புதன், 28 ஜூலை, 2021




18th Sunday in Ordinary Time (B): 

ஆண்டின் பொதுக்காலம் பதினெட்டாம் ஞாயிறு ()



ஆண்டின் பொதுக்காலம் பதினெட்டாம் ஞாயிறு ()

01.07.2021


M. Jegankumar Coonghe OMI,

Our Lady of Good Voyage, 

Chaddy, Velanai, 

Jaffna,

Wednesday, 28 July 2021


முதல் வாசகம்: விடுதலைப் பயணம் 16,2-4.12-15

பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 78

இண்டாம் வாசகம்: எபேசியர் 4,17.20-24

நற்செய்தி: யோவான் 6,24-35


முறுமுறுத்தல்

MURMURING

An overtly vocal or subdued expression of deep pain, grief, distress, discontent, dissatisfaction, or anger. Murmurings, at times, functioned as prayers to God that called for action. Examples include complaints (Heb. lûn) by the Israelites in the wilderness (Exod. 15:24; 16:2, 7-8; 17:3; Num. 14:2, 27, 29, 36). These murmurings had concrete ground, namely, hunger or thirst. God responded to such cries by “hearing favorably” and providing food and water and thus alleviating the people’s anguish.

However, murmurings are also presented as clandestine, malicious whisperings of slander against God or his appointed leaders. Korah complained against Moses and Aaron (Num. 16), and the people of Israel are said to have been murmuring against the leadership of Moses (ch. 17). The Israelites are also portrayed as grumbling (rāg̱an) in their tents (Deut. 1:27; Ps. 106:25) in response to the report of the spies. This is a graphic picture of the people sulking in their tents instead of preparing for the march upon Canaan. Such murmuring is a scorning of God and his appointed leaders and calls for severe punishment. Those who refused to enter the Promised Land would die in the wilderness. In addition, the people of Israel justifiably murmured in the Promised Land when they believed that the leaders of the nation were disobedient to the rules established by God (Josh. 9:18).

In the NT “murmuring” (Gk. gongýzō) generally refers to the complaining of the Pharisees and scribes (Luke 5:30; 15:2; cf. 19:7; Matt. 20:11). The NT church experienced the murmuring of the Hellenists against the Hebrews because their widows were being neglected in the daily distribution (Acts 6:1).Paul exhorted the Corinthians not to murmur as the Hebrews had done in the wilderness, for their murmurings had brought destruction (1 Cor. 10:10; cf. Phil. 2:14).


Bibliography. G. W. Coats, Rebellion in the Wilderness: The Murmuring Motif in the Wilderness Traditions of the Old Testament (Nashville, 1968). (Courtesy Accordance 12.2.8: 2018). 

John L. Harris


துன்பங்கள் தாங்க முடியாமல் வருகின்றபோது, அதனை வெளிச்சொல்ல முடியாமல் 

இருக்கின்றபோதும், முறுமுறுத்தல் முனங்களாக வெளிவருகின்றது (לוּן லூன்- முறுமுறுத்தல்). முறுமுறுத்தல் வாயிலாக ஒருவர் தன்னுடைய துன்பம், கஸ்டம், உடல் உபாதை, மனஉழைச்சல், விருப்பம் இன்மை, ஆதரவின்மை போன்றவற்றை காட்டுகிறார். விவிலியத்தில் முறுமுறுத்தல் ஒருவகையான செபமாகவும் காட்டப்படுகிறது. சிலவேளைகளில் கடவுளுக்கு எதிரான குரலாகவும் முறுமுறுத்தல் காட்டப்படுகிறது (வி. 15,24: 16,2.7-8: 17,3: எண் 14,2.27.29.36). இந்த குறிப்பிட்ட உதாரணங்களின் பின்னால் பசியும் தாகமும் காரணமாக இருந்திருக்கின்றன. கடவுள் தங்கள் குறைகனை தீர்க்க வேண்டும் என்ற நோக்கமும் ஒவ்வொரு முறுமுறுத்தலின் பின்னாலும் 

இருக்கின்றன

இதேவேளை முறுமுறுத்தல் கடவுளை வசைபாடுகின்ற எதிர்மறையான நம்பிக்கையின்மையின் அடையாளமாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றது. கோரா என்கின்ற ஒரு நபர் மோசேக்கு எதிராக முறுமுறுத்து வசைபாடினார் (எண் 16). இவரைப் போலவே இஸ்ராயேல் மக்கள் கடவுளுக்கு எதிராக முறுமுறுத்தனர் என்ற எண்ணிக்கை நூல் ஆசிரியர் காட்டுகிறார் (எண் 17). கடவுளுக்கு எதிரான முறுமுறுத்தலை, நம்பிக்கைக்கு எதிரான திட்டமாகவும், தண்டிக்கப்பட வேண்டிய துரோகமாகவும் விவிலிய ஆசிரியர்கள் காட்ட முயற்சிக்கின்றனர். எகிப்தில் இருந்து கானானை நோக்கிய புறப்ட்ட இஸ்ராயேல் மக்களில் காலேபு மற்றும் யோசுவைத் தவிர, வேரெவரும் வாக்களிக்கப்ட்ட நாட்டை அடையவில்லை எனவும், அதற்கான காரணமாக, அவர்களின் கடவுளுக்கெதிரான முறுமுறுப்பாகவும் காட்டுகிறார் எண்ணிக்கை மற்றும் இணைச்சட்ட நூல்களின் ஆசிரியர்கள்

புதிய ஏற்பாட்டில் முறுமுறுத்தல் (γογγύζω கொக்குட்சோ) இயேசுவிற்கு எதிரான பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களின் எதிர்வினைகளை காட்டப்படுகின்றன (லூக் 5,30: 15,2: 19,7: மத் 20,11). திருச்சபை அங்கத்தவர்கள் தங்களுக்கிடையிலும் முறுமுறுத்திருக்கின்றனர். கிரேக்க கிறிஸ்தவர்கள் தங்கள் வறியவர்கள் கவனிக்கப்படவில்லை என்று யூத கிறிஸ்தவர்களுக்கு எதிராக முறுமுறுத்திருக்கின்றனர் (தி.பணி 6,1). இஸ்ராயேல் மக்கள் கடவுளுக்கு எதிராக முறுமுறுத்ததைப் போல, முறுமுறுக்கவேண்டாம் என்று கொரிந்தியரைக் கண்டிக்கிறார் பவுல் (1கொரி 10,10). 



விடுதலைப் பயணம் 16,2-4.12-15

1இஸ்ரயேல் மக்களின் கூட்டமைப்பினர் அனைவரும் ஏலிமிலிருந்து புறப்பட்டு ஏலிம், சீனாய் இவற்றிற்கிடையேயுள்ள சீன் பாலைநிலத்தை வந்தடைந்தனர். இவர்கள் எகிப்து நாட்டினின்று வெளியேறி வந்த இரண்டாம் மாதம் பதினைந்தாம் நாள் அது. 2இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் அந்தப் பாலைநிலத்தில் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர். 3இஸ்ரயேல் மக்கள் அவர்களை நோக்கி, 'இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து, எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை நலமாயிருந்திருக்கும்! ஆனால் இந்தச் சபையினர் அனைவரும் பசியால் மாண்டு போகவோ இப்பாலைநிலத்திற்குள் நீங்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்' என்றனர்.

4அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, 'இதோ பார்! நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன். மக்கள் வெளியே போய்த் தேவையானதை அன்றன்று சேகரித்துக்கொள்ள வேண்டும். என் கட்டளைப்படி நடப்பார்களா இல்லையா என்பதை நான் இவ்வாறு சோதித்தறியப் போகிறேன்


11ஆண்டவர் மோசேயை நோக்கி, 12'இஸ்ரயேல் மக்களின் முறையீடுகளை நான் கேட்டுள்ளேன். நீ அவர்களிடம், 'மாலையில் நீங்கள் இறைச்சி உண்ணலாம். காலையில் அப்பம் உண்டு நிறைவடையலாம். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்பதை இதனால் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்' என்று சொல்' என்றார்.

13மாலையில் காடைகள் பறந்து வந்து கூடாரங்களை மூடிக்கொண்டன. காலையில் பனிப்படலம் கூடாரத்தைச் சுற்றிப் படிந்திருந்தது. 14பனிப்படலம் மறைந்தபோது பாலைநிலப்பரப்பின்மேல் மென்மையான, தட்டையான, மெல்லிய உறைபனி போன்ற சிறிய பொருள் காணப்பட்டது. 15இஸ்ரயேல் மக்கள் அதைப் பார்த்துவிட்டு, ஒருவரை ஒருவர் நோக்கி 'மன்னா' என்றனர். ஏனெனில், அது என்ன என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அப்போது மோசே அவர்களை நோக்கி, 'ஆண்டவர் உங்களுக்கு உணவாகத் தந்த அப்பம் இதுவே:


விடுதலைப் பயணநூலின் 16ம் அதிகாரம் மன்னா காடை போன்றவை வானிலிருந்து 

இஸ்ராயேல் மக்களுக்கு அதிசயமாக கிடைத்த வரலாற்றை காட்டுகின்றன. இவை ஆண்டவரின் பாரமரிப்பை அடையாளப்படுத்தும் அழகான அடையாளங்கள். விடுதலைப் பயணநூல் ஆசிரியர் 

இவறை;றை அதிசயங்களாகவே காட்சிப்படுத்துகிறார். சில வாசகர்கள் இவற்றை சாதாரண இயற்கை நிகழ்வுகளாக பார்க்க முயற்சி செய்கின்றனர். விடுதலைப் பயண நூல் ஆசிரியருக்கு இவை கடவுளுடைய அருளடையாளங்கள், அத்தோடு இன்று நாம் விஞ்ஞான விளக்கங்கள் மூலமாக இவற்றை சாதாரண நிகழ்வாக விளக்க முயல்வது, அக்கால ஆசிரியரின் தெரிவாக இருந்திருக்க வாய்ப்பில்லை


.1: இஸ்ராயேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு, இரண்டாம் மாத நிறைவில் சீன் பாலைவனத்தை அடைகிறார்கள். சீன் பாலைவனம், எலிம் என்ற இடத்திற்கும், சீனாய் மலைக்கும் இடையில் இருக்கிறது. இன்றைய எகிப்து நாட்டின் நிலப்பகுதியாக இந்த இடம் காணப்படுகிறது. அதிகமான மனித வர்த்தகம், மற்றும் தீவிரவாதிகளின் இருப்பிடமாக இன்று இது அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. சீனாய் மலையில் கடவுள் தன்னை மக்களுக்கு வெளிப்படுத்தினார், சீன் பாலைவனத்தில் அவர் இவர்களுக்கு மன்னா காடையை உணவாகக் கொடுத்தார். இந்த இரண்டு சொற்களுக்கும் இடையில் அடையாள ஒற்றுமைகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்


.2: இஸ்ராயேல் மக்கள் இந்த இடத்தில் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர்

இவர்கள் கடவுளுக்கு எதிராக முறுமுறுக்கவில்லை என்பதுபோல ஆசிரியர் காட்டுகிறார். அத்தோடு அனைத்து இஸ்ராயேல் சமூகமும் இதனை செய்ததாக ஆசிரியர் காட்டுகிறார் 

(וַיִּלּוֹנוּ כָּל־עֲדַת בְּנֵי־יִשְׂרָאֵל  வாய்யிலோனூ கோல்-'அதத் பெனி-யிஸ்ரா'எல்- அனைத்து இஸ்ராயேல் பிள்ளைகளின் சமூகமும்). இதன் மூலமாக இந்த செயலில் ஒருவரும் விதிவிலக்கல்ல என்பதை அவர் வலியுறுத்துகிறார். எப்போதுமே மோசேக்கும் ஆரோனுக்கும் சார்பாக இருக்கும், யோசுவா மற்றும் காலேபின் நிலையை ஆசிரியர் காட்டவில்லை. அனேகமாக இவர்கள் மோசேக்கு சார்பாகத்தான் இருந்திருக்க வேண்டும்


.3: இஸ்ராயேல் மக்களின் ஆதங்கத்தையும் குற்றச்சாட்டையும் மிகவும் கடுமையாக வரிகளின் ஆசிரியர் பதிவு செய்கிறார். அவர்கள் தங்களுடைய கடந்த கால வாழ்க்கையையும், தற்கால பாலைவன பயண வாழ்கையையும் ஒப்பிட்டுப் பார்கின்றனர்

தாங்கள் இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் இருந்ததாகவும் (בְּשִׁבְתֵּ֙נוּ֙ עַל־סִ֣יר הַבָּשָׂ֔ר பெசிவ்தெனூ 'அல்-சிர் ஹவாசொர்- இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் இருந்து), அப்பம் உண்டு நிறைவடைந்ததாகவும் (בְּאָכְלֵנוּ לֶחֶם לָשֹׂבַע பெ'ஆக்லெனூ லெஹெம் லாஸ்வா'- நிறைவாக அப்பம் உண்டோம்) சொல்கிறார்கள். எகிப்திலே ஆண்டவர் கையாலே இறந்திருந்தால் எத்துணை நலம் என்றும் முறையிடுகிறார்கள். இந்த வார்த்தைகள் மூலமாக ஆண்டவர் கையால்தான் மரணிக்க வேண்டும் என்பதையும் அவர் காட்டுகிறார்

இவற்றிக்கு எதிராக, அனைத்து சபையாரும், பசியால் மாண்டு போக, அந்த பாலை நிலத்திற்கு அவர்களை அழைத்து வந்ததாக மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக குற்றச்சாட்டுகின்றனர். பாலை நிலைத்தில் மக்கள் பசியால் மாண்டு போவதை அக்கால மக்கள் நன்கு அறிந்திருப்பார்கள். அந்த நிகழ்வு தமக்கும் வரப்போகிறது என்பதையிட்டு அவர்கள் அச்சமுடையவர்களாக இருக்கிறார்கள் எனலாம்


.4: இவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுக்க கடவுள் அவர்களுக்கு பதிலளிக்கிறார், ஆக இவர்கள் கடவுளுக்கு எதிராகவே முறுமுறுத்தனர் என்பது தெளிவாகிறது, அல்லது கடவுள் மோசே ஆரோன் பக்கம் இருக்கிறார் என்பது புலனாகிறது எனலாம். ஆண்டவர் 

இந்த குறைகூறும் மக்களுக்கு எதிராக செயல் ஒன்றை செய்வதாகச் சொல்கிறார், இருந்தும் 

அதனை அவர் இவர்களை சோதிக்கவே செய்கிறார் என்பதையும் காட்டுகிறார்

ஆண்டவர் இவர்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தை பொழியப்போவதாகச் சொல்கிறார்

(מַמְטִיר לָכֶם לֶחֶם מִן־הַשָּׁמָיִם மம்திர் லாகெம் லெஹெம் மின்-ஹஷ்ஷாமாயிம்- வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பம் பொழியப்போகிறேன்). இருந்தாலும் மக்கள் அன்றன்று தேவையானதை அன்றன்று மட்டுமே சேகரிக்க வேண்டும் என்கிறார். தன் கட்டளைப்படி அவர்கள் நடப்பார்களா என்பதைக் பார்கப்போகிறார் என்கிறார் (אֲנַסֶּנּוּ הֲיֵלֵךְ בְּתוֹרָתִי אִם־לֹֽא׃ 'அனஸ்சினூ ஹயெலெக் பெதோராதி 'இம்-லோ'- என்னுடைய சட்டப்படி நடப்பார்களா இல்லையா என அவர்களை சோதிக்கப்போகிறேன்). 


வவ.6-8: மக்களின் முறுமுறுப்பையும், கடவுளின் வாக்குறுதியையும் அவதானித்த தலைவர்கள் மோசேயும், ஆரோனும் மக்களிடம் பேசுகிறார்கள். எகிப்திலிருந்து யார் உங்களை வெளிக் கொணர்ந்தது என்பதை அவர்கள் அந்த மாலையில் உணரவிருக்கிறார்கள் என்கிறார். மக்கள் தங்களுக்கு எதிராக முறுமுறுப்பது சரியானது அல்ல என்பதையும் அவர்கள் காட்டுகிறார்கள்

இருந்தும் அவர்கள் முறுமுறுப்பது ஆண்டவருக்கு எதிரானது என்கிறார். இதனைக் கேட்ட ஆண்டவர் இவர்களுக்கு அப்பத்தையும் இறைச்சியையும் தரவிருக்கிறார் என்று சொல்கிறார்


வவ.9-10: இந்த வேளையில் மோசே ஆரோனுக்கு கட்டளை கொடுகிறார். இஸ்ராயேல் மக்களை ஆண்டவரை நோக்கி செல்லச் சொல்கிறார். அத்தோடு இவர்களின் முறுமுறுப்புக்களை அவர் கேட்டார் என்றும் சொல்கிறார். அவ்வாறு ஆரோன் இஸ்ராயேல் மக்களை நோக்கி பேசிக்கொண்டிருக்கையில் அவர்கள் ஆண்டவரின் மாட்சியை அவர்களுக்கு பின்புறத்தில் காண்கின்றார்கள். வழமைபோல ஆண்டவரின் மாட்சி அவர்களுக்கு மேகத்தில் தோன்றியது 

(כְּבוֹד יְהוָה נִרְאָה בֶּעָנָן கெவோத் அதோனாய் நிர்'ஆஹ் பெ'ஆனான்- ஆண்டவரின் மாட்சி மேகத்தில் தோன்றியது). மேகத்தில் ஆண்டவரின் மாட்சி தோன்றியது என்பது பல அர்த்தங்களைக் கொடுக்கும். அது வெளிச்சமாக இருக்கலாம்.


.11: மேகத்திலிருந்து ஆண்டவர் மோசேயோடு பேசுகிறார். இவர்களுக்கெல்லாம் தலைவர், மற்றும் கடவுளோடு பேசக்கூடிய நிலையில் இருப்பவர் மோசே ஒருவரே என்பதையும் இந்த வரியில் ஆசிரியர் தெளிவாக காட்டிவிடுகிறார். וַיְדַבֵּר יְהוָה אֶל־מֹשֶׁה வய்தவெர் அதோனாய் ''எல்-மோஷேஹ், ஆண்டவர் மோசேக்கு சொன்னார்


.12: ஆண்டவர் இஸ்ராயேல் மக்களின் முறையீடுகளை கேட்டுள்ளதாகச் சொல்கிறார். ஆக முறையீடுகள் தனக்கெதிரானவை என்பதும் ஆண்டவருக்கு தெரிந்திருக்கிறது. மக்கள் அவற்றை ஆரோன், மோசேக்கு எதிராக திருப்ப முனைந்தாலும், உண்மையில் அவர்கள் ஆண்டவருக்கு கீழ் படியவில்லை என்பதை அவர் நன்கு புரிந்து வைத்துள்ளார் שָׁמַ֗עְתִּי אֶת־תְּלוּנֹּת֮ ஷாம'தி 'எத்- தெலூனோத்- முறையீடுகளைக் கேட்டேன்

மாலையில் இறைச்சி உண்ணலாம், காலையில் அப்பம் உண்டு நிறைவடையலாம் என்கிறார் ஆண்டவர். இதனைத்தான் அவர்கள் முறையீடாக முன்வைத்தனர். அவர்களின் முறையீடு சரிசெய்யப்படுகிறது. இருந்தும் இந்த அதிசயங்கள் அவர்களுடைய முறுமுறுத்தலுக்கு அஞ்சி செய்யப்படவில்லை, மாறாக இதன் மூலமும் கூட தான்தான் கடவுள் என்பதைக் காட்ட செய்யப்படுகிறது என்கிறார் ஆண்டவர், அதனை மோசேக்கு கட்டளையாகவும் சொல்கிறார்

וִֽידַעְתֶּם כִּי אֲנִ֥י יְהוָה אֱלֹהֵיכֶם׃ யிதா'தெம் கி 'அனி அதோனாய் 'எலோஹெகெம்- இதனால் நானே அவர்கள் கடவுள் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்


வவ.13-14: மாலையில் காடைகள் பறந்து வந்து கூடராங்களை மூடிக்கொண்டன. இந்த காடைகள் (שְּׂלָו ஷெலாவ்- காடை) ஒருவகையான வயல்வெளி பறவைகள். இவற்றின் நீளம் 19 செ.மீற்றர்கள் இருக்கும். இந்த வகையான காடைகள் நம் ஈழநாட்டிலும் காணக்கிடைக்கின்றன. பாலைவன காடைகள் 100 கிராம்கள் தான் இருக்கும் என அறியப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இந்த பறவைகள் அரேபியாவிலிருந்து மத்தியதரை பிரதேசத்தை கடந்து புலம்பெயர்கின்றன. இந்த வழியில் கடவுள் இவற்றை இஸ்ராயேலருக்கு கொடுத்திருக்கலாம். பகல் முழுவதும் பறந்தமையால் இவை மாலையில் கழைத்துப்போய் விழுந்திருக்கலாம்

காலையில் பனிப்படலம் போன்ற உணவு அவர்கள் கூடாரத்தை சுற்றி படிந்திருந்தன. இந்த பனிப்படலத்தை, மென்மையான தட்டையான மெல்லிய உறைபனி என்று ஆசிரியர் காட்டுகின்றனர். இந்த விடுதலைப் பயண வரிகள் எழுதப்பட்டபோது இவர்கள் மன்னாவை உணவாக பெறவில்லை. இந்த நிகழ்வு ஏற்கனவே நடந்து முடிந்திருந்தது. மோசே இவற்றில் சிறயளவு எடுத்து உடன்படிக்கை பேழைக்குள் வைத்தாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இதனை அடுத்த நாளுக்காக சேகரித்து வைக்கவேண்டாம் என்ற கட்டளை, ஏற்கனவே கடவுளால் கொடுக்கப்பட்டது. சேர்த்து வைத்தவர்கள் துர்நாற்றம் கொண்ட பொருளையே கண்டு கொண்டார்கள். ஆக இதனைப் பற்றிய முதல்தர தரவுகளை ஆசிரியர் கண்டிருக்கமாட்டார் எனலாம். அல்லது இவர் பாலைவனம் சென்று இதனைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். (טָּל தால்- காலைப் பனி: כְּפֹר கெபோர்- பனி). 


.15: இந்த பனி அப்பத்திற்கு 'மன்னா' என்ற வார்த்தை இந்த வரியில்தான் கொடுக்கப்படுகிறது

இஸ்ராயேல் மக்கள் இந்த உறைபனியின் படலத்தை பார்த்து, ஒருவர் இன்னொருவரை நோக்கி 'மான் ஹு' (מָן ה֔וּא என்ன அது?) என்று கேட்கிறார்கள். ஆக இது அவர்களுக்கு என்னவென்று முன்னர் தெரிந்திருக்கவில்லை

மன்னா என்று கேட்டவர்களுக்கு 'ஆண்டவர் உங்களுக்கு உணவாகத் தந்த அப்பம் அதுவே' என்று வரைவிலக்கனம் கொடுக்கிறார் மோசே (הַלֶּחֶם אֲשֶׁר נָתַן יְהוָה ஹலெஹெம் 'அஷேர் நதான் அதோனாய்). இதிலிருந்தான் இந்த பனி அப்பத்தின் பெயர் மன்னாவாக மாறியிருக்க வேண்டும்



திருப்பாடல் 78

(வவ.25-50)

25வான தூதரின் உணவை மானிடர் உண்டனர்; அவர்களுக்கு வேண்டியமட்டும் உணவுப் பொருளை அவர் அனுப்பினார்.

26அவர் விண்ணுலகினின்று கீழ்க்காற்றை இறங்கிவரச் செய்தார்; தம் ஆற்றலினால் தென்காற்றை

அழைத்துவந்தார்.

27அவர் இறைச்சியைத் துகள்துகளென அவர்கள்மீது பொழிந்தார்; இறகுதிகழ் பறவைகளைக்

கடற்கரை மணலென வரவழைத்தார்.

28அவற்றை அவர்தம் பாளையத்தின் நடுவிலும் கூடாரத்தைச் சுற்றிலும் விழச்செய்தார்.

29அவர்கள் உண்டனர்; முற்றிலுமாய் நிறைவடைந்தனர்; அவர்கள் விரும்பியவற்றையே

அவர் அவர்களுக்கு அளித்தார்.

30அவர்களது பெருந்தீனி வேட்கை தணியுமுன்பே, அவர்கள் வாயிலில்

உணவு இருக்கும் பொழுதே,

31கடவுளின் சினம் அவர்களுக்கு எதிராக மூண்டெழுந்தது;

அவர்களுள் வலியோரை அவர் கொன்றார்; இஸ்ரயேலின் இளைஞரை வீழ்த்தினார்.

32இவையெல்லாம் நிகழ்ந்த பின்னும், அவர்கள் தொடர்ந்து பாவம் செய்தார்கள்;

அவர்தம் வியத்தகு செயல்களில் நம்பிக்கை கொள்ளவில்லை.

33ஆகையால், அவர்களது வாழ்நாளை மூச்சென மறையச் செய்தார்; அவர்களது ஆயுளைத் திடீர்த் திகிலால் முடிவுறச் செய்தார்.

34அவர்களை அவர் கொன்றபோது அவரைத் தேடினர்; மனம் மாறி இறைவனைக்

கருத்தாய் நாடினர்.

35கடவுள் தங்கள் கற்பாறை என்பதையும் உன்னதரான இறைவன்

தங்கள் மீட்பர் என்பதையும் அவர்கள் நினைவில் கொண்டனர்.

36ஆயினும், அவர்கள் உதட்டளவிலேயே அவரைப் புகழ்ந்தார்கள்;

தங்கள் நாவினால் அவரிடம் பொய் சொன்னார்கள்.

37அவர்கள் இதயம் அவரைப் பற்றிக்கொள்வதில் உறுதியாய் இல்லை;

அவரது உடன்படிக்கையில் அவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

38அவரோ இரக்கம் கொண்டவராய், அவர்கள் குற்றத்தை மன்னித்தார்; அவர்களை அழித்துவிடவில்லை, பலமுறை தம் கோபத்தை அடக்கிக்கொண்டார். தம் சினத்தையெல்லாம்

அவர்களுக்கு எதிராய் மூட்டவில்லை.

39அவர்கள் வெறும் சதையே என்பதையும் திரும்பி வராத காற்று என்பதையும்

அவர் நினைவுகூர்ந்தார்.

40பாலை நிலத்தில் அவர்கள் எத்தனையோமுறை அவருக்கெதிராய்க் கிளர்ந்தெழுந்தனர்!

வறண்ட நிலத்தில் அவர் மனத்தை வருத்தினர்!

41இறைவனை அவர்கள் மீண்டும் மீண்டும் சோதித்தனர்; இஸ்ரயேலின் தூயவருக்கு

எரிச்சலூட்டினர்.

42அவரது கைவன்மையை மறந்தனர்; எதிரியிடமிருந்து அவர் அவர்களை

விடுவித்த நாளையும் மறந்தனர்;

43அந்நாளில் எகிப்தில் அவர் அருஞ்செயல்கள் செய்தார்; சோவான் சமவெளியில் வியத்தகு செயல்கள் புரிந்தார்.

44அவர்களின் ஆறுகளைக் குருதியாக மாற்றினார்; எனவே, தங்கள் ஓடைகளினின்று

அவர்களால் நீர் பருக இயலவில்லை.

45அவர்களை விழுங்குமாறு அவர்கள்மீது ஈக்களையும்,

அவர்களது நாட்டை அழிக்குமாறு தவளைகளையும் அவர் அனுப்பினார்.

46அவர்களது விளைச்சலைப் பச்சைப் புழுக்களுக்கும் அவர்களது உழைப்பின் பயனை வெட்டுக்கிளிகளுக்கும் அவர் கொடுத்தார்.

47கல்மழையினால் அவர்களுடைய திராட்சைக் கொடிகளையும் உறைபனியால் அவர்களுடைய

அத்தி மரங்களையும் அவர் அழித்தார்.

48அவர்களுடைய கால்நடைகளைக் கல்மழையிடமும் அவர்களுடைய ஆடுமாடுகளை

இடி மின்னலிடமும் அவர் ஒப்புவித்தார்.

49தம் சினத்தையும், சீற்றத்தையும் வெஞ்சினத்தையும் இன்னலையும்அழிவு கொணரும் தூதர்க் கூட்டத்தைஅவர் ஏவினார்.

50அவர் தமது சினத்திற்கு வழியைத் திறந்துவிட்டார்; அவர்களைச் சாவினின்று தப்புவிக்கவில்லை;

அவர்களின் உயிரைக் கொள்ளை நோய்க்கு ஒப்புவித்தார்.


திருப்பாடல் 78, 'மீட்பின் வரலாற்றின் நினைவு' என்று அடையாளப் படுத்தப்படுகிறது. இந்த பாடலில் ஆண்டவரின் மீட்புச் செயல்கள் நினைவுகூறப்படுகின்றன. இதன் காரணமாகத்தான் இந்த பாடல் மெய்யறிவுப் பாடலில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதன் பிற்கால முன்னுரை ஒன்று இதனை ஆசாபின் பாடல் என அடையாளப்படுத்தப்படுகிறது (מַשְׂכִּ֗יל לְאָ֫סָ֥ף மஸ்கில் லெ'ஆசாப்- ஆசாபின் பாடல்). இவர் தாவீதின் அரசபை பாடகராக அல்லது அலுவலகராக 

இருந்திருக்கலாம்

வசனங்கள் 1-8 இந்த நீண்ட அழகான பாடலுக்கு முன்னுரை போல செயற்படுகின்றது. 'என் மக்களே என் அறிவுரைக்கு செவிசாயுங்கள், என் வாய்மொழிகளுக்கு செவிகொடுங்கள்' என்ற கட்டளை வாக்கியம் பயன்படுத்தப்படுகிறது. எபிரேய கவிக்கே உரிய திருப்பிக்கூறல் இந்தப் பாடலிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வரிகளின் முதல் மூன்று வரிகள், இக்கால சந்ததியினர் கடவுளைப் பற்றிய அறிவை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும் என கேட்கப்படுகிறார்கள். 5-6 வரையான வரிகள், கடவுள் தன்னைப் பற்றிய அறிவு பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதை யாக்கோபிற்கு சொல்லிக் கொடுத்துள்ளார் எனக் காட்டுகிறது. இப்படி வரலாறுகள் பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட்டால்தான் அவாகள்; நல் மக்களாக உருவாகுவார்கள் என்பது ஆசிரியருடைய நம்பிக்கை.

(வவ.9-16) வரலாற்றை மீள பார்த்து அதில் ஏன் இஸ்ராயேல் மக்கள் எதிரிகளிடம் தோற்றனர் என்பதை தியானிக்கச் சொல்கிறார். இஸ்ராயேல் மக்களைக் குறிக்க எப்ராயிம் என்ற புராதனச் சொல்லும் பயன்படுத்தப்படுகிறது. எகிப்திலிருந்து மீண்டு வந்தபோது, கடவுள் எங்கனம் தன் வலிய புயத்தால் பாலை வனத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தார் என்பதை வசனங்கள் காட்டுகின்றன

(வவ.17-19) இருப்பினும் அவர் மக்கள் பாலைநிலத்தில் அவருக்கு எதிராகவே கிளர்ந்து எழுந்தனர் என்பதை அழகான அனுபவங்கள் மூலமாக காட்டுகிறார் ஆசிரியர். கிளர்ந்து எழுந்ததை அவர் பாவம் எனக் காண்கிறார் (לַחֲטֹא־לוֹ லஹதோ'-லோ அவருக்கு எதிராக பாவம் செய்ய). தம் விருப்பம் போல உணவு கேட்டு கடவுளைச் சோதித்தனர், இதனை கடவுளின் வல்லமையை சோதிக்கும் பாவச் செயல் என்கிறார்

(வவ.20-25) இதற்கு எதிராக கடவுள் பாறையைத் தட்டி தண்ணீரை ஊற்றெடுக்கச் செய்கிறார். முதலில் தண்ணீர் கேட்டவர்கள் இறைச்சியும் அப்பமும் கேட்டனர். இது கடவுளின் சினத்தை வரவைக்கிறது. கடவுள் கோபம் கொண்டாலும் வானங்களை திறந்து அவர்களுக்கு மன்னாவை மழையாகவும் (וַיַּמְטֵר עֲלֵיהֶם מָן வய்யாம்தெர் 'அலெஹெம் மன்- அவர்களுக்கு மன்னா பொழிந்தார்.), வானக உணவாகவும் கொடுத்தார் என்கிறார். மன்னாவை வானத்து கடவுளின் பணியாளர்களின் உணவு என்கிறார் (לֶחֶם אַבִּירִים אָכַל אִישׁ  லெஹெம் 'அப்பிரிம் 'ஆகல் 'இஷ்- பலமானவர்களின் உணவை மனிதன் உண்டான்). 

(வவ.26-30) காடை இறைச்சியைப் பற்றி சொல்கின்றபோது, கடவுள் தென் காற்று மற்றும் கீழ் காற்றை பயன்படுத்துகிறார். இறகுதிகழ் பறவைகளை (עוֹף כָּנָף 'ஓப் கானாப்- இறக்கையுடைய பறவை) கடற்கரை மணலாக மக்கள் மீது பொழிகிறார். அவர்கள் இந்த இறைச்சியை தங்களால் முடியுமானவரை உண்டார்கள்

(வவ.31-36) இந்த உணவு வகையை ஆசிரியர், மக்களின் பெரும்தீனி வேட்கை என்கிறார் (அழான தமிழ் வார்த்தைகள் மொழிபெயர்ப்பிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன). இதனால் கோபம் கொண்ட கடவுள் அவர்கள் வாயில் உணவு உள்ளபோதே தன் தண்டனையை கொடுக்கிறார். பலசாலிகள், இளையோர் இறக்கின்றனர். இருந்தாலும் அவர்கள் கடவுளை நம்பவில்லை. இதன் காரணமாக அவர்களின் ஆயுட்காலம் மூச்சென குறைவடைகிறது, இதனால் அவர்கள் கடவுளில் நம்பிக்கை கொள்கின்றனர். இருந்தாலும் இந்த நம்பிக்கையை அவர் உதட்டளவிலான புகழ்ச்சி என்றே சொல்கிறார்

(வவ.37-51) அவர்களின் இதயம் தளம்பலாக இருந்தது. ஆனால் கடவுள் அவர்களை அழிப்பதில் உறுதியாக இல்லை, பலமுறை அவர்களை மன்னிக்கிறார். மனிதர்களின் இயற்கையை, அதாவது அவர்கள் வெறும் சதையும் காற்றும் (בָשָׂר வாஸார்- சதை, רוּחַ ரூஹா- காற்று) என்பதை கடவுள் அறிந்திருக்கிறார். அடங்காமல், மீண்டும் மீண்டும் இஸ்ராயேலின் தூயவருக்கு சினத்தை மூட்டினர் (קְדוֹשׁ יִשְׂרָאֵל கெதோஷ் யிஸ்ராயேல்). அவர்கள் மிகவும் மறதிக்காரர்கள் என்கிறார். எகிப்தில் கடவுள் செய்த அதிசயங்களையும், எகிப்தியரை அவர் தண்டித்த விதத்தையும் அவர்கள் மறந்து போனார்கள் என்றும் காட்டுகிறார். பத்து வாதைகள் இந்த வரிகளில் காட்டப்படுகின்றன

(வவ.52-53) எகிப்தியரை வாதையால் வதைத்தவர், இஸ்ராயேலர்களை ஆடுகளைப் போல பாலைவனத்திற்கு அழைத்துச் செல்கிறார் என்று காட்டுகிறார். பாலை நிலமாக இருந்தாலும், மக்கள் கடவுளை உணர்ந்த படியால் எதற்கும் அஞ்சவில்லை. துரத்தியவர்களை கடவுள் கடல் கொண்டு மூழ்கடித்தார்

(வவ.54-56) இந்த வரிகள் கானான் நாட்டில் கடவுள் செய்த அரும் செயல்களைக் காட்டுகின்றன. கானான் நாட்டை ஆண்டவரின் திருநாடு என்கிறார் ஆசிரியர் (גְּבוּל קָדְשׁוֹ கெபூல் காதோஷோ- அவர் புனித குன்று), அத்தோடு அதனை ஆண்டவரின் வெற்றியின் மலை (הַר־זֶה ஹர் ட்செ- அந்த மலை) என்றும் சொல்கிறார். இது எருசலேமைக் குறிக்கலாம். இந்த நாட்டில் இருந்த வேற்றினத்தரை அவர் விரட்டியடித்தார், இஸ்ராயேலருக்கு நாட்டை பங்கிட்டு கொடுத்தார்

இருந்தாலும் அவர்கள் உன்னதரான கடவுளை மறந்து அவரை சோதிப்பதை விடவில்லை. இதற்கு அடையாளமாக அவர்கள் கடவுளின் நியமங்களை கடைப்பிடிக்கவில்லை என்பதை ஆதாரமாகக் காட்டுகிறார்

(வவ.57-61) வாக்களிக்கப்ட்ட நாட்டில் இவர்கள் செய்தவை சுட்டிக்காட்டப்படுகிறது. தம் மூதாதையரைப் போல வழிதவறினர், நம்பிக்கை துரோகம் செய்தனர், குறி மாறிய மக்களாக வாழந்தனர், தொழுகை மேடுகளாலும், வார்ப்புச் சிலைகளாலும் கடவுளுக்கு சினமூட்டினர். இதனால் சினம் கொண்ட கடவுள் அவர்களை முழுமையாக வெறுத்தார்

சீலோவிலிருந்து வெளியேறினார் என்று சொல்கிறார் ஆசிரியர். எருசலேமிற்கு முன்னர் இந்த சீலோவில் கடவுளின் சந்திப்புக்கூடாரம் இருந்திருக்கிறது

(வவ.62-64) ஆண்டவரின் வெளியேற்றம் எதிரிகளுக்கு சார்பாக அமைந்திருக்கிறது. வாலிபர் இறந்தனர், வாலையர் திருமணமற்றனர், குருக்கள் வாளால் மடிந்தனர், கைம்பெண்களுக்காக துன்பப்படக்கூட யாரும் இல்லை என்கிறார் ஆசிரியர்

(வவ.65-69) மக்களின் துன்பத்தால் மனமகிழாத இறைவன், இளைஞராக வீறுகொண்டு எழுகிறார். ஏதிரிகளை துவசம் செய்தார், அவர்களை விரட்டியடித்தார். இந்த வரியில் வட நாடான இஸ்ராயேலுக்கும் தென்நாடான யூதாவிற்கும் வித்தியாசம் காட்டுகிறார் ஆசிரியர். வட நாட்டை அதன் பாரம்பரிய பெயர்களாக யோசேப்பின் கூடாரம் (אֹהֶל יוֹסֵף 'ஓஹேல் யோசெப்) மற்றும் எப்ராயிம் குலம் என்று அழைக்கிறார் (שֵׁבֶט אֶפְרַ֗יִם ஷெவெத் 'எப்ராயிம்). 

வடநாட்டை புறக்கணித்தவர் யூதாவை தெரிவு செய்கிறார். யூதாவை குறிக்க சீயோன் மலை பெயரிடப்படுகிறது. அதுவும் கடவுளுக்கு பிடித்த மலை என்று அடையாளப் படுத்தப்படுகிறது 

(צִיּוֹן אֲשֶׁר אָהֵב ட்சியோன் 'அஷேர் 'ஆகாவ்- அவர் அன்பு சீயோன்). இங்கே அவர் இருப்பிடத்தை விண்ணகம் போல் அமைத்ததாகச் சொல்லப்படுகிறது. இது எருசலேம் தேவாலயத்தை குறிக்க வேண்டும்

(வவ.70-71) இனிவரும் வரிகள் தாவீதின் பரம்பரையைக் காட்டுகின்றன. அவர் தாவீதை தெரிவு செய்கிறார், அவரை தம் ஊழியராக மாற்றுகிறார். அரசர்கள் ஆண்டவர்கள் அல்ல என்பது

இஸ்ராயேலுக்கே உரிய தனித்துவமான நம்பிக்கை. இது மற்றய அக்கால புராணங்களில் காணப்படாது. தாவீது சாதாரண பால் கொடுக்கும் ஆடுகளை பேணிய ஆயர், இவரை தன் மக்களாகிய யாக்கோபை, தன் உரிமை சொத்தான இஸ்ராயேலையும் பாதுகாக்க கடவுள் அர்பணிக்கிறார். இந்த வரிகளில் சில அழகான காரணப் பெயர்ச்சொற்கள் பாவிக்கப்பட்டுள்ளன. தன் மக்களான யாக்கோபு (יַעֲקֹב עַמּוֹ யா'அகோவ் 'அம்மோ), உரிமைச் சொத்தான இஸ்ராயேல் (יִשְׂרָאֵל נַחֲלָתֽוֹ யிஸ்ரா'எல் நஹலாதோ). 

(.72) இஸ்ராயேல் மக்களுக்கும் தாவீதிற்கும் வித்தியாசம் காட்டப்படுகிறது. மக்களைப்போல் அல்லாமல் தாவீது, நேரிய உள்ளத்தோடு பணிசெய்கிறார். தன் கைவன்மையாலும், அறிவுத்திறனாலும், மக்களை வழிநடத்தினார் என காட்டப்படுகிறார்

இந்த இறுதி வரியைக் கொண்டுதான் இந்தப் பாடல் தாவீதோடு தொடர்பு பட்டிருக்க வேண்டும் என ஊகிக்கப்பட்டது. தாவீது இதனை எழுதினார் என சொல்வதற்கில்லை மாறாக அவருக்காக இந்தப் பாடல் எழுதப்பட்டிருக்கலாம்






எபேசியர் 4,17.20-24

பழைய வாழ்வும் புதிய வாழ்வும்

17ஆதலால் நான் ஆண்டவர் பெயரால் வற்புறுத்திச் சொல்வது இதுவே பிற இனத்தவர் வாழ்வதுபோல் இனி நீங்கள் வாழக்கூடாது. அவர்கள் தங்கள் வீணான எண்ணங்களுக்கேற்ப வாழ்கிறார்கள். 18அவர்களது மனம் இருளடைந்திருக்கிறது. அவர்களது பிடிவாத உள்ளத்தின் விளைவாய் ஏற்பட்ட அறியாமையின் காரணத்தால் அவர்கள் கடவுள் தரும் வாழ்வுக்குப் புறம்பானவர்களாக இருக்கிறார்கள். 19அவர்கள் உள்ளம் மரத்துப்போய்ப் பேராசை கொண்டு, ஒழுக்கக் கேடான செயல்களில் எல்லாம் ஈடுபட்டுத் தங்களைக் காமவெறிக்கும் உட்படுத்தினார்கள். 20ஆனால் நீங்கள் கிறிஸ்துவைப் பற்றிக் கற்றறிந்தது இதுவல்ல. 21உண்மையில் நீங்கள் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டதும் கற்றறிந்ததும் அவரிடமுள்ள உண்மைக்கேற்பவே இருந்தது. 22எனவே, உங்களுடைய முந்தின நடத்தையை மாற்றி, தீய நாட்டங்களால் ஏமாந்து அழிவுறும் பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்துவிடுங்கள்.

23உங்கள் மனப்பாங்கு புதுப்பிக்கப்படவேண்டும். 24கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொள்ளுங்கள். அவ்வியல்பு உண்மையான நீதியிலும் தூய்மையிலும் வெளிப்படும்.


எபேசியர் திருமுகத்தின் 4ம் அதிகாரம் கிறிஸ்தவ புதுவாழ்வைப் பற்றி பேசுகின்றது. இதன் முதல் 16 வரிகள் கிறிஸ்தவ உடலின் ஒற்றுமையை பற்றி பேச, வரும் வரிகள் பழைய வாழ்வையும் புதிய வாழ்வையும் பற்றி பேசுகின்றன


.17: ஏற்கனவே பலவற்றைப் பற்றி பேசியிருக்கின்ற திருத்தூதர் இந்த வரியில் புறவினத்தவர் போல கிறிஸ்தவர்கள் வாழக்கூடாது என்கிறார். ὑμᾶς περιπατεῖν, καθὼς καὶ τὰ  ἔθνη ஹுமாஸ் பெரிபாடெய்ன், காதோஸ் காய் டா எத்னே- நீங்கள் மற்றைய நாட்டவரைப் போல வாழக்கூடாது. அப்படியாயின் பவுல் புறவின மக்களை கொச்சைப் படுத்துகிறாரா? என்ற கேள்வி எழுகிறது

இல்லை என்றே எண்ணத்தோன்றுகிறது. இந்த கடிதத்தின் பெறுநர்கள் அதிகமானோர் புறவினத்தவர்களே. இங்கே புறவினத்தவர் என பவுல் அடையாளப் படுத்துவோர் யூதர்களாகவும் 

இருக்கலாம், யூதரல்லாதவர்களாகவும் இருக்கலாம். யாரெல்லாம் இயேசுவில்லாத அறியாமையில் வாழ்கிறார்களோ அவர்கள் பவுலுக்கு புறவினத்தவர்கள்.

ஏன் தன் மக்களை அவர்கள் போல் வாழக்கூடாது என்பதற்கு பவுல் காரணம் காட்டுகிறார். அதாவது அவர்கள் தங்கள் வீணான எண்ணங்களின்படி வாழ்கிறவர்கள் என்கிறார். இந்த வீணான எண்ணங்கள் என்று எதனை அவர் அடையாளப்படுத்துகிறார் என்பது தெளிவில்லை. ஒருவேளை இது கிரேக்க-உரோமைய பழக்க வழக்கங்களாக இருக்கலாம். ἐν ματαιότητι τοῦ νοὸς αὐτῶν, என் மடாய்யோடேடி டூ நூஸ் அவ்டோன்- அவர்களது வீணான மனதில்


.18: அவர்களுடைய மனத்தைப் பற்றியும் அதன் தற்கால நிலையையும் விளக்க முயல்கிறார். அவர்களது மனம் இருளடைந்திருக்கிறது என்கிறார். அவர்களது மனம் என்பதற்கு அவர்களின் சிநத்தனை இருளடைந்திருக்கிறது என்ற கிரேக்க வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன (ἐσκοτωμένοι τῇ διανοίᾳ எஸ்கொடோமெனொய் டே தியானொய்யா).  அவர்கள் அறியாமையில் வாழ்கிறார்கள் என்கிறார், அதற்கான காரணமாக அவர்களின் பிடிவாத குணத்தை காரணம் காட்டுகிறார் (πώρωσιν τῆς καρδίας போரோசின் டேஸ் கார்தியாஸ்- இதயத்தின் கடுமையான நிலைமை). இந்த பிடிவாதத்தால் வரும் அறியாமை (ἄγνοια அக்னொய்யா) அவர்களை கடவுளிடமிருந்து தூரத்தில் வைத்திருக்கிறது என்கிறார் திருத்தூதர். ἀπηλλοτριωμένοι அபேல்லொட்ரியோமெனொய்- தூரத்தில் இருப்பவர்கள்


.19: பவுலுடைய கடுமையான இந்த வார்த்தைகளுக்கு சில காரணங்களை இந்த வரியில் கண்டு கொள்ளலாம். அவர்களுடைய உள்ளம் மரத்துப் போய் உள்ளதாகவும், பேராசை கொண்டுள்ளதாகவும் சொல்கிறார்

இவற்றோடு சேர்ந்து, அவர்கள் ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபட்டு, உதாரணமாக அவர்கள் காம வெறிக்கு தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள் என குற்றம் சாட்டுகிறார். உரோமைய உலகம், பாலியல் சீர்கேடுகள் அல்லது பழக்கவழக்கங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டிருக்கவில்லை என்றுதான் ஆய்வுகள் காட்டுகின்றன. இராணுவ, கலாச்சார, கல்வி, நகர் உட்கட்டுமானம் போன்றவற்றில் முக்கியத்தும் காட்டிய உரோமைய பேரரசு, மக்களின் சாதாரண ஒழுக்கவியலுக்கு பெரிதாக முக்கியம் கொடுக்காமல், அதனை தனி மனித சுதந்திரத்திற்கு விட்டுவிட்டது. இருப்பினும் உயர் குடி மக்களாக இருந்தவர்கள் அனைவரும் இப்படியான வாழ்கை முறைகளை பின்பற்றினார்கள் என்று சொல்வதற்கில்லை. கிரேக்க உலகிலும், உரேமைய உலகிலும், யூத உலகிலும் பல முன்னுதாரணமான வாழ்க்கை முறை அன்றும் இருந்திருக்கின்றன என்பதை மறுக்க முடியாது


.20: கிறிஸ்தவ மக்களுக்கு இது ஒரு பிரச்சனையே இல்லை என்கிறார். அதாவது கிறிஸ்துவை பற்றி கற்றறிந்த வாழ்வு அனைத்து ஒழுக்கமற்ற வாழ்விற்கும் எதிரான வாழ்வு என்பது சொல்லப்படுகிறது


.21: 'இயேசுவில் வாழ்வு' என்பது அவரது உண்மையில் தங்கியுள்ளது. இயேசு உண்மையானவர், ஆக அவரைப் பின்பற்றுகிறவர்கள் உண்மையானவர்களாக இருக்க வேண்டும் என்ற செய்தி சொல்லப்படுகிறது (ἀλήθεια அலேதெய்யா- உண்மை). 


.22: இந்த வரிகளில் பவுல் கட்டளைகளை முன்வைக்கிறார். பழைய வாழ்க்கை முறையை மாற்றச் சொல்கிறார். தீய நாட்டங்களால், ஏமாந்து அழிவுறும், பழைய மனித இயல்பை கழையச் சொல்கிறார். இந்த பழைய வாழ்க்கை முறை என்பது அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறுவதற்கு முன் வாழ்ந்த கிரேக்க-உரோமைய வாழ்க்கை முறையைக் குறிக்கலாம்


.23: இவர்களின் மனப்பாங்கு புதுப்பிக்கப்படவேண்டும் என்று விரும்புகிறார். இதனை உங்கள் சிந்தனையின் ஆவி புதுப்பிக்கப்டவேண்டும் என்று கிரேக்க விவிலியம் காட்டுகிறது (ἀνανεοῦσθαι δὲ  τῷ πνεύματι τοῦ νοὸς ὑμῶν அனாநெயுஸ்தாய் தெ டோ புனுமாடி டூ நூஸ் ஹோமோன்). 


.24: இவற்றிக்கு எதிரான புதிய இயல்பை அணிய கேட்கிறார். அது, கடவுளது சாயலாக படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பு, அவ்வியல்பு உண்மையான, நீதியிலும் தூய்மையிலும் வெளிப்படுகிறது (καινὸν ἄνθρωπον காய்னொன் அந்த்ரோபொன்). 


யோவான் 6,24-35

24இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர். 25அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, 'ரபி, எப்போது இங்கு வந்தீர்?' என்று கேட்டார்கள். 26இயேசு மறுமொழியாக, 'நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 27அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்' என்றார். 28அவர்கள் அவரை நோக்கி, 'எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டார்கள். 29இயேசு அவர்களைப் பார்த்து, 'கடவுள் அனுப்பியவரை நம்பவதே கடவுளுக்கேற்ற செயல்' என்றார். 30அவர்கள், 'நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்? 31எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே!

'அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார்'

என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா!' என்றனர். 32இயேசு அவர்களிடம், 'உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல் வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. 33கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது' என்றார்.

வாழ்வு தரும் உணவு

34அவர்கள், 'ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்' என்று கேட்டுக்கொண்டார்கள். 35இயேசு அவர்களிடம், 'வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது


இந்த 6ம் அதிகாரத்தில் அப்பம் பலுகிப் பெருகிய நிகழ்வும் அதனைத் தொடர்ந்து வந்த நிகழ்வும் காட்டப்படுகிறது. இன்றைய நற்செய்தி பகுதிக்கு முன் பகுதியில் மக்கள் உணவில்லாமல் பாலைவனத்தில் நீண்ட நேரம் இருந்ததைக் கண்ட ஆண்டவர் அவர்களுக்கு உணவு கொடுத்தார், அதுவும் மன்னாவைப் போல் மிகவும் நிறைவாகவே கொடுத்தார். அவர்கள் உணவு உட்கொண்டதும் ஆண்டவர் அவர்களிடம் இருந்து அகன்று போகிறார், அத்தோடு தன் சீடர்களையும் உடன்கூட்டிச் செல்கிறார். அவர்கள் செல்லும் பயணம் வித்தியாசமாக இருக்கிறது. இந்த இடத்தில் மூன்று நற்செய்தியாளர்கள், இயேசு கடல் மீது நடந்த அரும் அடையாளத்தை உள்வைக்கினன்றனர் (காண்க மாற்கு 6,45-52: மத்தேயு 14,22-23). 

சீடர்களும் இயேசுவும் கப்பர்நாகும் கடற்கரையை அடைகின்றபோது, ஏற்கனவே மக்கள் மறுகரையில இயேசுவை சந்தித்தது போல, இந்தக் கரையிலும் அவரை சந்திக்க முந்தியடிக்கின்றனர். முன்னர் அவர்கள் மேல் பரிவு கொண்டு அவர்களை அப்பத்தால் நிறைத்தவர்இந்த இடத்தில் வித்தியாசமாக அவர்களை நோக்குகின்றார். இரண்டு கரைகளிலும் கூடிய மக்கள் ஒரே மக்களாக இருந்திருக்கலாம், அல்லது இரண்டாம் முறைகூடிய மக்களில், யூத தலைவர்களும் இருந்திருக்கலாம். இயேசுவுடைய கடுமையான வார்த்தைகளை ஆய்வுசெய்கின்றபோது அவர்கள் சாதாரண மக்களைவிடவும் வேறு கூட்டத்தினர் என்பது தெரிகிறது


வவ.22-23: இயேசுவும் அவர் சீடர்களும் படகில் சென்றார்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்கிறார்கள். அதுவும் சீடர்கள் மட்டுமே படகில் சென்றார்கள் என்பதையும் அவர்கள் அவதானிக்கிறார்கள். இந்த வேளையில் திபேரியக் கடற்கரையில் இவர்கள் இருந்த இடத்திற்கு வேறு படகுகள் வந்து சேர்கின்றன. இந்த படகுகள் அவர்களை ஏற்றுவதை நோக்கமாகக் கொண்டு வந்திருக்கலாம், அல்லது மீன்பிடி படகுகளாக இருந்திருக்கலாம்.


.23: இயேசுவும் சீடர்களும் திபேரியாக்கடலின் கிழக்குக் கரையில் இல்லை என்பதை அவர்கள் கண்டுகொண்டு, கூட்டமாக அந்த படகுகளில் ஏறி, இயேசுவைக் தேடிக்கொண்டு திபேரியக் கடற்கரையின் மேற்கு கரையில் அமைந்திருந்த கப்பர்நாகும் என்ற ஊருக்குச் செல்கிறார்கள்

கப்பர்நாகும் நகர் (Καφαρναούμ), கலிலேயா அல்லது திபேரியக் கடற்கரையின் வடமேற்கு பகுதியில் அமைந்திருந்த யூத நகர். இன்றைய தெல்கூம் என்ற நகரை கப்பர்நாகுமுடன் அடையாளப் படுத்துகிறார்கள் ஆய்வாளர்கள். இந்த இடத்தில்தான் யோர்தான் நதி கலிலேயா ஏரியுடன் கலக்கிறது. இந்த இடத்தில்தான் ஏரோது அந்திப்பாசின் எல்லையும், ஏரோது பிலிப்பின் எல்லையும் அமைந்திருந்தது. உரோமைய, கிறிஸ்தவ, இஸ்லாமிய காலத்திலும் இந்த நகர் மிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. கப்பர்நாகுமில் தோண்டப்பட்ட செபக்கூடம்தான் இன்று இஸ்ராயேல் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மிக தொன்மையான செபக்கூடம். பேதுருவின் வீட்டார், மற்றும் அல்பேயுவின் வீட்டார்கள் போன்றவர்கள் இந்த இடத்தைச் சார்ந்தவர்கள். இயேசு தன்னுடைய பணிவாழ்வில் அதிகமான நாட்களை கப்பர்நாகுமில்தான் செலவளித்தார், இந்த இடத்து செபக்கூடத்தைத்தான் அவர் பயன்படுத்தினார். ஆவரடைய அதிகமான அரும் அடையாளங்களும் இந்த இடத்தில்தான் நடந்திருக்கிறது. தன்னுடைய அதிகமான சீடர்களையும் அவர் இந்த இடத்திலிருந்துதான் அழைத்திருக்கிறார். இதனை இயேசுவுடைய பங்குக் கோவில் என நம் மொழியில் அழைக்கலாம்


.24: இயேசுவை கரையில் கண்ட மக்கள் 'ராபி எப்போது இங்கு வந்தீர் என்கின்றனர்'? மக்களுடைய கேள்வியை வித்தியாசமாக பதிவு செய்கிறார் யோவான். யோவான் நற்செய்தியில் ஆண்டவரிடம் கேள்வி கேட்கிறவர்கள் அதிகமான இடங்களில் எதிர் மறையான பாத்திரங்களில் காட்டப்படுகின்றனர். அந்த முறையையே அவர் இங்கே பயன்படுத்துகிறார் எனலாம்

அத்தோடு யோவான் நற்செய்தியில் கேள்விகள் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன. அதாவது. கேள்வி கேட்கப்படுகின்றபோது, பதில் கொடுப்பதற்கான வாய்பு ஒன்று உருவாக்கப்படுகின்றது. வழமையாக யோவான் நற்செய்தியில் இயேசுதான் கேள்விகளைக் கேட்பார். பின்னர் அவர் கேள்வி கேட்கிறவர்கள் மறைந்துபோக, இயேசு அனைவருக்கும் பதிலளிப்பார். இந்த இடத்தில் அப்படியில்லை, இங்கே மக்கள் கேள்வி கேட்கிறார்கள், அவர்கள் இந்த உரையாடலில் தொடர்ந்து ஆண்டவரோடு இருக்கிறார்கள்


.25: இயேசு இவர்களில் கொண்டுள்ள மனப்பான்மையை வித்தியாசமாக காட்டுகிறார் யோவான். அரும் அடையாளங்கள் யோவான் நற்செய்தியில் இயேசுவின் இறை சாயலைக் காட்டுகின்றன. அதனை தியானிக்கிறவர்கள் இயேசுவை கடவுளாகக் கண்டு கொள்ளலாம் (σημεῖον சேமெய்யோன்- அரும் அடையாளம்). 

இந்த மக்கள் அரும் அடையாளத்தை கண்டாலும் தன்னை பின்பற்றவில்லை என்பதில் 

இயேசு உறுதியாக இருக்கிறார். யோவான் நற்செய்தியில் இயேசுவின் வார்த்தைகள் மிகவும் உறுதியானவை. அவர் சந்தேகம் கொள்ளாமல் பேசுவார். ἀμὴν ἀμὴν λέγω ὑμῖν, ζητεῖτέ με οὐχ ὅτι εἴδετε σημεῖα, ஆமேன் ஆமேன் லேகோ ஹுமின், ட்சேடெய்டெ மெ ஹுக் ஹொடி எய்தெடெ சேமெய்யா- உறுதியாக உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன். அரும் அடையாளங்கள் கண்டதால் நீங்கள் என்னை தேடவில்லை

மாறாக இவர்கள் அப்பங்களை வயிராற உண்டதால்தான் தன்னை தேடிவந்திருக்கிறார்கள் என்கிறார் ஆண்டவர் (ἐφάγετε ἐκ τῶν ἄρτων καὶ ἐχορτάσθητε. ஏபாகெடெ எக் டோன் ஆர்டோன் காய் எகொர்டாஸ்தேடெ- அப்பங்களை நிறைவாக உண்டதாலேயே). அரும் அடையாளம் நம்பிக்கையோடு தொடர்புபட்டது, உண்ணல் வயிறோடு தொடர்புபட்டது. ஆக மக்கள் வயிற்றிக்குத்தான் முக்கியத்தும் கொடுக்கிறார்கள் என் காட்டுகிறார், யோவான்


.27: உணவுகள் அழிந்து போகும, பாலைவனத்தில் அவர் கொடுத்த அப்பங்களும் மீன்களும் சாதாரண உணவு வகைதான் அவை அழிந்து போகும். அதற்காக உழைக்க வேண்டாம் என்கிறார் ஆண்டவர் (ἐργάζεσθε μὴ τὴν βρῶσιν τὴν ἀπολλυμένην  எர்காட்செஸ்தே மே டேன் புரோசின் டேன் அபொல்லூமெனேன்- அழிந்துபோகும் உணவிற்காக உழைக்க வேண்டாம்). 

நிலைவாழ்வு தரும் உணவிற்காக உழைக்க ஆண்டவர் பணிக்கிறார் (ἀλλὰ  τὴν βρῶσιν τὴν μένουσαν εἰς ζωὴν αἰώνιον அல்லா டேன் புரோசின் டேன் மெனூசான் எய்ஸ் ட்சோஏன் அய்யோனியோன்- ஆனால் அழியாமல் நிலைவாழ்விற்காக). இந்த உணவை மானிட மகன்தான் தருவார் என்றும் சொல்கிறார். ஏனெனில் இது தந்தையின் அதிகாரத்துடன் தொடர்புபட்டது அந்த அதிகாரத்தை தந்தை மானிட மகனுக்கு மட்டும்தான் கொடுத்துள்ளார் என்று தன்னுடைய சிறப்பு அதிகாரத்தைக் காட்டுகிறார். தந்தை அதிகாரம் கொடுத்துள்ளார் என்பதைக் குறிக்க, தந்தை தன்னுடைய முத்திரையைக் குத்தியுள்ளார் என்று கிரேக்க விவிலியம் காட்டுகிறது (ἐσφράγισεν ὁ θεός. எஸ்பிராகிசென் ஹொ தியுஸ்). 


.28: இயேசுவுடைய கடுமையான வார்த்தைகளால் சற்று குழப்பமடைந்தவர்கள் இன்னொரு கேள்வியைக் கேட்கிறார்கள். தங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்பவையாக இருக்க, தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்கிறார்கள் (τί  ποιῶμεν ἵνα ἐργαζώμεθα τὰ ἔργα τοῦ θεοῦ; டி பொய்யோமென் ஹினா எர்காட்சோமெதா டா எர்கா டூ தியூ- கடவுளுக்கு ஏற்புடையதாக இருக்க நாங்கள் என்ன வேலை செய்ய வேண்டும்?). இந்த கேள்வி மூலமாக அவர்கள் பிழையான வாழ்க்கை முறையில் இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்


.29: யோவான் நற்செய்தியின் மையக் கருத்து இங்கே சொல்லப்பட்டுவிட்டது. இந்த விடையை நோக்கித்தான் இந்த முன் கேள்விகள் அமைந்திருக்கிறது. யோவான் நற்செய்தியின் முழு நோக்கமும் இந்த வரிகொண்டுவரும் விடைதான்

இயேசு அவர்களைப் பார்க்கிறார், இதனைக் குறிக்க, அவர் அவர்களுக்கு விடையளித்தார் என்று கிரேக்கத்தில் உள்ளது (ἀπεκρίθη  ὁ Ἰησοῦς அபெக்கிரிதே ஹொ ஈயேசூஸ்). இது முதல் ஏற்பாட்டு கடவுளை நமக்கு நினைவூட்டுகிறது

'கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கு ஏற்ற செயல்' இதுதான் அந்த விடை: πιστεύητε εἰς ὃν ἀπέστειλεν ἐκεῖνος. பிஸ்டெயுஏடெ எய்ஸ் ஹொன் அபொஸ்டெய்லென் எகெய்னொஸ் - அனுப்பப்பட்ட அவரில் நம்பிக்கை கொள்ளுங்கள்


.30: இவர்கள் இயேசுவிடம் வாங்கிக் கட்டினது போதாது. இவர்கள் அடிப்படையில் நம்பிக்கையற்றவர்களாகவும், பிழையானவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதற்கு இவர்களுடைய 

இந்த கேள்வி ஒன்றே போதுமானதாக இருக்கும். பாலைநிலத்தில் அப்பத்தை நிறைவாக உண்டவர்கள், அவர் கடல் மீது நடந்து போனதை கண்டவர்களால் எப்படி இந்த கேள்வியை கேட்க முடிகிறது. ஆக இவர்கள் வேறு மக்களாக இருந்திருக்க வேண்டும், அல்லது அந்த கூட்டத்தில் இருந்த யூத தலைமைகள் முக்கியமாக இயேசுவை நம்பாதவர்களாக இருந்திருக்க வேண்டும்

தாங்கள் கண்டு நம்பும் படியாக என்ன அரும் அடையாளத்தை இயேசுவால் செய்ய முடியும் என்று அவர்கள் இயேசுவிடமே கேட்கிறார்கள் (τί οὖν ποιεῖς σὺ σημεῖον, ἵνα ἴδωμεν καὶ πιστεύσωμέν σοι; டி ஊன் பொய்யெஸ் சூ சேமெய்யொன், ஹினா இதோமென் காய் பிஸ்டெயுசோமென் சொய்). இந்த கேள்வி மனித அகங்காரத்தால் கேட்கப்டும் கேள்வி. இந்த கேள்வி உடையவர்கள் நம்பிக்கை குன்றியவர்கள். யோவான் நற்செய்தியில் கேள்விகள் மிகவும் அவதானமாக நோக்கப்படவேண்டும். இவர்கள் நம்பிக்கைகொள்ள அரும் அடையாளங்களைக் கேட்கிறார்கள். அரும் அடையாளங்கள் நம்பிக்கைக்கு பின்னர் வரவேண்டும், அதனை நம்பிக்கை கொள்ள கேட்பது ஆண்டவருக்கு எதிரான அவநம்பிக்கையின் அடையாளம். இவர்களுடைய நோக்கம் நம்பிக்கை என்பதை விடுத்து அவர்கள் எதாவது ஆண்டவரிடமிருந்து பெறலாம் என்பதை நோக்கமாக கொண்டிருக்கின்றனர்


.31: இவர்கள் கிண்டலாக 'தங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டனர்' என்று சொல்லிக் காட்டுகிறார்கள். இதன் அர்த்தமாக அவர்களும் மன்னாவை எதிர்பார்த்திருக்கலாம். அல்லது ஏற்கனவே இயேசு பலுகச் செய்த அப்ப அடையாளத்தை இன்னொருமுறை எதிர்பார்த்திருக்கலாம். πατέρες ἡμῶν τὸ μάννα ἔφαγον ἐν τῇ ἐρήμῳ, பாட்டெரெஸ் ஹேமோன் டொ மான்னா எகாகொன் என் டே அரேமோ.

இயேசுவிற்கே இவர்கள் மறைநூலை மேற்கோள் காட்ட முயற்சிக்கின்றனர். இவர்கள் திருப்பாடல் 78,24 மேற்கோள் காட்டுகின்றனர். மக்கள் உண்பதற்கு கடவுள் வானிலிருந்து உணவளித்தார் என்பது இஸ்ராயேல் மக்களுக்கு பாரம்பரிய அறிவாக இருந்திருக்கிறது


.32: இவர்களுடைய அறிவு உண்மையாக இருந்தாலும் அதனை சரிசெய்ய வேண்டிய தேவை இயேசுவிற்கு இருக்கிறது. பல இஸ்ராயேல் மக்கள் மன்னாவையும், மோசேயையும் தொடர்புபடுத்தி பார்த்தார்கள். மோசேதான் மன்னாவை மக்களுக்கு கொடுத்ததாக நினைத்தனர்

இதனை சரிசெய்கிறார் ஆண்டவர். உண்மையாக மன்னாவைக் கொடுத்தவர் கடவுள் மோசேயல்ல எனக் காட்டுகிறார்

இந்த வரியில் சற்று சொற்கள் விளையாட்டு இருக்கிறது. இந்த வரியில் இயேசு மன்னாவைப் பற்றி பேசவில்லை. அவர் பாலைவன மன்னாவை முக்கியத்துவப் படுத்தவில்லை. அவர் 'வானிலிருந்து வரும் உண்மையான உணவைப் பற்றி' பேசுகிறார் (ὁ πατήρ μου δίδωσιν ὑμῖν τὸν ἄρτον ἐκ τοῦ οὐρανοῦ τὸν ἀληθινόν ஹொ பாடேர் மூ திதோசின் ஹுமின் டொன் அர்டொன் எக் டூ ஊரானூ டொன் அலேதினொன் - என் தந்தைதான் உங்களுக்கு வானிலிருந்து வரும் உண்மையான உணவை தருகிறார்), அதனை மோசேயால் தரமுடியாது என்கிறார். இந்த வரி மூலம் மன்னா வேறு வானிலிருந்து வரும் உண்மையான உணவு வேறு என்பது புலப்படுகிறது


.33: இந்த வானிலிருந்து வரும் உணவை விளக்குகிறார். இந்த உணவு வானிலிருந்து இறங்கி வந்த உலகிற்கு வாழ்வு அளிக்கிறது என்கிறார் (καταβαίνων ἐκ τοῦ οὐρανοῦ καὶ ζωὴν διδοὺς τῷ κόσμῳ காடாபாய்னோன் எக் டூ ஹுரானூ காய் ட்சோஏன் திதூஸ் டோ கொஸ்மூ- வானிலிருந்து 

இறங்கி வந்து உலகிற்கு உயிர் கொடுக்கிறது). மன்னாவால் இந்த உயிரைக் கொடுக்க முடியாது, எனவே இன்னமும் மன்னாவை பற்றி பேசுவதால் எந்த விதமான நன்மைத்தனமும் இல்லை என்பது போல சொல்லப்படுகிறது


.34: இந்த வரியில் மக்கள் சற்று இறங்கி வருகிறார்கள். ஆண்டவரை மரியாதையாக அழைக்கிறார்கள். தமிழில் 'ஐயா' என்பதற்கு மூல மொழி கிரேக்கத்தில் 'ஆண்டவரே, தலைவரே' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது (κύριε, கூரியே). 

இந்த உணவை அவர்கள் என்றுமே கேட்கிறார்கள். அதன் முக்கியத்துவத்தை அவர்கள் அறிந்திருக்கலாம்


.35: யோவான் நற்செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ள 'நானே' என்ற வார்த்தை இந்த பகுதியிலும் இடம்பெற்றுள்ளது. இயேசு தானே வாழ்வு தரும் உணவு என்கிறார் (ἐγώ εἰμι ὁ ἄρτος τῆς ζωῆς·  எகோ எய்மி ஹொ அர்டொஸ் டேஸ் ட்சோஏஸ்- நானே வாழ்வுதரும் உணவாக 

இருக்கிறேன்). 

மன்னாவை உண்டவர்களுக்கு அடுத்த நாள் பசி எடுத்தது, அத்தோடு காலத்தில் அவர்கள் இறந்தும் போனார்கள். ஆனால் உணவான இயேசுவை உண்பவர்கள், பசிகொள்ள மாட்டார்கள் இறக்கவும் மாட்டார்கள் என்கிறார். அதாவது உண்கிறவர்களுக்கு பசி இராது (μὴ πεινάσῃ மே பெய்னாசே- பசி இராது), பருகுகிறவர்களுக்கு தாகமும் இராது (μὴ  διψήσει மே திப்ஸ்ஏசெய்- தவிக்காது) என்கிறார். இந்த வரி யோவான் நற்செய்தியில் மிகவும் ஆய்வு செய்யப்பட்ட வரிகளில் ஒன்று



அரும் அடையாளங்கள் தேவை, ஆனால் நம்பிக்கை கொள்ள அல்ல

அரும் அடையாளங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தலாம்.

இருந்தாலும், நம்பிக்கையே முதலில் ஓர் அரும் அடையாளம்தான்

மன்னா என்ற அரும் அடையாளம் முறுமுறுத்தலால் வந்தது

காடையும் அந்த வகையால் வந்ததே,

இயேசு என்னும் அரும் அடையாளம்

முறுமுறுத்தலால் வரவில்லை

ஆழமான நம்பிக்கையில் வந்தது

மன்னாவும், காடையும் அழியும்

உண்டால் மீண்டும் மீண்டும் பசிக்கும்

இயேசு அழியாதவர்

புசித்தால் பசிக்காதது, பருகினால் விடாய்காதது



அன்பு ஆண்டவரே உண்மையான உணவு நீர்தான் 

என்பதைச் சொல்லித்தாரும். ஆமென்.  



.................................................


 

தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) Pentacost Sunday

தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) Pentacost Sunday தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) மி . ஜெகன்குமார் அமதி , சங்கமம் , அமதிகள் ஆன்மீக...