புதன், 29 ஜூன், 2016

பொதுக்காலத்தின் பதினாங்காம் ஞாயிறு 03,07,2016: 14th Sunday in Ordinary Times C.

பொதுக்காலத்தின் பதினாங்காம் ஞாயிறு
03,07,2016
'நானோ நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன்.'
(கலாத் 6,14)


முதல் வாசகம்: எசாயா 66,10-14
பதிலுரைப் பாடல் திருப்பாடல் 66
இரண்டாம் வாசகம்: கலாத்தியர் 6,14-18
நற்செய்தி: லூக்கா 10,1-12.17-20



எசாயா 66,10-14
10எருசலேமின் மேல் அன்பு கொண்ட அனைவரும் அவளுடன் அகமகிழ்ந்து அவள் பொருட்டு அக்களியுங்கள்; அவளுக்காகப் புலம்பி அழும் எல்லாரும் அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள். 11அப்போது அவளின் ஆறுதல் அளிக்கும் முலைகளில் குடித்து நீங்கள் நிறைவடைவீர்கள்; அவள் செல்வப் பெருக்கில் நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள்.
12ஆண்டவர் கூறுவது இதுவே: ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்; பெருக்கெடுத்த நீரோடைபோல் வேற்றினத்தாரின் செல்வம் விரைந்து வரச் செய்வேன்; நீங்கள் பால் பருகுவீர்கள்; மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்; மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். 13தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள். 14இதை நீங்கள் காண்பீர்கள், உங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்ளும், உங்கள் எலும்புகள் பசும்புல்போல் வளரும்; ஆண்டவர் தம் ஆற்றலைத் தம் ஊழியருக்குக் காட்டுவார் என்பதும் அவரது சினம் அவர்தம் பகைவருக்கு எதிராய் மூளும் என்பதும் அறியப்படும்.

எசாயா இறைவாக்குப் புத்தகம் தனது ஆறுதல் வார்த்தைகளுக்கு பிரசித்திபெற்றது. ஆறுபத்தாறு அதிகாரங்களைக் கொண்ட இந்த பெரிய இறைவாக்கு புத்தகத்தை முதலாம், இரண்டாம், மற்றும் மூன்றாம் எசாயா என ஆசிரியர்கள் பரிக்கின்றனர். இவை வௌ;வேறு காலப்பகுதியை சேர்ந்தவையாக இருக்கவேண்டும். இன்றைய வாசகம் எசாயாவின் இறுதி அதிகாரத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இது இடம்பெயர்ந்தவர்கள் (நாடு கடத்தப்பட்டவர்கள்) பபிலோனியாவில் இருந்து வந்ததன் பின்னர் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதனை மையமாகக்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. நாடு திரும்பியவர்கள் சந்தித்த அரசியல் பொருளாதார நெருக்கடிகள் சீக்கிரமாக விலகிப்போகும் என்னும் கருத்துக்களை இந்த பகுதிகளில் காணலாம். இருந்த போதும் எசாயா புத்தகம் முழுவதுமாக மையப்படுத்துகின்ற 'கடவுளின் நாள்' என்னும் சிந்தனையையும் 
இங்கே காணலாம். 

வ.10: இந்த வரி சீயோனை தாயாகவும் மனைவியாகவும் வர்ணித்து வருவதை தாண்டி இப்போது சீயோனை பிள்ளைகளை ஒப்பனைசெய்கிறது (❆ காண்க கலா 4,26). எருசலேமின் அழிவுகளைக் கண்ட அனைவரையும் அவளது மீட்சியைக் கண்டு மகிழுமாறு எசாயா அழைப்பு விடுகிறார். மகிழ்ச்சியை சேர்ந்து, கொண்டாடி பின்னர் ஆர்ப்பரிக்கவேண்டும் என்று எசாயா சொல்வது எமக்கும் இப்படியான வாழ்வு ஈழத்தில் கிடைக்கும் என்பதை இன்னொருமுறை உறுதிப்படுத்துகிறது. 
(❆மேலே உள்ள எருசலேமோ உரிமைப்பெண்; நமக்கு அன்னை.)

வ.11: சீயோனின் கொங்கைகள் அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது. கானானியருக்கு பல முளைகளைக் கொண்ட ஒரு பெண் தெய்வத்தை பற்றிய அறிவிருந்தது. முளைகள் பால் தருவதனால், அவை வாழ்விற்கான அடையாளமாக கருதப்பட்டன. இது காமத்தையும் தாண்டிய தாய்மைக்கான அடையாளம். இங்கே இந்த தாயாக எருசலேம் உவமிக்கப்பட்டு அதன் வாழ்வு நிறைவாக இருக்கும் என உறுதிப்படுத்தப்படுகிறது. வறுமையினால் பெண்கள் வாடி, தங்கள் பிள்ளைகளுக்கு பால் கொடுக்க முடியாத நிலைகளை எருசலேம் கண்டிருந்தது. இங்கே அந்த நிலை மாறி எருசலேமில் மக்கள் நிறைவடைவார்கள் என எசாயா நம்பிக்கை தருகிறார். 

வ.12: இந்த அழகான வரி ஆண்டவரின் அரவணைப்பை திருப்பிக் கூறும் கவிநடையில் விவரிக்கின்றது. 
ஆறுபோல் நிறைவாழ்வு - நீரோடைபோல் வேற்றினத்தார் செல்வம்
பால் பருகுவீர்கள் - மார்பில் அணைத்து சுமக்கப்படுதல் - மடியில் தாலாட்டப்படுதல்

வ.13: இந்த வரியும் அதே அர்தத்தில் தொடர்கிறது. இஸ்ராயேலின் கடவுளுக்கு ஆண் அர்த்தம் கொடுத்தாலும், பல முக்கியமான இடங்களில் கடவுள் பால் வர்க்கத்தை சார்ந்தவர் இல்லை என்பதை விவிலியம் நிரூபிக்கும். இங்கே கடவுளின் தாய்மை ஆழமாக தெரிகிறது. கடவுள் பால் அடையாளங்களை தாண்டியவர். 

வ.14: எலும்புகள் முக்கியமான உடல் அவையங்களாக அக்காலத்தில் அறியப்பட்டன. இதனால்தான் ஆதாம் ஏவாளை தன் எலும்பும் சதையும் என்கிறார். இதனால்தான் யாக்கோபுவின் மகன் யோசேப்பும் தான் எகிப்தில் இறக்கும் வேளை தன் எலும்பினை வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு கொண்டு போகக் கேட்கிறார். இங்கே மூன்றுவிதமான அடையாளங்கள் கொடுக்கப்படுகின்றன:
இதயம் - மகிழும்
எலும்புகள் - பசுமையாக வளரும்
(கண்கள்) - எதிரிகள் மேல் கடவுளின் வல்லமையை காணும்.


திருப்பாடல் 66
1அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! 
2அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். 
3கடவுளை நோக்கி 'உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை உமது மாபெரும் ஆற்றலின் காரணமாக உம் எதிரிகள் உமது முன்னலையில் கூனிக் குறுகுவர்; 
4அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்' என்று சொல்லுங்கள். (சேலா) 
5வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுவதற்கு உரியவை. 6கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம்.
7அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! அவர்தம் கண்கள் வேற்றினத்தாரைக் கவனித்து வருகின்றன் கலகம் செய்வோர் அவருக்கு எதிராய்த் தலைதூக்காதிருப்பராக! (சேலா) 
8மக்களினங்களே! நம் கடவுளைப் போற்றுங்கள்; அவரைப் புகழ்ந்துபாடும் ஒலி கேட்கச் செய்யுங்கள். 
9நம்மை உயிர்வாழச் செய்தவர் அவரே அவர் நம் கால்களை இடற விடவில்லை. 
10கடவுளே! எங்களை ஆய்ந்து, வெள்ளியைப் புடமிடுவதுபோல் புடமிட்டீர்; 
11கண்ணியில் எங்களை விழும்படி செய்தீர்; பளுவான சுமைகளை எங்கள் முதுகின் மீது சுமத்தினீர். 
12மனிதரை எங்கள் தலைகள்மீது நடந்துபோகச் செய்தீர்; நெருப்பிலும் தண்ணீரிலும் அகப்பட்டிருந்தோம்; ஆயினும், நீர் எங்களைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தீர். 
13எரிபலியுடன் உமது இல்லத்தினுள் செல்வேன்; என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன். 
14அவற்றை என் துன்ப வேளையில் என் நா உரைத்தது; என் வாய் உறுதி செய்தது. 
15கொழுத்த கன்றுகளை, செம்மறிக்கிடாய்களின் நறும்புகையோடு, உமக்கு எரிபலியாகச் செலுத்துவேன்; காளைகளையும் வெள்ளாட்டுக் கிடாய்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா) 
16கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். 
17அவரிடம் மன்றாட என் வாய்திறந்தது; அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது. 
18என் உள்ளத்தில் தீய எண்ணங்களை வளர்த்திருந்தேனாகில், என் தலைவர் எனக்குச் செவிசாய்த்திருக்கமாட்டார். 
19ஆனால், உண்மையில் கடவுள் எனக்குச் செவிகொடுத்தார்; என் விண்ணப்பக் குரலை உற்றுக் கேட்டார். 
20என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள்போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி!

இந்த திருப்பாடலை நன்றிப்பாடல்களுள் ஒன்று என எடுக்கலாம். இந்தப் பாடல் - உலகம், நான், நாங்கள் போன்றவை எவ்வாறு கடவுளை போற்றி புகழ வேண்டும் என்பதை விளக்க முயற்சி செய்கிறது. ஆசிரியர், ஆண்டவர் வரலாற்றில் மக்களுக்கு செய்தவைகளை உதாரணமாக எடுத்து அதனை காரணமாக்கி ஆண்டவரை புகழக் கேட்கிறார். அத்தோடு நிகழ்காலத்தில் நடப்பவை அனைத்தும் கடந்த காலத்து அனுபவங்கள் மூலமாக அறியப்பட வேண்டும் என்பது இவரது நம்பிக்கை. துன்பங்கள் நல் வாழ்க்கைக்கான சந்தர்பங்களை உருவாக்கும் என்பது புதிய ஏற்பாடு கற்றுத்தரும் பாடங்களில் ஒன்று, இதனை இந்த திருப்பாடலிலும் காண்கிறோம். 
வவ 1-12 உலகம் கடவுளுக்கு செலுத்தவேண்டிய புகழைக் கூறுகின்ற அதே வேளை வவ 13-20 ஆசிரியர் தான் கடவுளுக்கு செலுத்த வேண்டிய புகழ்சி செயற்பாடுகளை அறிக்கையிடுகின்றன. 

வவ.1-2: இந்த திருப்பாடல் பாடகர் குழாமுடைய திருப்பாடல் என்று ஆரம்பிக்கிறது. இந்த இரண்டு வரிகளும் அனைத்து உலகையும் ஆண்டவரை புகழும்படி அழைப்பு விடுகின்றன. ஆண்டவரை புகழ்வதும் அவரது பெயரை புகழ்வதும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டதாக காணப்பட்டது. 
இதனால்தான் பத்து கட்டளைகளில் ஒன்று கடவுளின் பெயரை வீணாக பாவிக்க வேண்டாம் என கட்டளையிடுகிறது (காண் வி.ப 20,7❆).
(❆உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார்.)

வவ.3-4: அனைத்துலகிற்கு கட்டளையிடுகிறார். இந்தக் கட்டளை அவர்களை கடவுளின் செயல்கை அறிக்கையிட்டு நம்பிக்கை கொள்ளும் படி கேட்கிறது. 

வவ.5-7: கடவுள் கடந்த காலத்தில் செய்த செயல்கள் நினைவூட்டப்படுகின்றன. கடவுளின் செயல்கள் அஞ்சுதற்குரியன என்பது, அவை அதிசயமானவை என்பதை காட்டுகின்றன. விவிலியத்தில் சில வேளைகளில் அச்சம், அதிசயம், மெய்யறிவு போன்ற செற்கள் ஒத்த சொற்களாக பார்க்கப்படவேண்டியவை. கடலை உலர்ந்த தரையாக்கியதும், இஸ்ராயேலர் அதனை நடந்து கடந்ததும் அவர்களுக்கு மறக்க முடியாத வரலாற்றுப் பாடம், இது அதிகமான வேளைகளில் மீண்டும் மீண்டும் வருவதை அவதானிக்கலாம். மனிதர்கள் அல்ல மாறாக அரசாள்பவர் கடவுளே என்பதும் இஸ்ராயேலரின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த நம்பிக்கை முக்கியமாக இஸ்ராயேல் அரசுகளின் வீழ்ச்சியின் பின்னர் இன்னும் வலிமைபெற்றது. 'ஆண்டவரின் கண்கள் கவனிக்கின்றன' என்பதும் ஆண்டவரின் அரசாட்சியை விவரிக்கும் ஒத்த கருத்து வரி. 

வ.8: மீண்டுமாக அனைத்துலகோருக்கு அழைப்பு விடப்படுகிறது. ஆண்டவரை வாழ்த்தச் சொல்லுவதும், பாடல் ஒலிகளை இசைக்கக் கேட்பதும் ஒத்த கருத்தினால் திருப்பிக் கூறப்பட்டுள்ளன. 

வவ.9-12: இங்கே மீளவும் பழைய அனுபவங்கள் நினைவு கூறப்படுகின்றன.
'உயிர்வாழச் செய்தவர்' என்பது 'நம் ஆன்மாக்களை உயிரினுள் வைத்தார்' என எபிரேயத்தில் எழுதப்பட்டுள்ளது. அதற்கு ஒத்த அர்த்தத்தில் அடுத்த பகுதி 'கால்கள் இடற விடவில்லை' என்று வருகிறது. கால்கள் இடறாமை என்பது உடல்-பௌதீக-பொருளாதார வீழ்ச்சியையும் குறிக்கலாம். பன்னிரண்டாவது வரி இஸ்ராயேலரின் பழைய அனுபவங்களை நினைவூட்டுகின்றன. 'பாதுகாப்பான இடம்' என்பது 'திறந்த விசாலமான இடம்' என்றும் பொருள் படும். இது அநேகமாக அமைதி நிறைந்த எருசலேமை குறிக்கும் என நினைக்கிறேன். 

வவ.13-15: இப்போது தான் செய்ய இருப்பவற்றை பாடுகிறார். தமிழில் எதிர்காலத்தில் மொழிபெயர்கப்பட்டுள்ள இந்த வினைச்சொற்கள், எபிரேயத்தில் எதிர்காலத்தையும் தாண்டி, நிகழ்காலத்தையும், இறந்த காலத்தையும் குறிக்கலாம். ஆக இவர் செய்யப்போவதாக சொல்லுபவற்றை அவர் செயவதாகவும் எடுக்கலாம். எரிபலிகள், பொருத்தனைகள் போன்றவை ஏற்கனவே அவர் தன் துன்ப வேளைகளில் வாக்கு உரைத்ததாக கூறுகிறார். இங்கே விவரிக்கப்பட்டுள்ள மிருகங்களை பார்கிறபோது அக்காலத்திலிருந்த பலி முறைகள் ஆச்சரியத்தோடு பல கேள்விகளையும் எழுப்புகின்றன. அதிகமான இரத்தங்கள், கொழுப்புக்கள் எரிக்கப்படுகிறபோது வரும் துர்நாற்றத்தை தடுக்க பல விதமான நறுமண தூபங்கள் பாவிக்கப்பட்டிருக்க வேண்டும். 

வவ.16-20: மீண்டுமாக தன் வாசகர்களுக்கு அழைப்புவிடுத்து தன்னுடைய சொந்த வாழ்வியல் அனுபவத்தில் பாடம் எடுக்கிறார். 'வாரீர், கேளீர்' என்பது எபிரேயத்திலும் மோனையில் எழுதப்பட்டுள்ளன (לְכֽוּ־שִׁמְעוּ லெகூ-ஷிம்மூ வாருங்கள், கேளுங்கள்: கட்டளை வாக்கியங்கள்). பதினெட்டாவது வரி அழகான அக-அறத்தை முன்வைக்கிறது. நேரடி மொழிபெயர்ப்பு: தீய எண்ணத்தை என் இதயத்தில் நான் பார்த்திருந்தால், என் ஆண்டவர் எனக்கு செவிசாய்திருக்க மாட்டார். கடவுள் எப்போதும் நல்லவற்றையே விரும்புகிறார், கடவுளின் பெயரால் மற்றவருக்கு தீமை செய்ய முடியாது என்னும் உண்மை இங்கு புலப்படுகிறது. இறுதி வசனத்தில் ஆசிரியர், கடவுளுக்கு புதிய பெயர்களை கொடுக்கிறார் அவை:

அ. என் செபத்தை புறக்கணிக்காத கடவுள்
ஆ. அவரின் இரக்கம்-கலந்த அன்பை மறுக்காத கடவுள் (கடவுளின் அழகான பெயர்கள்).

கலாத்தியர் 6,14-18
14நானோ நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்தவரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். 15விருத்தசேதனம் செய்துகொள்வதும் செய்து கொள்ளாமல் இருப்பதும் ஒன்றே. புதிய படைப்பாவதே இன்றியமையாதது. 16இந்தக் கொள்கையைப் பின்பற்றுவோருக்கும் கடவுளின் மக்களாகிய இஸ்ரயேலருக்கும் அமைதியும் இரக்கமும் உரித்தாகுக!
17இனிமேல் எவரும் எனக்குத் தொல்லை கொடுக்கவேண்டாம். ஏனெனில் என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம். 18சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக! ஆமென்.

காலத்தியர் திருமுகத்தில் பவுல் தன்னுடை திருத்தூதுத்துவ அழைப்பையும், கிறிஸ்தவ வாழ்வின் மேன்மைகளையும் தெளிவு படுத்தியவர் இந்த ஆறாவது அதிகாரத்தில் முடிவுரை எழுதுகிறார். கிறிஸ்வின் சிலுவைக்கும் செமித்தியர்களின் விருத்தசேதனத்திற்கும் ஒரு சொற் போரை நடத்தி சிலுவையின் வெற்றியை சுவைக்கிறார் பவுல். 

வ14: கலாத்தியர் திருமுகத்தில் பல ஆழமானதும் மனதை தொடுவதுமான வரிகள் உள்ளன. இந்த வரியும் அதிகமாக பலரால் இன்றுவரை விரும்பப்படுகிற வரி. சில யூத கிறிஸ்தவர்கள் அல்லது 
யூதவாத-விரும்பிகள் கலாத்தியருக்கு யூத மறையின் சட்டங்களையும் முக்கியமாக விருத்தசேதனத்தை பற்றியும் பல சார்பு வாதங்களை முன்வைத்து அவற்றைப் பற்றி பெருமையாகவும் பேசினர். இது கலாத்திய கிறிஸ்தவர்களிடையே சில கிலேசங்களை தோற்றுவித்தது. இந்த வரியில் பவுல் தான் எதைப்பற்றி பெருமைப்படுகிறார் என்பதை அழகாகவும் ஆழமாகவும் சொல்கிறார். சிலுவைதான் பவுலுடைய பெருமையின் காரணமும் காரியமும். அதனைவிட வேறொன்றும் இல்லை என்பது அவரது சமரசம் செய்ய முடியாத நம்பிக்கை. இது நற்செய்திகளில் சிலுவையை பற்றி சொல்லப்படுகின்ற உண்மைகளை பின்புலமாக கொண்டுள்ளது (காண்க லூக் 14,27❆). உலகமும் தானும், போன்றவை மீட்கப்பட்டுள்ள உண்மை சிலுவையில் தங்கியுள்ளதே அன்றி வேறொன்றிலும் அல்ல என்கிறார் இந்த திருத்தூதர் அத்தோடு சிலுவைப் பற்றிய தவறான கருத்தியல்களையும் மறைமுகமாக சாடுகிறார்.  
(❆தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது.)

வ.15: விருத்தசேதனம் என்பது (περιτομή பெரித்தோமே) ஆண்குறியில் உள்ள நுனித்தோலை அகற்றிவிடும் ஒரு எபிரேய வழக்கம். இதனை எபிரேயர்கள் தாங்கள் கடவுளோடு செய்த உடன்படிக்கையின் அடையாளமாக கருதினர், இது தங்களை கடவுளின் பிள்ளைகளாகவும், ஆபிரகாமின் வழித்தோன்றல்களாகவும் மாற்றியதாகவும் நம்பினர் (காண்க தொ.நூல் 17,10❆). இந்த விருத்தசேதனம் ஒரு சுகாதார பழக்கவழக்கம் பின்னர் இதற்கு இறையியல் சாயம் கொடுக்கப்பட்டது என்றும் சிலர் இன்றுவரை வாதாடுகின்றனர். நம்முடைய திருமுழுக்குகூட முன்னர் செமித்தியரிடையில் வழக்கிலிருந்த ஒரு தூய்மை சடங்கே ஆகும். புவுல் ஒரு யூதனாக இந்த விருத்தசேதனத்திற்கு எதிரானவர் அல்ல. இங்கேயுள்ள வாதம், இந்த விருத்தசேதனம் மற்றவருக்கு கிறிஸ்துவை பொறுத்தமட்டில் எந்த சலுகையையோ அல்லது முன்னுரிமையையோ வழங்கமுடியாது என்பதே ஆகும். கிறிஸ்துவிற்கு முன்னால் அனைவரும் சமம் என்னும் உண்மையை இது முன்வைக்கிறது. 'புதிய படைப்பு' (καινὴ κτίσις) என்று பவுல் இங்கு வாதிடுவது, கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்து அதனால் ஒருவர் அடையும் புதிய வாழ்வை குறிக்கிறது (காண்க 2கொரி 5,17❆❆
(❆நீங்கள் கடைப்பிடிக்குமாறு உன்னோடும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினரோடும் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே: உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும்)
(❆❆எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ!)

வ.16: பவுல் இந்த வசனத்தில் தன்னுடைய ஆசீர்வாத்தை அனைவருக்கும் உரித்தாகுகிறார். பவுல் இஸ்ராயேலருக்கு எதிரானவர் அல்ல என்பதை இந்த வரியில் பார்க்கலாம். அமைதியும் 
இரக்கமும் அனைவருக்கும் எப்போதும் தேவையானவை. அதனை இயேசுவால் மட்டும்தான் தர முடியும் என்பதை பவுல் நன்கு அறிந்திருக்கிறார். இவை இரண்டும் கிரேக்க மெய்யியலில் மட்டுமல்ல எபிரேய சிந்தனைகளிலும் நன்கு அறியப்பட்டவை (εἰρήνηஇ שָׁלוֹם எய்ரேனே, ஷலோம்- அமைதி:  ἔλεος, חֶסֶד எலெயொஸ், ஹெசெட்- அன்புள்ள இரக்கம்)
(ஒப்பிடுக தோபித்து 7,11❆)
(❆...உனக்கு அவளைக் கொடுக்கும்படி விண்ணகத்தில் உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆகவே உன் உறவினளை ஏற்றுக்கொள். இனி நீ அவளுக்கு உரியவன்; அவள் உனக்குரியவள்; இன்று முதல் என்றுமே அவள் உன்னுடையவள். , விண்ணக ஆண்டவர் இன்று இரவு உங்களைக் காப்பாராக உங்கள் மீது இரக்கமும் அமைதியும் பொழிவாராக' என்றார்.)

வ.17: பவுல் இங்கு யாரையோ குறிப்பிட்டு சாடுவதைப்போல் உள்ளது. இங்கே பவுல் 'தழும்புகள்' என்று குறிப்பிடுவது கிறிஸ்துவிற்கான அடையாளத்தையும் குறிக்கலாம். இதனை குறிக்க στίγμα ஸ்டிக்மா என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இது அக்காலத்தில் அடிமைகளையும் அல்லது உயிருள்ள சொத்துக்களையும் குறிக்க அடிமை-முதலாளிகளால் பொறிக்கப்பட்ட 'குறிகளை' நினைவூட்டுகிறது. சில படைவீராக்ளும் தங்களது தெய்வங்களின் தழும்புகள் அல்லது குறியீடுகளை தங்கள் உடல்களில் பொறித்திருந்தனர். இது அவர்களை அத்தெய்வங்களின் பக்தர்கள் என்பதனை நினைவூட்டியது. அக்காலத்தின் சீசரின் அடையாளம், அதனை தாங்கியிருந்தோரை பலவழிகளில் பாதுகாத்தது. 
ஆக கிறிஸ்துவின் தழும்பு, ஸ்டிக்மா, பவுலை கிறிஸ்துவின் போராளி அல்லது பக்தன் என்பதை சுட்டிக்காட்டுகிறது. ஒருவேளை, அவர் கிறிஸ்துவின் போராளி என்பதால் அவரை யாரும் இலகுவாக எடைபோட வேண்டாம் என எச்சரிக்கிறார் எனவும் எடுக்கலாம்.
வ.18: இங்கே பவுல் விழிப்பது, முக்கியமாக கலாத்திய கிறிஸ்தவர்களையே குறிக்கின்றது. 'ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்கள் ஆவியோடு இருப்பதாக' என்றே கிரேக்கத்தில் உள்ளது. ஆமென் என்ற வாழ்த்துக்களுடன் ஆசீர்களை முடிப்பது எபிரேய வழக்கம். இது மெதுவாக கிறிஸ்தவத்துக்குள் நுழைவதைக் இவ்வாறு காணலாம். 

லூக்கா 10,1-12.17-20
1இதற்குப்பின்பு ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார். 2அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: 'அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். 3புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். 4பணப்பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம். 5நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், 'இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!' என முதலில் கூறுங்கள். 6அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். 7அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே வீடுவீடாய்ச் செல்ல வேண்டாம். 8நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். 9அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள். 10நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அதன் வீதிகளில் சென்று, 11'எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுகிறோம். ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்' எனச் சொல்லுங்கள். 12அந்த நாளில் அவ்வூர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விட கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்.

17பின்னர் எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பிவந்து, 'ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன' என்றனர். 18அதற்கு அவர், 'வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன். 19பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது. 20ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பதுபற்றி மகிழவேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்' என்றார்.

யூத இராபிகளும் கிரேக்க மெய்யியளாளர்களும் தங்களுக்கென்று சீடர்களைக் கொண்டிருந்தனர். இவர்களின் மெய்யறிவு அடுத்த தலைமுறைக்கு சீடர்கள் வாயிலாக கடத்தப்பட்டது. முதல் ஏற்பாட்டில் சில இறைவாக்கினர்களும் தங்களுக்கென்று சீடர்களைக் கொண்டிருந்தனர். இதற்கு எலியா - எலிசா நல்ல உதாரணம். பவுல்கூட கமாலியேல் என்ற பரிசேய இராபியின் சிடனாக இருந்தார். எம்முடைய தமிழ் இலக்கிய வரலாற்றிலும் இப்படியான ஆசிரியர் -சீடர் வழக்கத்தை காண்கின்றோம். இயேசுவின் சீடர்களை குறிக்க μαθητής மதேடேஸ் என்ற கிரேக்க சொல் அதிகமாக பாவிக்கப்படுகிறது. இந்த சீடர்கள் இயேசுவை பின்பற்றிய மக்கள்கூட்டத்திலிருந்து வேறுபட்டவர்கள். சில சீடர்கள் பலவேறு கட்டங்களில் இயேசுவைவிட்டு பிரிந்து சென்றார்கள் (காண்க யோவான் 6,60❆). இயேசுதான் நாம் அறிந்தபடி பெண்களுக்கு இந்த சீடத்துவத்தை முதலில் கொடுக்கிறார். இயேசுவின் பெண் சீடர்கள்தான் இறுதிவரை இயேசுவோடு கூட நடந்த பெருமையை பெறுகிறார்கள். தற்போதும் கூட பெண் கத்தோலிக்கரே நம் ஆலயங்களை நிறைப்பது நோக்கப்பட வேண்டும். 
நற்செய்திகள் மூன்று விதமான சீடர்கள் கூட்டத்தை காண்பிக்கின்றன, அவை பெரிய சீடர்கள் கூட்டம், பன்னிருவர் (திருத்தூதர்கள்), அத்தோடு இயேசுவிற்கு நெருக்கமாக இருந்த மூவர் (பேதுரு, யோவான், யாக்கோபு). லூக்கா ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் அனைவரையுமே சீடர்கள் என்று அழைப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் (காண்க தி.ப 6,7❆❆). இந்த பகுதியில் நாம் சந்திக்கும் எழுபது அல்லது எழுபத்திரண்டு சீடர்கள், லூக்காவிற்கு மட்டுமே உரிய தனித்துவமான பகுதிகளில் ஒன்று. ஆனால் இதிலுள்ள கடைசி வரிகளை லூக்காவும் மத்தேயுவும்; பொதுமூலத்திலிருந்து பெற்றிருக்க வேண்டும் (ஒப்பிடுக: மத் 9,37- லூக் 10,2). யார் இந்த எழுபதுபேர் அல்லது எழுபத்திரண்டுபேர் என்பது இன்னும் தேடப்படுகின்ற விடயம்.
(❆ அவருடைய சீடர் பலர் இதைக் கேட்டு, 'இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?' என்று பேசிக் கொண்டனர்)
(❆❆ கடவுளது வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது. சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப் பெருகிக் கொண்டே சென்றது. குருக்களுள் பெருங் கூட்டத்தினரும் இவ்வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நம்பிக்கை கொண்டனர்.)

வ.1: இந்த எழுபதுபேர், எழுபத்திரண்டு பேர் என சில முக்கியமான பிரதிகளில் காணப்படுகின்றது. ஆரம்ப கால திருச்சபை தந்தையர்கள் இவர்களை எழுபத்திரண்டுபேர் என்றே கருதினர். இந்த எழுபத்திரண்டு, மேசேயின் எழுபது மூப்பர்களை நினைவூட்டுகிறது (காண்க எண் 11,16❆). இன்னும் பல முதல் ஏற்பாட்டு உதாரணங்கள் எழுபதின் முக்கியத்துவத்தை காட்டுகின்றன (இணை 10,22: நீதி 8,30: 2அரச 10,1). செப்துவாஜின்ட் (LXX)என்ற முதல் ஏற்பாட்டு கிரேக்க விவிலியத்தை எபிரேயத்திலிருந்து மொழிபெயர்த்வர்களின் எண்ணிக்கையாகவும் எழுபதே நம்பப்படுகிறது. பின்னர் 
இவர்களின் எண்ணிக்கைகூட எழுபத்திரண்டு என்று மாறியது. ஆக இந்த எழுபது அல்லது எழுபத்திரண்டு என்பது ஒரு குறியீட்டு அடையாளம் என்றே கருதத்தோன்றுகிறது. இது இயேசுவின் அரசும் அதன் பணித்துவமும் இப்போது யூதர்களையும் தாண்டி முழு உலகையும் அரவனைப்பதைக் காட்டுகிறது. அத்தோடு இவர்கள் இயேசு போக இருந்த ஊர்களுக்கே செல்கின்றனர், இதனால்
இயேசுவின் பார்வையில் அனைவரும் உள்வாங்கப்பட்;டிருக்கிறார்கள் என எடுக்கலாம். இவர்கள்
இருவர் இருவராக அனுப்பப்படுவது, இயேசுவின் பணி ஒரு சமூக அடையாளம், அத்தோடு அது தனிமனித திறமையில் தங்கியிருப்பதில்லை என்பதையும் காட்டுகிறது. 
(❆ஆண்டவர் மோசேயிடம் சொன்னது இஸ்ரயேல் மூப்பரில் எழுபதுபேரை என்னிடம் கூட்டிவர் அவர்கள் மக்களுள் உனக்குத் தெரிந்தவர்களாகவும், பெரியோர்களாகவும், அதிகாரிகளாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்; அவர்களைச் சந்திப்புக் கூடாரத்துக்கு அழைத்துவா அவர்கள் அங்கே உன்னோடு நிற்கட்டும்.)

வவ. 2-12 பல சீடத்துவ அறிவுறுத்தல்களையும் எச்சரிக்கைகளையும் முன்வைக்கிறன. இதில் பல அறிவுறத்தல்கள் பன்னிருவருக்கு கொடுத்தவற்றுடன் ஒத்துப்போகிறது (ஒப்பிடுக 9,1-6).

வ.2: கடவுளை அறுவடையின் முதலாளியாக காட்டுவதும் ஒரு முதல் ஏற்பாட்டு உவமானம் (எரே 2,3). இயேசுவின் சீடராக இருப்பது ஒரு அழைத்தல். அது கடவுளிடமே முழுவதுமாக தங்கியிருக்கிறது, யாரும் இதற்கு உரிமைகொண்டாட முடியாது என்பதை இது காட்டுகிறது. அத்தோடு, தங்களை முதலாளிகள் என நினைக்கும் பணியாளர்களை, 'வேலையாட்கள்' என்றே லூக்கா சொல்வதை அவதானமாக நோக்க வேண்டும். (கடவுள் மட்டுமே முதலாளி). 

வ.3: இந்த வசனம் பணித்துவத்தின் ஆபத்தை முற்காட்டுகிறது. ஓநாய் பலைவனத்திலும் வீட்டுப்புறங்களிலும் தந்திரமாக வேட்டையாடும் ஆபத்தான மிருகம். இதன் வருகை எதிர்வு கூறப்பட முடியாதது. நேருக்கு நேர் மோதாத ஆபத்தான கோழைகளையும் இந்த மிருகத்திற்கு ஒப்பிடுவர். இயேசுவை செம்மறிக்கு ஒப்பிடுவதை பல இடங்களில் காண்கிறோம், இங்கே சீடர்களையும் இயேசு தன்சாயலுக்கு ஒப்பிடுகிறார். 

வ.4: பாரமில்லா இலகுவான பணிப் பயணத்தை மேற்கொள்ள ஆண்டவர் கேட்கிறார். இந்த வரி ஒரு அவசரமான நிலையைக் காட்டுகிறது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள முதலாவது பை, காசுப் பை. அது வழியில் தேவைகளுக்கு உதவுவது. அதனை தவிர்த்து கடவுளின் வழங்களில் தங்கியிருக்கச் சொல்கிறார். வேறு பை என்பது பிச்சைப் பையைக் குறிக்கும். இதனை வேண்டாமென சொல்வது, கடவுளில் மட்டுமே தங்கியிருக்கச் சொல்கிறார் என எடுக்கலாம். கீழைத்தேய மக்கள் வணக்கம் சொல்வது சாதாரணம், அதனையும் தவிர்த்து ஒரு அவசரத்தை காட்டச் சொல்கிறார் ஆண்டவர். 

வவ.5-6: அமைதி ஆண்டவர் மட்டுமே தருகின்ற ஆசீர் அதனையே இவர்கள் எடுத்துக்கொடுக்க வேண்டும் என்கிறார். ஆனால் அது இலவசமாக ஆண்டவரிடம் இருந்து வந்தாலும், பெறுநர்கள் விரும்பாவிட்டால் அது கடவுளிடமே திரும்பும் என்ற ஒரு உண்மை இங்கே புலப்படுகிறது. 

வ.7: வேலையாட்கள் கூலிக்கு உரியவர்கள் என்பது எபிரேய-கிரேக்க பொருளாதார ஒழுக்கவியலில் ஒன்று. ஆரம்ப கால திருச்சபையில் பணியாளர்கள் மக்களின் கவனிப்பில் தங்கியிருந்ததை இது காட்டுகிறது. அதே வீட்டில் தங்கியிருந் வீட்டாரின் விருந்தோம்பலை பெற்றுக்கொள்வதன் மூலம், பணியாளர்களும் சமூகத்தில் ஒருவரே என்ற சிந்தனையை பெறசெய்கிறார் இயேசு. ஒவ்வொரு வீடுவீடாக செல்ல இவர்களுக்கு காலம் போதாமலிருந்திருக்கலாம்.

வ.8-9: இறையாட்சி லூக்கா நற்செய்தியின் முக்கிய கூறுகளில் ஒன்று, இந்த இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பது சாத்தானின் ஆட்சி முடிந்துவிட்டது என்பதைக் குறிக்கின்றது. சாத்தானின் ஆட்சியின் அடையாளங்களான நோய், பிணிகள் குணமாக்கப்படுவதும் இதனையே குறிக்கிறது. 

வவ.10-12: இறையாட்சியைப் பற்றி அறிவிப்பு இலவசமாக கிடைத்தாலும், அதனை பெற்றுக்கொள்ள முதலில் நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை இல்லாத இடத்தில் இறையாட்சி வலுக்கட்டாயமாக ஆட்சி செலுத்தாது என்பதை இது புலப்படுத்துகிறது. ஆரம்ப கால திருச்சபை பல இடங்களில் சந்தித்த வெறுப்புக்களை இந்த வரிகள் மறைமுகமாக காட்டுகின்றன. தூசி பாலஸ்தீனாவில் அனைவரும் அறிந்திருந்த இயற்கையான அடையாளம். அவை அனைவரின் கால்களிலும் ஒட்டியிருக்கும் அந்த தூசிகளையே இறையாட்சியை வெறுப்பவர்களுக்கு அடையாளமாக்குகிறார் லூக்கா. சொதோம் நகரின் தண்டணையை இஸ்ராயேலர் நன்கு அறிந்திருந்தனர் (தொ.நூல் 19). இந்த நகரை வரலாற்று கதைகளின் பொருட்டு இஸ்ராயேலர் வெறுத்தனர், ஆனால் இந்த நகரை விட இறையாட்சியை வெறுப்போரின் நிலை இருக்கும் என லூக்கா எச்சரிக்கிறார்.  

வவ.17-20: இந்த பகுதி சீடர்களின் திரும்பிவருதலையும் அவர்களின் மகிழ்ச்சியையும் விவரிக்கின்றன. 

வ.17: சாத்தானின் வீழ்ச்சி இறையாட்சியின் வருகையைக் காட்டுகிறது. இயேசுவின் பெயருக்குத்தான் பேய்கள் பணிகின்றன என்பது இயேசுவின் பெயரின் அதிகாரத்தை காட்டுகிறது. 'பேய்கள்கூட' என்பது இயேசுவின் பெயருக்கு மேலும் பல சக்திகள் பணிகின்றன என்பதையும் காட்டலாம். 

வவ.18-19: இயேசு எச்சரிக்கையுடன் அக்கறைகாட்டுகிறார். வானத்திலிருந்து சாத்தான் விழுவது, அவர்கள் தங்கள் அதிகாரத்திலிருந்து தூக்கியெறியப்படுவதைக் காட்டுகிறது. பாம்புகளும் தேள்களும் தீய சக்திகளின் அல்லது மாற்று தெய்வங்களின் அடையாளங்கள். அவை சாதாரணமாக மனிதர்களின் பாதங்களையே தீண்டி ஆபத்தை விளைவிக்கின்றன. ஆனால் இனி இவைகளால் சீடாக்ளின் பாதங்களுக்கு ஆபத்தில்லை என்பதை ஆண்டவர் உணர்த்துகிறார். 

வ.20: இந்த வரி மிக முக்கியமான வரி. சீடர்களின் மகிழ்ச்சி, தங்களின் வெற்றிகள் மற்றும் திறமைகளாக இருக்கக்கூடாது, மாறாக ஆண்டவரிலேதான் இருக்கவேண்டும் என்று, லூக்கா அக்காலத்திலிருந்த தற்பெருமைகளை சுட்டிக்காட்டுவது போல தோன்றுகிறது. சில வேளைகளில் பணியின் வளர்ச்சியும், எதிர்பாராத அதிசயங்களும் சீடர்களை இயேசுவிடம் இருந்துகூட பிரித்துவிடலாம் என்ற உண்மை இங்கே புலப்படுத்தப்படுகிறது. எதிரிகளின் தோல்விகளில் உண்மையான வீரன் அதீத மகிழ்சி கொள்ள மாட்டான் ஏனெனில் வீழ்பவர் இன்னும் பல சக்தியோடு எழும் வாய்பு அதிகமாகவே இருக்கும். இது சாத்தானுக்கு நன்றாக பொருந்தும். சாத்தனை கடவுளால் மட்டும்தான் கட்டுப்படுத்த முடியும், சில வேளைகளில் பேய்யோட்டுகிறவர்கள், ஆண்டவரை விட்டு விலகி அதே பேய்களுக்கு அடிமையாவதை பார்க்கிறோம். சீடர்கள் மகிழவேண்டியது அவர்களின் பெயர்கள் இயேசுவிற்கு நெருக்கமாக இருக்கிறது என்பதிலேயே என்று லூக்கா சொல்வது கிறிஸ்தவ ஆண்மீகத்தின் அடித்தளத்தை காட்டுகிறது. 

சீடத்துவம் ஓர் அழைப்பும் சாட்சியமும் ஆகும். 
இயேசு சீடர்களை அழைத்து உருவாக்குகிறார்.
அனைத்து கிறிஸ்தவர்களும் பல வழிகளில் விசேட சீடர்களாகலாம்.
சீடர்களின் ஒரே சொத்து இயேசு, அவரிடமே அமைதியும் இரக்கமும் உண்டு.
சீடர்கள் தங்கள் வெற்றிகளையும் திறமைகளையும் பற்றி பெருமை பாராட்டுவது ஆபத்தானது. 
சீடர்கள், பணியாட்களும் வேலையாட்களுமே. 
இறையாட்சியும் அதன் மக்களுமே சீடத்துவத்தின் முதலாளிகள்.

அன்பான ஆண்டவரே நீர் அழைத்தவர்கள் உம்மிலே மட்டும் தங்கியிருந்து மகிழ,
தொடர்ந்து அவர்களை நெறிப்படுத்தி, உருவாக்கும். ஆமென்.

மி. ஜெகன்குமார் அமதி
உரோமை,
புதன், 29 ஜூன், 2016



வியாழன், 23 ஜூன், 2016

பொதுக்காலம் பதிமூன்றாம் ஞாயிறு 26,06,2016: Thirteen Sunday in Ordinary Times. C



பொதுக்காலம் பதிமூன்றாம் ஞாயிறு
26,06,2016
'ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர்.'
(தி.பா 16,10)
முதலாம் வாசகம்:1அரசர் 19,16.19-21
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 15
இரண்டாம் வாசகம்: கலாத் 5,1.13-18
நற்செய்தி: லூக்கா 9,51-62

1அரசர் 19,16.19-21
16பேல் மெகோலாவைச் சார்ந்த சாபாற்றின் மகன் எலிசாவை உனக்குப் பதிலாக இறைவாக்கினராக அருள்பொழிவு செய். 19எலியா அங்கிருந்து சென்று, சாபாற்றின் மகன் எலிசாவைக் கண்டார். அப்பொழுது அவர் ஏர் 
பூட்டி உழுதுகொண்டிருந்தார். அவருக்கு முன்னே பதினோர் ஏர்கள் இருந்தன. பன்னிரண்டாம் ஏரைத் தாமே ஓட்டிக் கொண்டிருந்தார். எலியா அவரிடம் சென்று, தம் மேலாடையை அவர் மீது தூக்கிப் போட்டார். 20எலிசா அவரைக் கடந்து செல்கையில் ஏர் மாடுகளை விட்டுவிட்டு எலியாவிடம் ஓடிவந்து, 'நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும். அதன்பின் உம்மைப் பின்செல்வேன்' என்றார். அதற்கு அவர், 'சென்று வா, உனக்கு நான் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன்!' என்றார்.
21எலிசா எலியாவை விட்டுத் திரும்பி வந்து, ஏர் மாடுகளைப் பிடித்து, அடித்துத் தாம் உழுத கலப்பைக்கு நெருப்பு மூட்டி, அம்மாட்டு இறைச்சியைச் சமைத்து, மக்களுக்குப் பரிமாற அவர்களும் அதை உண்டனர். பின்பு அவர் புறப்பட்டுப் போய் எலியாவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்யலானார்.

இஸ்ராயேலின் கடவுள் தான் அனைத்துலகின் கடவுள், அவர்தான் அனைத்து வரலாறுகளையும், அசைவுகளையும் தீர்மானிக்கிறார் என்பதனை இந்த முதலாவது வாசகத்தில் காண்கின்றோம். அரசர்கள் காலத்தில், இறைவாக்கினர்கள் முக்கியமாக எலியாவும், எலிசாவும்; மிக காத்திரமாக ஆட்சியாளர்களையும் அரச வம்சங்களையும் தீர்மானிக்கிறவர்களாக இருந்தததை காணமுடிகிறது. எலியா ஒம்ரியின் வம்சத்தை நேரடியாகவே விமர்சிப்பவராக இருந்தார். இந்த ஒம்ரிதான் சமாரியாவை இஸ்ராயேலுக்கு தலைநகரமாக்கி, வட அரசை தென் அரசைவிட பல வழிகளில் உயர்த்தியவர். விவிலியத்தின் பல புத்தகங்கள் தென்னரசின் செல்வாக்குகளை உயர்த்திப் பேசுகின்றன. இஃது பல வேளைகளில் இந்த ஒம்ரியும் அவர் மகன் அகாபும் தவறானவர்களாக விவிலியத்தில் காட்டப்படுகிறார்கள். ஒம்ரியின் வம்சத்தை சாடி, சபிக்கின்ற எலியா இறைவாக்கினர், இன்னொரு வம்சத்தை இஸ்ராயேலுக்கு பரிந்துரை செய்கிறார். அத்தோடு தனக்கு பின் தன் இறைவாக்கு பணிதொடர இன்னொரு இறைவாக்கினரையும் ஏற்பாடு செய்கிறார். 

வ. 16: எலிசா இறைவாக்கினர் வட அரசில் மிகவும் அறியப்பட்ட இறைவாக்கினருள் ஒருவர், அத்தோடு தன் முன்னோடியான எலியாவைப்போல அதிசயங்களுக்கு பெயர்பெற்றவர். இவருடைய பெயருக்கு (אֱלִישָׁע எலிஷா) இரண்டு அர்த்தங்கள் தரப்படுகின்றன. 
அ) 'கடவுளின் மனிதன்' 
ஆ) 'கடவுள் மீட்கிறார்'. 
யோசுவா மோசேயின் இடத்தை நிரப்பியது போல இவர் எலியாவின் இடத்தை நிரப்புகிறார். எலியா என்றால் 'என் கடவுள் ஆண்டவர்' என்று பொருள். ஆசிரியர் இங்கே எலிஷா, 'கடவுள் மீட்கிறார்' என்ற பொருளில் ஒரு புதிய இறையியலைப்; புகுத்துவதை வாசகர்கள் காணலாம். எலிசாவை பற்றிய கதைகள் தனித்துவமாக வட அரசில் பரவலாக பாவனையில் 
இருந்ததாகவும், வடஅரசின் அழிவின் பின்னர் இவை தென்னரசில் அரசர்கள் புத்தகத்துள் 
இடம்பெற்றிருக்கலாம் என சிலர் வாதாடுகின்றனர். எலிசா இயேசுவைப் போல் ஊர் ஊராக கால்நடையாய் செல்கிறார், புதுமைகள் செய்கிறார், அவருடன் பல சீடர்கள் பயணம் செய்கின்றனர். அவரின் அதிசயங்கள் சில:

அ). மாசடைந்த நீரூற்றை தூய்மையாக்குதல் (2அரச 2,19-22)
ஆ). ஏழைக் கைம்பெண்ணுக்கு உதவிசெய்தல் (2அரச 4,1-7)
இ). நஞ்சுக் கூழை தூயதாக்குதல் (2அரச 4,38-41)
ஈ). இருபது அப்பங்களை நூறுபேருக்கு கொடுத்தல் (2அரச 4,42-43)
உ). ஆற்றில் விழுந்த கோடரியை மிதக்கச்செய்தல் (2அரச 6,1-7)
ஊ). சூனாமிய பெண்ணின் மகனை உயிர்ப்பித்தல் (2அரச 4,-37)
எ). இறந்த எலிசாவின் எலும்புகள் இறந்த இன்னொருவருக்கு உயிர்தரல் (2அரச 13,20-21)

எலிசாவின் பல புதுமைக் கதைகள் எலிசாவை மையப்படுத்தியதாகவும், அவரது இறைவாக்கு ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவதாகவும் அமைகின்றன. முக்கியமாக சில சிறுவர்கள் எலிசாவை மொட்டை மனிதர் என ஏளனம் செய்ததும் அவர்களை அவர் சபித்து தண்டித்ததும் இந்த பின்புலத்தை மறைமுகமாக காட்டுகின்றது (காண்க 2அரச 2,23-25). அத்தோடு எலியா வானகம் செல்லும் முன் எலிசா எதனைப் பெற்றுக்கொண்டார் என்பதிலும் பல புதிய சிந்தனைகள் முன்வைக்கப்படுகின்றன. எலிசா உண்மையிலே எலியாவின் ஆவியில் இரண்டு மடங்கு கேட்கவில்லை ஏனெனில் ஒரு உண்மையான அன்புச் சீடரால் அதனைக் கேட்க முடியாது, மாறாக எலிசா, எலியாவின் ஆவியில் இரண்டு பங்குகளைத்தான் கேட்டார் என்று எபிரேய பாடம் காட்டுகிறது (காண்க 2அரச 2,9). 

வ. 20:  எலிசாவின் பன்னிரண்டு நுகங்கள் அவர் ஒரு பணக்காரராக அல்லது சமூதாயத்தில் உயர்ந்தவராக இருந்ததை காட்டுகிறது. அத்தோடு சாதாரண முதலாளிகள் போலல்லாது அவரும் வேலை செய்பவராகவே காட்டப்படுகிறார். எலியா எலிசாமேல் போட்ட சால்வையானது,  
இறைவாக்கினர் பாவிக்கும் ஒரு வகை மிருக முடியினால் ஆன கம்பளித் துனியாகும் என்னும் வாதமும் உண்டு. இது இறைவாக்கு பணியை அடையாளப்படுத்துகிறது. எலிசா தானாக விரும்பி 
இந்த இறைவாக்கு பணியை தெரிந்து கொள்ளவில்லை மாறாக அது அவருக்கு கொடுக்கப்படுகிறது. எலியா மற்றும் எலிசாவின் உரையாடல்கள், அவர்களுள் இருந்த நல்ல புரிந்துணர்வைக் காட்டுகிறன. எலிசா தன் பெற்றோரின் மேல் அக்கறையுள்ளவராக இருக்கிறார். இது ஒரு முக்கியமான யூத அல்லது இஸ்ராயேல் விழுமியம் (காண்க வி.ப 20,12).

வ. 21: எலிசாவின் இந்த விருந்தோம்பல் மிகவும் நோக்கப்படவேண்டியது. தன்னுடைய சொத்துக்களையே விருந்தாக்குகிறார். அவர் பன்னிரண்டாவது கலப்பையை மட்டும்தான் எரித்தார் என எடுக்கலாம். இதனால் முழுவதுமாக தன்னை அர்ப்பணிக்கிறார். கலப்பை மற்றும் நுகம் சில வேளைகளில் அடிமைத்தனத்தின் அடையாளங்களாக இருந்தாலும் இங்கே இவை அதிகாரத்தை குறிக்கிறன. எலிசா தன் முதல் அதிகாரத்தை தியாகம் செய்கிறார். விரும்தோம்பல் இஸ்ராயேல் சமூகத்தில் மிக முக்கியமானது இங்கே அது எலிசா தன்னுடைய இறைவாக்குப் பணியை அதிகமாக நேசித்தார், அத்தோடு அவர் நன்பர்கள் மற்றும் உறவினர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர் என்பவற்றைக் காட்டுகிறது. சில புதிய ஏற்பாட்டு அழைத்தல் காட்சிகளைப் போல இது இருப்பதனை இங்கு நோக்கலாம். 

திருப்பாடல் 16
1இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். 
2நான் ஆண்டவரிடம் 'நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை' என்று சொன்னேன். 
3பூவுலகில் உள்ள தூயோர் எவ்வளவோ உயர்ந்தோர்! அவர்களோடு இருப்பதே எனக்குப் பேரின்பம். 4வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றுவோர் தங்கள் துன்பங்களைப் பெருக்கிக்கொள்வர்; அவற்றுக்குச் செலுத்தப்படும் இரத்தப் பலிகளில் நான் கலந்து கொள்ளேன்; அவற்றின் பெயரைக்கூட நாவினால் உச்சரியேன். 
5ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே 
6இனிமையான நிலங்கள் எனக்குப் பாகமாகக் கிடைத்தன் உண்மையாகவே என் உரிமைச் சொத்து வளமானதே. 
7எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. 
8ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். 
9என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். 
10ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். 
11வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.

தாவீதின் மிக்டாம் (מִכְתָּם לְדָוִד) என்று இந்தப் பாடல் தொடங்குகின்றது. இந்த மிக்டாமின் அர்த்தம் என்னதென்று தெளிவு படுத்தப்படவில்லை. அதிகமானவர்கள் இந்த பாடலின் ஆசிரியராக தாவீதையே கருதுகின்றனர், அல்லது இது தாவீதுக்கு அழகாக பொருந்துகின்றது. அவர் இதனை தன்னுடைய மரண படுக்கையில் பாடினார் என்றும் சிலர் வாதாடுகின்றனர். 

வவ. 1-3:  ஆசிரியர் ஒரு உண்மையான விசுவாசி என்பதை இந்த வரிகள் காட்டுகின்றன. அடைக்கலம் புகுதல், செல்வம் போன்றவை அக்கால நாடோடி மற்றம் போரியல் வாழ்வில், ஒருவர் தேடுகின்ற முக்கியமான இலக்குகளாக இருந்தன. ஆசிரியர் தனது செல்வமாகவும், அடைக்கலமாகவும் ஆண்டவரைக் காண்பது, அவரின் விசுவாசத்தின் ஆழத்தைக் காட்டுகிறது. ஆண்டவரே என் செல்வம் என்பது எபிரேய மூல மொழியில், 'ஆண்டவரே என் நன்மைத்தனம்' என்றே உள்ளது. இந்த உலகில் தூயவராய் இருப்போரே மேன்மக்கள் என்ற வாதத்தையும் இந்தப் பாடல் முன்வைக்கிறது. 

வ. 4: வேற்றுத் தெய்வங்களும் துன்பங்களும் ஒன்றோடோன்று தொடர்பு பட்டுள்ளதாக இந்தப்பாடல் காட்டுகிறது. அந்த காலத்தில் இப்படியான வழிபாடுகளிலும் இஸ்ராயேலர் கலந்தனர் என்பதை இந்த பாடல் மறைமுகமக காட்டிச் சாடுகிறது. ஆசிரியர் இப்படியான தவறுகளை தான் செய்ய மாட்டார் என அறிக்கையிடுகிறார். 

வ. 5-6: இந்த வரிகளை, இந்த திருப்பாடலின் மையக்கருத்தாக எடுக்கலாம். ஐந்தாவது வரியில் ஆசிரியர் ஆண்டவரை தன்னுடைய நிலச் சொத்துக்களைவிட மேலான சொத்தாக ஒப்பிடுகிறார். கிண்ணம் என்பது பல அர்தங்களை இஸ்ராயேலின் ஆன்மீகத்தில் குறிக்கிறது. பொருளாதாரத்தின் பலமான ஸ்திரத்தன்மையையும் அது குறிக்கும். இங்கே கிண்ணம் அந்த அர்த்தத்தில் வருவதுபோலவே இருக்கிறது. அத்தோடு ஆண்டவரை இவர் உடமையாக்கிக் கொண்டுள்ளதால் அந்த அனுபவத்தை இனிமையான நிலத்திற்கும், வளமான எதிர்காலத்திற்கும் ஒப்பிடுகிறார். 

வவ. 7-8: 'மனச்சான்று' என்று தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது உண்மையில் சிறுநீரகத்தையை குறிக்கிறது (כִּלְיָה கில்யாஹ்- சிறுநீரகம்). சிறுநீரகம்தான் ஒழுக்கவியலின் சிந்தனையிடம் என்று அக்காலத்தில் கருதப்பட்டது. ஆண்டவரை வலப்பத்தில் வைத்துள்ளது என்பது ஆண்டவரை பலமான இடத்தில் அல்லது பலம் கொடுக்கிற இடத்தில் வைத்துள்ளதை குறிக்கிறது. 

வ. 9: இவர் ஆண்டவரை முக்கியமான இடத்தில் வைத்துள்ளதால், தனது இதயமும் உள்ளமும் மகிழ்வதாக உணர்கின்றார். இங்கே உள்ளம் என்பதற்கு 'கவோட்' (כָּבֵד) என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது, இது சாதாரணமாக மாட்சி அல்லது மகிமையைக் குறிக்கும், இங்கே இது ஒருவருடைய ஈரலைக் குறிப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஈரல் உள்ளுணர்வுகள் முக்கியமான சந்தோசம், மகிழ்ச்சி போன்றவற்றின் உரைவிடமாகவும் கருதப்பட்டது. 

வவ. 10-11: பத்தாவது வசனம் அழகாக திருப்பிக்கூறும் எபிரேய கவி வகையை (chiasmus) பிரதிபலிக்கிறது. 'என்னை' என்பது உயிரை அல்லது ஆன்மாவை குறிக்கிறது, அது பத்தாம் வரியின் இரண்டாவது பகுதியில் 'அன்பன்' என்று வருகிறது. சீயோலும் பாதாளமும் ஒத்தகருத்தாக திருப்பிக் கூறப்பட்டுள்ளன. 
உ-ம் என்னைப் - அன்பனைப்
சீயோல்(பாதாளம்) - படுகுழி. 
வாழ்வின் வழி என்பது, உருவக அணியில் உயிரை பாதுகாத்தலை பாடும் ஒரு முறை. 'நிறைவான மகிழ்சி' என்பது மிக ஆழமான விவிலிய வார்த்தைகள், ஆண்டவர்தான் உண்மையானதும் நிறைவானதுமான மகிழ்சி என்பது இவருடைய நம்பிக்கையின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. இந்த திருப்பாடலின் காலத்தில், பலர் பேரின்பத்தை (נָעִים நஇம்- மகிழ்சிகரமான, அழகான, இனிமையான) பல இடங்களில் கண்டனர்: போரில், மெய்யறிவில், சிலைகளில், இயற்கையில் மற்றும் சிற்றின்பத்தில். இந்த ஆசிரியர் அந்த இனிமையை கடவுளின் இருப்பில் காண்கிறார், நம்மையும் அதனை உணரக்கேட்கிறார். 

கலாத் 5,1.13-18
1கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார்; அதில் நிலைத்திருங்கள். மீண்டும் அடிமைத்தளை என்னும் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.

13அன்பர்களே, நீங்கள் உரிமை வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; அந்த உரிமை வாழ்வு ஊனியல்பின் செயல்களுக்கு வாய்ப்பாய் இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவருக்கு ஒருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள். 14'உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக' என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது. 15ஆனால் நீங்கள் ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால் ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள். எச்சரிக்கை! 16எனவே நான் சொல்கிறேன்; தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்; அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள். 17ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. 
தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது. இவை ஒன்றுக்கொன்று எதிராய் உள்ளதால் நிங்கள் செய்ய விரும்பவதை உங்களால் செய்ய முடிவதில்லை. 18நீங்கள் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டால் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாய் இருக்கமாட்டீர்கள்.

இன்றைய இரண்டாவது வாசகம் கடந்த வாரங்களைப்போல, கலாத்தியருக்கு பவுல் எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பவுல் இந்தப் பகுதியிலும் கிறிஸ்தவ அழைப்பின் மகத்துவத்தை தொடர்ந்து வியாபிப்பதை காணலாம். இதற்கு முற் பகுதியில் (5,1-12) விருத்தசேதனத்தைப் பற்றி பேசிய பவுல் இந்தப் பகுதியில் அன்பின் முக்கியத்துவத்தை பற்றி விவாதிக்கிறார். பவுல் இங்கே அன்பிற்கு 'அகாப்பே' ἀγάπη என்ற சொல்லையே பாவிக்கிறார். இது சாதாரண விருப்பம், இஷ்டம், சிநேகம் என்பதனையும் தாண்டி, அழகான தியாக இறையில் இறையன்பை குறிக்கிறது. பவுல் இந்த வார்த்தையை அதிகமாகவே பாவிக்கிறார். இந்த வார்த்தைக்கும் அகாப்பே உணவிற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. இந்த அகாப்பே உணவு ஆண்டவரின் நற்கருணை கொண்டாட்டத்தின் ஆரம்பத்தில், தொடக்க கிறிஸ்தவர்களால் முதல் நிகழ்வாக கடைப்பிடிக்கப்பட்டது. 

வ. 1: பவுலுடைய இந்த வரி அவதானமாக நோக்கப் படவேண்டும். கிரேக்க விவிலியம் 
இதனை இவ்வாறு கொண்டுள்ளது. 'விடுதலைக்காக கிறிஸ்து நம்மை விடுதலையாக்கியுள்ளார், ஆகவே அவதானமாய் இருங்கள். மீண்டும் அடிமைத்தனத்தின் நுகத்தை ஏற்றுக்கொள்ளாதீர்கள' தமிழில் ஐந்தாம் வேற்றுமையுருபு பாவிக்கப்பட்டுள்ளது (ablative case- இருந்து ab). மூல கிரேக்க பாடம் நான்காம் வேற்றுமையுருபை பாவிக்கிறது (dative caseling- ஆக, பொறுட்டு ad). இது, கிறிஸ்து நம்மை விடுதலையாக்கியதன் நோக்கத்தையும் இலக்கையும் தெளிவாக காட்டுகிறது. விடுதலை பெற்றவர்களாய் இருக்கவே நம்மை அவர் விடுதலையாக்கினார் என்ற வரி, கிறிஸ்து தரும் வாழ்வின் சாரம்சத்தைக் காட்டுகிறது. இந்த சுதந்திரம் அல்லது விடுதலை என்பது உரிமை வாழ்வை கிரேக்க உலகில் குறித்துக் காட்டியது. அத்தோடு இதனை மோசேயின் சட்டங்களிடமிருந்து வரும் விடுதலையாகவும் எடுக்கலாம். பவுல் இங்கு இச்சை கலந்த காட்டுச் சுதந்திரத்தை பற்றி வாதிக்கவில்லை என்பதனை அவதானமாக வாசிக்க வேண்டும். 

வ. 13: உரிமை வாழ்வு (விடுதலை) மற்றும் ஊனியல்பின் வாழ்வு போன்றவை கிரேக்க மெய்யியலில் ஆதிக்கம் செலுத்திய கருத்தியல்கள். இந்த விடுதலை அல்லது உரிமை வாழ்வு என்பது அரசியல், அக, புற விடுதலைகளையும் குறித்தது. இந்த பின்புலத்தில் கிறிஸ்து கொண்டுவந்த முழுமையான விடுதலை வாழ்வை பவுல் நினைவூட்டுகிறார். சில வேளைகளில் இந்த விடுதலை தவறான வழியில் கோடிடப்பட்டது. தான்தோன்றித்தனமான வாழ்வுக்கும், எதையும் செய்யும் உரிமையாகவும் இது தவறாக பாவிக்கப்பட்டது. பவுல் இப்படியான தவறான சுதந்திரத்தை இன்னொரு அடிமைத்தனம் என்கிறார். அதாவது உடலிச்சையின் அடிமைத்தனம் என்கிறார். கிறிஸ்து தந்த விடுதலை, அன்பிற்கு சேவை செய்வதற்கே, என்று பவுல் சொல்வது இன்னொரு அழகான பவுலின் வாதத்தை முன்வைக்கிறது. விடுதலை என்பது நல்லதை செய்வதற்கேயன்றி விரும்பியதெல்லாம் செய்வதற்கல்ல என்ற பவுலின் வாதம் மீண்டும் மீண்டும் கலாத்தியர் திருமுகத்தில் மேலோங்குவதைக் காணலாம். 

வ. 14: இந்த அன்புக் கட்டளையை இயேசு ஆண்டவர் Nyptah; 19,18 இல் இருந்து நன்கு அறிந்திருப்பார். இந்தக் கட்டளையில் 'அடுத்திருப்பவர்' என்பவர் யூத சகோதரர் மட்டுமல்ல மாறாக அனைவரும் என்ற விஸ்தரிப்பை இயேசு முன்வைத்து விளக்கினார், இதனையே பவுலும் ஆழப்படுத்துகிறார். இந்த கட்டளையால்தான் திருச்சட்டம் (தோரா) முழுமைபெறுகிறது என்கிறார் பவுல். 

வ. 15: ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குதல் என்பது மிருகங்கள் வனத்தில் உணவிற்காகவும் 
இருப்பிற்காகவும் செய்கின்ற போராட்ட மனப்பான்பை. இந்த வசனம் கலாத்தியர் திருச்சபையில்
இருந்த பிளவுகளையும் அதன் ஆபத்துக்களையும் நமக்கு நினைவூபடுத்தலாம். (இன்றைய தல திருச்சபைகளில் இருக்கின்ற அசிங்கமான பிளவுகள் திருச்சபையின் ஒருமைப் பாட்டிற்கு ஆபத்தை விளைவிப்பதனை இங்கு நினைவுகூறலாம்). 

வவ. 16-18: தூயஆவிக்கு ஊனியல்பின் இச்சைகளும், தேவையில்லாத திருச்சட்ட அடிமைத்தனங்களும் ஒவ்வாது என்கிறார் பவுல். ஊனியல்பின் இச்சைகளோடு திருச்சட்டத்தை பவுல் ஒப்பிடவில்லை மாறாக தூய ஆவியின் வாழ்விற்கு இவை இடைஞ்சல்களாக இருக்கின்றன என்னும் வாதத்தையே முன்வைக்கிறார். ஊனியல்பு என்று இங்கே வாதடப்படுவது மனிதர்களின் உடல் இச்சைகளை குறிக்கிறது (ἐπιθυμίαν σαρκὸς எபிதுமியான் சார்க்கோஸ் - உடலின் இச்சைகள்).     

லூக்கா 9,51-62
51இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, 52தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். 53அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. 54அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, 'ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?' என்று கேட்டார்கள்.
55அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார். 56பின்பு அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.
57அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, 'நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்' என்றார். 58இயேசு அவரிடம், 'நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை' என்றார். 59இயேசு மற்றொருவரை நோக்கி, 'என்னைப் பின்பற்றிவாரும்' என்றார். அவர், 'முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்' என்றார். 60இயேசு அவரைப் பார்த்து, 'இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்' என்றார். 61வேறொருவரும், 'ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்' என்றார். 62இயேசு அவரை நோக்கி, 'கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல' என்றார்.

தூய லூக்கா, மாண்பு மிகு வைத்தியர் தன்னுடைய நற்செய்தியின் ஒன்பதாவது அதிகாரத்திலே ஆண்டவருடைய விண்ணேற்றத்தை நினைவூட்டுகிறார். ஒன்பதாவது அதிகாரத்திலிருந்து பதினெட்டாவது அதிகாரங்கள் ஆண்டவருடைய எருசலேம் பயணத்தையும் அவ்வழி போதனைகளையும் நினைவூட்டுகின்றன. இன்றைய வாசகப் பகுதி சீடத்துவத்தையும் கேள்விகளையும் அதன் தகுதிகளையும் நினைவூட்டுகின்றன. லூக்கா நற்செய்தி சீடத்துவத்தின் 
இன்னல்களையும் அது சந்திக்கின்ற சவால்களையும் இன்னொரு கோணத்தில் எடுத்தியம்புகிறது. 
இயேசு ஆண்டவரே, இந்த சவால் நிறைந்த சீடத்துவத்தின் முன்னடையாளம் மற்றும் உதாரணம் என்பது லூக்காவின் எடுத்துக்காட்டு. இங்கே லூக்கா காட்டுகின்ற பயணம் எருசலேமை நோக்கியதாக இருந்தாலும், ஒரு பயணத்தில் இவையனைத்தும் நடந்ததா என்ற கேள்விக்கு விடைகாண்பது அரிதாகவே இருக்கிறது. சில நிகழ்வுகள் இந்த அதிகாரங்களின்படி கலிலேயாவில் நடந்திருக்கலாம், ஆனால் லூக்கா அவையனைத்தையும் இங்கே எருசலேம் நோக்கிய பயணத்திலே குழுப்படுத்துகிறார். யோவான் நற்செய்திப்படி இயேசு பல சந்தர்பங்களில் எருசலேம் நகருக்கு சென்றிருக்கிறார் ஆகவே அவருடைய போதனைகள் எருசலேமில் பலவாக இருப்பதுஏற்றுக்கொள்ளக்கூடியது. இந்த 'பயணம்' என்கின்ற எண்ணக்கருதுகோள் இஸ்ராயேல் மக்களின்பாலைவன துன்பங்கள் நிறைந்த பயணத்தை நினைவூட்டுகிறது. இந்த பாலைவன பயணத்தைப் போலவே, துன்பங்கள் நிறைந்த ஆனால் வளமான வாழ்வைநோக்கிய பயணமே சீடத்துவம் என்று லூக்கா காட்சி படுத்துவதாக தோன்றுகிறது. 

சமாரியா-சமாரியர்: 
வடஅரசில் தலைநகராக இருந்த இஸ்ராயேல் நாட்டின் முக்கியமான நகரம். ஒம்ரி என்னும் வட அரசின் அரசனே இந்த நகரத்தை தன்னரசின் தலைநகராக்கினார். எருசலேமைவிட உயரமானதாகவும் சற்று வளமானதாகவும் இது இருக்கிறது. இந்த சமாரியாவில்தான் பிரசித்த பெற்ற கெரசிம் மலையும் அமைந்துள்ளது. வடஅரசின் வீழ்சியின் பின்னர் இங்கே இருந்த இஸ்ராயேலரை அசிரியர்கள் நாடுகடத்தியிருந்தனர். அங்கே அவர்கள் தங்கள் தனித்துவத்தை இழந்தார்கள் அல்லது சிதைந்து போனார்கள் என்று தென் நாட்டு யூதர்க்ள் இன்றுவரைகருதுகின்றார்கள். இவாக்ளுள் சிலர் தென்நாட்டிற்கும் வந்து குடியேறினார்கள். சிலர் எகிப்து போன்ற வேறு நாடுகளுக்கும் சென்றுவிட்டார்கள் என்ற வாதமும் இருக்கிறது. அசிரியர்கள் தாங்கள் கைப்பற்றி அழித்த சமாரியாவில் வேறு மக்களை கொணர்ந்து குடியேற்றினர் இதனால்; இஸ்ராயேல்தமது தனித்துவத்தை இங்கே இழந்தனர் என்பது பபிலோனியாவில் இருந்த வந்த தென்நாட்டு யூதர்களின் வாதம். இந்த இரண்டு குழுக்களான ஒரே மக்களுக்கு பல யுகங்களாக பகைமை வளர்ந்து கொண்டே வந்தது. யூதர்கள் சமாரியர்களை உண்மை இஸ்ராயேலர்களாக ஏற்பதில்லை, பதிலுக்கு சமாரியர் எருசலேமையோ அத்தோடு யூதர்களின் முழு விவிலியத்தையோ உண்மையானதாக ஏற்பதில்லை. 
சமாரியர் தங்களுக்கென்று சமாரிய முதல் ஐந்துநூல்களை (தோரா) வைத்திருக்கிறார்கள் இதுதான் உண்மையான மோசேயின் சட்டம் என்றும் வாதிடுகின்றனர். சமாரியாவில் இஸ்ராயேலரைவிட வேறு மக்களும் வந்து குடியிருந்ததை வரலாற்றில் காணலாம். சமாரியர் பல வழிகளில் யூதர்களை ஒத்திருந்தாலும் சில நம்பிக்கைகளிலும், சம்பிரதாயங்களிலும் அவர்கள் யூதர்களை விட தனித்துவமானவாக்ளாகவே இருந்தார்கள். ஒரே கடவுள், அவர் இணைப்பாளர் மோசே, திருச்சட்டம், மெசியா மற்றும் அவரின் வருகை போன்றவை இவர்களின் விசுவாசத்தின் அடிப்படையாக அமைந்துள்ளது. கெரசிம் மலையில் தங்களுக்கென்று ஒரு கோவிலை கட்டினார்கள். கிரேக்கர் காலத்தில், மக்கபேயரின் கிளர்சியின் பின்னர், யூதர்கள் இந்த மலையில் மனித எலும்புகளை கொட்டி சமாரியர்கனை அசிங்கப்படுத்தினார்கள் என சில வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. எது எவ்வாறெனிலும் சமாரியாவிற்கும் எருசலேமிற்கும் இடைவெளி இருந்ததனைப் போலவே அவர்கள் உறவிலும் பல விரிசல்கள் இருந்தது. (மேலும் சமாரியவையும் சமாரியரையும் பற்றி அறிய:  http://www.bible-history.com/geography/ancient-israel/samaria.html)

வவ. 51-52: இயேசு கலிலேயாவில் இருந்து சமாரியா ஊடாக எருசலேம் செல்கிறார். சாதரணமாக யூதர்கள் சமாரியாவை விலத்தி அதனை சுற்றியே எருசலேமை அடைந்தனர். சமாரியா தீட்டான இடம் என்ற பிழையானதும் திரிவுபடுத்தப்பட்டதுமான வாதம் அவர்களின் சிந்தையில் பலமாக இருந்தது. இயேசு இந்த தீய சிந்தனைக்கு இடம் கொடாமையை இங்கே காணலாம். இயேசு தான் மட்டும் போனது அன்றி தன் சீடர்களையும் இங்கே அதனை செய்ய வைக்கிறார். 

வவ. 53-55: இந்த வசனங்கள் மூன்று விதமான எதிர்வினைகளைக் காட்டுகின்றன.

அ. சமாரியர் வழக்கம் போல யூதர்களை வெறுக்கிறார்கள். இவர்களின் வெறுப்பில் ஒரு சின்ன நியாயம் இருக்கிறது. ஏன் எருசலேமை நோக்கி இயேசுவின் பார்வையிருக்க வேண்டும் என்பது அவர்களின் பிரதேசவாதம் கலந்த கேள்வி. 

ஆ. சமாரியரின் வெறுப்பினைக் கண்ட சீடர்களுக்கு மாற்றுக்கோபம் வருகிறது. யாக்கோபுக்கும் யோவானுக்கும் கோபம் பொங்க, வானிலிருந்து இடியை வரவைக்க ஆண்டவரிடம் அனுமதிகேட்கின்றனர். ஆக அவர்களுக்கு இடிமீது அதிகாரம் இருந்திருக்க வேண்டும் அல்லது தாங்கள் இயேசுவின் சீடர்களாய் இருப்பதனால் அதனை செய்ய முடியும் என்ற நம்பிக்கை 
இருந்திருக்க வேண்டும். சில சிறிய கிரேக்க பாடங்களில் இந்த வசனத்தில் 'எலியா செய்தததைப்போல' என்ற வசனமும் சேர்க்கப்பட்டுள்ளது. இது அரசர்கள் புத்தகத்தில் எலியா வானிலிருந்து நெருப்பை வரவழைத்து படைவீரர்களை தண்டித்ததை நினைவூட்டுகிறது (காண்க 2அர 1,10). யோவானும் யாக்கோபுவும் தங்களது கோபத்திற்கும் மற்றும் ஆசைக்கும் பெயர் பெற்றவர்கள். இவர்கள் தான் ஆண்டவரின் ஆட்சியில் தலைமைப் பொறுப்புக்களை கேட்டவர்கள் (காண்க மாற்கு 10,37). மாற்கு இவர்களைத்தான் 'இடியின் மக்கள்' என பெயரிடுகிறார் (காண்க இவர்கள் ஆண்டவரிடம் விருப்பம் கேட்பது, ஆண்டவர் எப்போதும் யூதர்கள் பக்கம்தான் இருக்கிறார் என்ற அளவுகடந்த நம்பிக்கை இவர்களிடம் இருந்ததை காட்டுகிறது. 

இ. இயேசுவின் எதிர்வினை அவர்களை கடிந்து கொள்கிறது. சீடர்களை தங்களது அர்தமற்ற கோபத்திற்காக கடிந்து கொள்ளும் இயேசு, இன்னொரு ஊரை தெரிவுசெய்வதன் மூலமாக தன் சிறு கோபத்தை வெளிப்படுத்துகிறார். 55வது வசனம் சில வார்த்தைகளை, வேறு கிரேக்க பாடங்களில் மேலதிகமாகக் கொண்டுள்ளது. இவர்களை கடிந்து கொள்கின்ற ஆண்டவர், அவர்களின் உள்ள எண்ணங்களை சோதிக்கிறார், தான் அழிப்பதற்கல்ல மாறாக மீட்கவே வந்துள்ளேன் என்கிறார்.

வவ. 57-61: இந்த பகுதியில் சீடத்துவத்தின் கேள்வியையும் அதன் அழைப்பின் மறைபொருளையும் விளங்கப்படுத்த லூக்கா முயற்சி செய்கிறார். முதலாவது நபர் ஆண்டவரை தான் பின்பற்ற அனுமதி கேட்கிறார் அவருக்கு ஆண்டவர் சீடத்துவத்தின் துன்பங்களை காட்டுகிறார். தன்னை மனுமகனாகவும் மற்றவர்களை நரிகளாகவும் வானத்து பறவைகளாகவும் ஒப்பிட்டு மன்னின் மைந்தர்களுக்கு நிலம் இல்லை, நரிகளான எட்டப்ப ஏரோதுக்களுக்கும், வானத்து பறவைகளான உரோமையருக்கும் நிலம்பிடிப்பாளர்களுக்கும் அதிகமான இடங்கள் இருப்பதாக ஆண்டவர் மறைமுகமாக சாடுகிறார் என்றும் சில விளக்கவுரையாளர்கள் காட்டுகின்றனர். இரண்டாவது நபரை ஆண்டவரே அழைக்கிறார், ஆனால் அவர் இஸ்ராயேலர்களின் முக்கியமான கடமைகளின் ஒன்றான இறந்தோரை அடக்கம் செய்ய அனுமதிகேட்கிறார். இந்த இறந்தோரின் அடக்கத்தைவிட இறையாட்சியின் அறிவிப்பு முக்கியம் என்பதை ஆண்டவர் தெளிவு படுத்துகிறார். இந்த அழைப்பில் இறையாட்சியின் அவசரம் தெரிகிறது. இறப்வை விட வாழ்வின் முக்கியத்துவமும் தெரிகிறது. இவர் பின்னர் ஆண்டவரின் சீடத்துவத்தில் இனைந்துகொண்டாரா என்பது பற்றி லூக்கா விவரிக்கவில்லை, இங்கே இந்த நபரைவிட அவர் மூலமாக லூக்கா சொல்லவருகின்ற செய்தியைத்தான் அவதானிக்க வேண்டும். மூன்றாவது நபர் நிபந்தனை வைக்கிறார். வீட்டில் அனுமதி பெற்றுவர இயேசுவிடம் அனுமதி கேட்கிறார். எலிசா இதனைத்தான் எலியாவிடம் கேட்டார். எலிசாவிற்கு அனுமதி கிடைத்தது, இவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஒருவேளை எலியாவின் சீடத்துவத்தைப் போல் அல்ல இயேசுவின் சீடத்துவம் என லூக்கா சொல்ல வரலாம். இந்த சீடத்துவம் முதல் ஏற்பாட்டுச் சில சட்டங்களையும் மீறி, அதனை தழுவ வேண்டும் என்ற கடினமான உண்மையை காட்டுகிறது.

வ. 61: இயேசுவின் முதல் சீடர்களில் அதிகமானவர்கள் மீனவர்கள், இப்படியிருக்க தன் சீடத்துவத்திற்கு உதாரணமாக கலப்பையை ஆண்டவர் உதாரணமாக்குவது அதிசயமாயிருக்கிறது. கலப்பை கொழுவில் கைவைக்கும் விவசாயி முன்நோக்கியே பார்க்க வேண்டும் அப்போதுதான் நேர்த்தியாக உழ முடியும். இந்தக் கொழு முதல் ஏற்பாட்டில் உருவகமாக பாவிக்கப்படுகிறது. விவிலிய ஆசிரியர்கள் இதனை அமைதியின் அடையாளமாகவும், இறையாட்சின் அடையாளமாகவும் காட்டியிருக்கிறார்கள். விவசாய நுண்ணறிவு வளராத அக்காலத்தில், இந்தக் கொழுவின் திடமும் கூர்மையும் அந்த தொழிலின் திறனை முடிவுசெய்தது. 'இறையாட்சி' என்பது லூக்கா நற்செய்தியில் முக்கியமான ஒரு இறையியல் எண்ணக்கரு. இந்த இறையாட்சியில் அனைவரும் சீடர்களே என்று அழகாக வாதிடுகிறார் லூக்கா. 

சீடத்துவம் அதனை கொடுப்பவராலேயே புனிதம் பெறுகிறது. 
சீடராகிறவர் முதலில் அழைப்பு பெறவேண்டும் பின்னர் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். 
அதிகமானவாக்ள் அழைப்புக்கு ஏங்குகின்ற போதும் சிலருக்கே அது கொடுக்கப்படுகிறது. 
அழைப்பு பெற்றவர்களுள் பலர் அந்த அழைப்பை நிராகரிப்பதும் சாதாரணமாகிவிட்டது. 
சீடர்களுக்கு ஆண்டவரைத் தவிர பெருமைப் பட வேறோன்றும் இருக்க முடியாது. 
அழைப்பின் மகத்துவமும், இறையாட்சியின் கௌரவமும் ஆண்டவரில் தங்கியுள்ளதே அன்றி 
சீடரின் பிறப்பிலோ அல்லது அவர்களில் திறமைகளிலோ தங்கியிராது. 
தேவைப்பட்டால் அவற்றையும் கடவுள் பாவிபபார்.

அழைப்பின் ஆண்டவரான இயேசுவே!
உம்மைபோல உம் சீடர்களையும் அழைப்பின் மகத்துவத்தை உணரப்பண்ணும்.
இறையாட்சிக்காக அழைப்பேயன்றி, அழைப்பிற்காக இறையாட்சி இல்லை என்பதையும் 
தொடர்ந்து காட்டியருளும். ஆமேன்.


 மி. ஜெகன்குமார் அமதி
பெருஜா, இத்தாலி
செவ்வாய், 21 ஜூன், 2016



தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) Pentacost Sunday

தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) Pentacost Sunday தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) மி . ஜெகன்குமார் அமதி , சங்கமம் , அமதிகள் ஆன்மீக...