார் (κύριος கூரியோஸ்-ஆண்டவர்), காலில் விழுதல், போய்விட கேட்டல் என்பவை எசாயா ஆலயத்தில் பயந்ததை நினைவூட்டுகிறது. இங்கே முதல்தடவையாக சீமோன், பேதுரு (Πέτρος பெட்ரோஸ் பாறை) என்று அழைக்கப்படுகிறார். எசாயாவைப்போல பேதுருவும் திடப்படுத்தப்படுகிறார். 

வ.10-11: யாக்கோபு, யோவான் மற்றும் அனைவரும் வியப்புக்கொள்கின்றனர், பேதுரு மட்டும் பேசுகிறார். இது பேதுருவின் விசுவாசத்தைக் காட்டுகிறது. இயேசுவும் பேதுருவிடமே பேசுகிறார். மனிதரைப் பிடித்தல், ἀνθρώπους ἔσῃ ζωγρῶν மனிதரை உயிரோடு பிடித்தல் என்பதை குறிக்கிறது. பிடித்த மீன்களையும் அனைத்தையும் கரை சேர்த்துவிட்டு, அச்சம் தவிர்த்து, ஆண்டவரை பின்தொடர்வதே லூக்கா சொல்ல வரும் செய்தி. 

ஆண்டவரே அறிவினால் விசுவாசத்தை அடைவதைவிட, விசுவாசத்தினால் அறிவையடைவதே மேல், என்று எமக்கு கற்பியும்.   


மி. ஜெகன்குமார் அமதி, உரோமை

தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) Pentacost Sunday

தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) Pentacost Sunday தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) மி . ஜெகன்குமார் அமதி , சங்கமம் , அமதிகள் ஆன்மீக...