புதன், 31 ஆகஸ்ட், 2016

ஆண்டின் பொதுக்காலம் இருபத்தி மூன்றாம் வாரம்: The Twenty-third Sunday in Ordinary Times.


ஆண்டின் பொதுக்காலம் இருபத்தி மூன்றாம் வாரம்
04, செப்டம்பர், 2016
என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது


முதல் வாசகம்: சாலமோனின் ஞானம் 9,13-18
பதிலுரைப் பாடல்:  திருப்பாடல் 90
இரண்டாம் வாசகம்: பிலமோன் 1,9-10.12-17
நற்செய்தி: லூக்கா 14,25-33

சாலமோனின் ஞானம் 9,13-18

13'கடவுளின் திட்டத்தை அறிபவர் யார்? ஆண்டவரின் திருவுளத்தைக் கண்டுபிடிப்பவர் யார்? 14நிலையற்ற மனிதரின் எண்ணங்கள் பயனற்றவை; நம்முடைய திட்டங்கள் தவறக்கூடியவை. 15அழிவுக்குரிய உடல் ஆன்மாவைக் கீழ்நோக்கி அழுத்துகிறது. இந்த மண் கூடாரம் கவலை தோய்ந்த மனதுக்குச் சுமையாய் அமைகிறது. 16மண்ணுலகில் உள்ளவற்றையே நாம் உணர்வது அரிது! அருகில் இருப்பவற்றையே கடும் உழைப்பால்தான் கண்டுபிடிக்கிறோம். இவ்வாறிருக்க, விண்ணுலகில் இருப்பவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பவர் யார்? 17நீர் ஞானத்தை அருளாமலும், உயர் வானிலிருந்து உம் தூய ஆவியை அனுப்பாமலும் இருந்தால், உம் திட்டத்தை யாரால் அறிந்து கொள்ள இயலும்? 18இவ்வாறு மண்ணுலகில் வாழ்வோருடைய வழிகள் செம்மைப்படுத்தப்பட்டன. உமக்கு உகந்தவற்றை மனிதர் கற்றுக்கொண்டனர்; ஞானத்தால் மீட்பு அடைந்தனர்.'

சாலமோனின் ஞானம் என்ற இந்த மெய்யறிவு புத்தகத்திலிருந்து எடுக்கப்படும் இந்தப் பகுதி 'ஞானம் அருளும்படி மன்றாட்டு' என்ற பகுதியிலிருந்து வருகிறது. ஞானம் ஒரு கொடை அல்லது ஓர் இறையருள். அறிவிற்கும் ஞானத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன. அறிவு மனிதனின் கண்டுபிடிப்புக்கள், மற்றும் தத்துவங்களைச் சார்;ந்தது ஆனால் ஞானம் இறைவனின் வெளிப்படுத்தல் மற்றும் மனித அனுபவங்களைச் சார்ந்து. இதனால்தான் புது தமிழ்ச் சொல் ஞானத்தை மெய்யறிவு என்று அழகாக வரைவிலக்கணப் படுத்துகிறது. ஞானம் ஒரு கொடையாக இருப்பதனால், இதனை பெற ஒருவர் மன்றாட வேண்டும் அத்தோடு அதனை கடவுள்தான் வழங்க வேண்டும் என்பதும் இஸ்ராயேலரின் பாரம்பரிய நம்பிக்கை. இதனைத்தான் கிறிஸ்தவமும் நம்புகிறது. இதனால் தான் நாம் ஞானத்தை தூய ஆவியானவரின் ஏழு கொடைகளில் ஒன்று என கருதுகின்றோம். 
இணைத் திருமுறை நூல்களில் மிக முக்கியமான இந்நூலை, அரசர் சாலமோன் எழுதினார் என்று பாரம்பரியம் கூறினாலும், இந்நூல் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றே இன்றைய விவிலிய ஆய்வுகள் கருதுகின்றன. 1அரசர் 3,6-9 இல் அரசர் சாலமோன் ஞானத்திற்காக ஒரு செபம் செய்வார், அந்த செபத்தோடு இந்த பகுதி தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. தூய அகுஸ்தினாரின் விருப்பத்திற்குரிய புத்தகங்களில் இதுவும் ஒன்றாக இருந்துள்ளது. இதன் காலத்தை கணிப்பது கடினம் எனினும், இது முதலாம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று சிலர் வாதிடுகின்றனர். இதன் ஆசிரியர் யூதர் அல்லது யூத பின்புலத்தைக் கொண்டவர் என்பதில் பல உண்மைகள்  இருக்கலாம். ஞானம் அல்லது மெய்யறிவு என்பதுதான், இந்நூலின் முக்கிய கருப்பொருள், இது ஐம்பது தடவைகளுக்கு மேலாக இந்நூலில் தோன்றுகின்றது (σοφία சோபியா, மெய்யறிவு - ஞானம்). மற்றைய மெய்யறிவு நூல்களான யோபு, நீதிமொழிகள், சீராக், மற்றும் சபையுரையாளர் போன்றவற்றிலிருந்து முக்கியமான சிந்தனைகளில் இது மாறுபடுகிறது. சிலர் இதனை கிரேக்க இலக்கிய அமைப்புக்களுடன் தொடர்பு படுத்த முயல்கின்றனர், ஆனால் இது ஒரு கணிப்பு மட்டுமே. ஞானம் என்பது இறைவனின் அருள், அது அளிக்கப்பட வேண்டும் அத்தோடு அதுதான் மனிதர் நல்ல இறைபிள்ளைகளாக வாழ்வதற்கான ஒரே வழி என்பதுதான் இந்நூலின் மையக்கருத்து என எடுக்கலாம். 

வ. 13: ஆசிரியர் இந்த கேள்விகளூடாக முக்கியமான விடைகளை தர முயற்ச்சிக்கிறார். கடவுளுடைய திட்டங்களை அறிய பல பயிற்சி பெற்ற விஞ்ஞான முறைகள் அக்காலத்தில் 
இருந்திருக்கிறது. இன்றைய உள்ளங்கை வாசிப்பு, வானசாஸ்திரம், சகுண வாசிப்பு போன்றவை இப்படியான விஞ்ஞான முறைகளில் இருந்து வளர்ந்தவையே. இந்த ஆசிரியர் இங்கே இஸ்ராயேலரின் முக்கியமான நம்பிக்கையை தன் வாசகர்களுக்கு அறிவிக்கிறார். அதாவது கடவுளின் திட்டங்களை யாரும் அறிய முடியாது, அத்தோடு அவர் திருவுளமும் மனித அறிவைத்தான்டியது என்பதே. 

வவ. 14-15: உடல் ஆன்மா பற்றிய கிரேக்க இரட்டைக் சிந்தனைகளை இந்த வரிகளில் காணலாம். உடலையும் ஆன்மாவையும் பிரித்;து, உடலை சிறையாகவும், ஆன்மாiவை அச்சிறையினுள் உள்ள கைதியாகவும் பிளேட்டோ கண்டார். எபிரேய சிந்தனை இப்படியான இரட்டை தத்துவத்தைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் இந்த புத்தகத்தின் ஆசிரியர் கிரேக்க சிந்தனைகளை நன்கு அறிந்தவராக இருந்திருக்கிறார் என எண்ணலாம். மனிதர்களின் எண்ணங்கள் மற்றும் திட்டங்களின் நிலையாமையை திருப்பிக் கூறும் எபிரேய கவி வடிவில் வடிக்கிறார் ஆசிரியர்

அ. நிலையற்ற மனிதன் - நாம்

ஆ. எண்ணங்கள் பயனற்றவை - திட்டங்கள் தவறக்கூடியவை

அ. அழிவுக்குரிய உடல் - மண் கூடாரம்

ஆ. ஆன்மாவை கீழ்நோக்கி நகர்த்துகிறது - மனதிற்கு சுமையாய் இருக்கிறது

வ. 16: எபிரேயரின் மிக முக்கியமான நம்பிக்கை கற்பிக்கப்படுகிறது. மண்ணுலகிலும் கடவுளின் ஆச்சரியங்கள் நிறைந்துள்ளன ஆயினும் அவற்றை கடின உழைப்பால்தான் கண்டுபிடிக்கிறோம் அவ்வாறிருக்க எங்கனம் மேலுலகின் அறிவை பெறமுடியும்?

வ. 17: ஆச்சரியமான வரி இது. ஆசிரியர் ஞானத்தையும் தூய ஆவியையும் ஒப்பிடுகிறார். 

அ. ஞானம் (σοφία சோபியா)உம்முடைய தூய ஆவி (ἅγιόν σου πνεῦμα ஹகியோன் சு புனுமா).

(யோவான் நற்செய்தியாளரின் தூய ஆவியாரின் செயற்பாடுகள் பற்றிய கருத்துக்களை இந்த இறையியலில் புரிந்துகொள்ளலாம் (காண்க யோவான் 14,26✡)
(✡என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.)

வ. 18: மீட்பு மனிதருக்கு எப்படி வருகிறது? மனித அறிவினாலும் கண்டுபிடிப்புக்களினாலுமா? அல்லது மேலிருந்து கடவுள் அருளும் மெய்யறிவினாலா? என்பதை அசலாக அலசுகிறார் இந்த ஞானி. மனிதரின் வழிகள் செம்மைப்படுத்தப்டுவதும், அவர்கள் மீட்படைவதும் இறைவனின் ஞானத்தால் மட்டுமே என்பது இவரின் நம்பிக்கையும் தீர்ப்புமாகும். 

திருப்பாடல் 90

1என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடமாய் உள்ளீர். 
2மலைகள் தோன்றுமுன்பே, நிலத்தையும் உலகையும் நீர் உருவாக்குமுன்பே, ஊழி ஊழிக்காலமாய் உள்ள இறைவன் நீரே! 
3மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; 'மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர். 4ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. 
5வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்; 
6அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்து போகும். 
7உமது சினத்தால் நாங்கள் அழிந்து போகின்றோம்; உமது சீற்றத்தால் நாங்கள் திகைப்படைகின்றோம். 
8எம் குற்றங்களை உம் கண்முன் நிறுத்தினீர்; மறைவான எம் பாவங்களை உம் திருமுக ஒளிமுன் வைத்தீர். 
9எங்கள் அனைத்து வாழ்நாள்களும் உமது சினத்தால் முடிவுக்கு வந்துவிட்டன் எங்கள் ஆண்டுகள் பெருமூச்செனக் கழிந்துவிட்டன. 
10எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே; வலிமை மிகுந்தோர்க்கு எண்பது; அவற்றில் பெருமைக்கு உரியன துன்பமும் துயரமுமே! அவை விரைவில் கடந்துவிடுகின்றன. நாங்களும் பறந்துவிடுகின்றோம். 
11உமது சினத்தின் வலிமையை உணர்பவர் எவர்? உமது கடுஞ்சீற்றத்துக்கு அஞ்சுபவர் எவர்? 12எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். 
13ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். 14காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம். 
15எங்களை நீர் ஒடுக்கிய நாள்களுக்கும் நாங்கள் தீங்குற்ற ஆண்டுகளுக்கும் ஈடாக, எம்மை மகிழச் செய்யும். 
16உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும். 17எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்!

மனிதரின் நிலையாமையை பற்றி அழகாக பாடும் இந்த திருப்பாடல், திருப்பாடல்கள் தொகுப்பின் நான்காம் பிரிவின் (90-106) முதலாவது பாடலாகும். இந்த பாடல் மட்டும்தான் மோசேயின் பாடல் என மேற்குறிப்பிடப்பட்டுள்ளது. மனித வாழ்வின் பலவிதமான அனுபங்களை அட்டவணைப்படுத்தி, அனைத்தும் இறைவனின் இரக்கத்திலும் வழங்களிலுமே தங்கியுள்ளது என்கிறது இந்தப் பாடல். இஸ்ராயேலின் அனுபவமோ அல்லது முழு உலகின் அனுபவமோ பெரிய வித்தியாசங்களைக் தரவில்லை மாறாக அனைவரின் சிக்கல்களும் சவால்களும் ஒன்றாகவே இருப்பதனை இங்கு காணலாம். இந்த திருப்பாடலின் அதிகமான வரிகள் திருப்பிக்கூறும் எபிரேய கவி நடையில் அமைந்திருக்கின்றன. 

வவ. 1-7: இந்த வரிகள் கடவுளின் பலத்ததையும் அவர் பற்றிய வரலாற்று அனுபவ அறிவையும் விவரிக்கின்றன. 

அ. இது மோசே காலத்துப் பாடல் என்றால், இங்கே கடவுளை ஆசிரியர் 'புகலிடம்' என்று அழைப்பது, இஸ்ராயேல் மக்கள் வேறு எவரிலும் தங்கியிருக்கவில்லை என்ற நம்பிக்கையை காட்டுகிறது. (מָעוֹן אַתָּה நீரே எங்கள் தங்குமிடம்).

ஆ. இந்த உலகம் கடவுளால் உண்டான பிரபஞ்சம், அத்தோடு இந்த உலகைவிட கடவுள் நித்தியமானவர் என்ற நம்பிக்கையையும் இது காட்டுகிறது. மலைகளையும் நிலத்தையும் பௌதீக பொருட்களில் பழமையானவை என்று ஆசிரியர் எண்ணியிருக்கலாம். 

இ. மனிதர்களை கடவுள் புழுதியின்று படைத்தார் என்ற தொடக்க நூல் நம்பிக்கையை இங்கே ஆசிரியர் நினைவூட்டுகிறார். 

ஈ. கடவுள் காலத்தை கடந்தவர், மற்றும் காலங்கள் மனிதனுக்கு மட்டுமே உரியவை என்பதை ஆசிரியர் காட்டுகிறார். ஆயிரம் என்பது அக்காலத்தில் மிக அதிகமான இலக்கமாக கருதப்பட்டது. இந்த அதிகமான இலக்கம் கூட நமது கடவுளுக்கு கடந்து போன நேற்றைய நாள் போன்றது என்கிறார் ஆசிரியர் (אֶלֶף שָׁנִים எலெப் ஷானிம் - ஆயிரம் ஆண்டுகள்).

உ. கடவுளை வெள்ளமாகவும், மனிதரை வரண்ட புல்லாகவும் பார்க்கிறார் ஆசிரியர். பாலஸ்தீன பலைநிலங்களில் உருவாகும் மழைக்கால ஆறுகள் மிகவும் ஆபத்தானவை, அவை காட்டாறு போல அனைத்தையும் வாரிக் கொண்டு சென்றுவிடும். இதனை இவர் ஒப்பிடுகிறார் போல. 

ஊ. புல்லின் நிலையாமையை ஒப்பிடுகிறார். இந்த புற்கள் இவர்களுக்க நன்கு தெரிந்த ஒரு இயற்கைப் பொருள் அது இங்கே இறையியல் உருவகமாகிறது. இயேசுவும் பல வேளைகளில் இந்த புற்களை ஒப்பிடுவார் (காண்க மத்தேயு 6,30✡). முதல் ஏற்பாட்டு புல்லும் இயேசுவின் காலத்தும் புற்களும் ஒன்றாக இருக்கவேண்டிய தேவையில்லை. 

(✡நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய மாட்டாரா?)

எ. கடவுளின் சினமும் சீற்றமும் இங்கே காட்டப்படுகின்றன. இது தண்டனை என்பதை விட, கடவுளின் நீதியின் குணங்கள் எனவும் எண்ணப்படலாம். 

வவ. 8-10: இங்கே ஆசிரியர் மனிதரின் நிலையாமையையும் அவர்களின் சவால்களையும் வர்ணிக்கிறார். 

அ. மனிதரின் எந்த பாவங்களும் மறைக்கப்பட்டவையல்லை மாறாக அவையனைத்தும் கடவுளின் முகத்தின் முன் நன்கு தெரிந்திருக்கின்றன, என்பது ஒரு ஆழமான இஸ்ராயேலரின் நம்பிக்கை. 

ஆ. மனிதரின் வாழ்நாட்கள் ஒரு பெரும் மூச்சிற்கு ஒப்பிடப்படுகின்றன. இந்த பெரும் மூச்சு הָגָה ஹகாஹ் என்று எபிரேயத்தில் அழைக்கப்படுகிறது. இது புலம்பல், முனங்கல், மற்றும் சலனம் என்ற அர்த்தங்களையும் கொடுக்கிறது. இதிலிருந்து மனிதரின் வாழ்நாட்களின் பெறுமதியை கணித்துக் கொள்ளலாம். 

இ. இன்று மனிதரின் சராசரி வாழ்நாட்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. ஈழத்தின் சராசரி மனித வாழ்நாட்கள் 75 ஆண்டுகள் என சில ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த பாடல் ஆசிரியர் மனிதருக்கு சராசரியாக எழுபது ஆண்டுகளையும், பலசாலிகளுக்கு என்பது ஆண்டுகளையும் கொடுத்து, பின்னர் அனைவருக்கும் பொதுவானது துன்பங்களும் துயரங்களும் மட்டுமே என்கிறார் நக்கலாக. 

வவ. 11-16: இந்த வரிகளில் பல வேண்டுதல்கள் கடவுளின்பால் முன்வைக்கப்படுகின்றன. திருப்;பாடல் எவ்வகை பாடல்களாக இருந்தாலும் அங்கே பல வேண்டுதல்கள் இருப்பதை ஒவ்வொரு திருப்பாடல்களிலும் காணலாம். இங்கே:

அ. வாழ்நாட்களை கணிக்க கற்பிக்க கேட்கிறார் ஆசிரியர், இது உண்மை ஞானத்தை கொடுக்கும் என்று நம்புகிறார். வாழ்நாட்களில் நிலையாமையை அறியாது, நம் சித்தமும் உடலும் பல வேளைகளில் அகங்காரம் கொள்வதை நாமே காண்கிறோம். 

ஆ. ஆண்டவர் தம்முடன் இல்லாமையினாலே இஸ்ராயேலர் துன்பப்படுகின்றனர் என நம்புகிறார் ஆசிரியர். இது அநேகமாக இடப்பெயர்வுக்கு பின்னான அனுபவத்தை காட்டுகிறது. ஆண்டவரை திரும்பி வரக் கேட்பது, ஆண்டவரின் இரக்கம் நிறைந்த துணையை நாடுவதற்கு சமனாகும். 

இ. 'காலைதோறும் நிறைவு' என்பது ஒவ்வொரு நாளும் நம்பிக்கையின் நாளாக அமையவேண்டும் என்ற வேண்டுதலைக் குறிக்கிறது. 

ஈ. கடவுளின் சித்தத்திலேயே அனைத்தும் நடந்தன, நடக்கின்றன மற்றும் நடக்கப்போகின்றன என்பது இஸ்ராயேலரின் அசைக்க முடியாத நம்பிக்கை. அவர்கள் தங்கள் தண்டனைகளும் ஆண்டவரிடம் இருந்தே வருகின்றன என்பதையும் ஏற்றுக்கொண்டனர். கிறிஸ்தவர்களுக்கு, இது மட்டுபடுத்தப்பட்ட நம்பிக்கையாக தோன்றலாம், ஏனெனில் பல வேiளைகளில் இயேசு, கடவுள் தண்டிப்பவர் அல்ல என காட்டியுள்ளார். ஆனால் இஸ்ராயேலரின் தண்டனை பற்றிய அறிவும் நம்முடைய தண்டனை பற்றிய அறிவும் ஒன்றல்ல. அவர்களின் தண்டனை என்பது அதிகமாக கண்டிப்பையே குறிக்கும். இந்த திருப்பாடல் ஆசிரியர் தண்டனைக்கு பதிலாக மகிழ்சியைக் கேட்கிறார். 

உ. கடவுளின் மாட்சியையும் வேண்டுகிறார் ஆசிரியர். கடவுளின் மாட்சியை அவரது முக தரிசனம் எனவும் கொள்ளலாம். 

வ. 17: இந்த இறுதி வரியில் ஆசிரியர் கடவுளின் இரக்கத்தை கேட்கிறார். இந்த இரக்கம்தான் அனைத்து வெற்றிகளுக்கும் காரணம் என்று நம்புகிறார். திருந்தந்தை பிரான்சிஸ்குவின் நம்பிக்கையும் இதுவே. (MISERICORDES SICUT PATER  மிசரிகோர்டஸ் சிகுட் பாடர் - தந்தையைப்போல் இரக்கமுள்ளவர்களாய்!). உண்மையில் தமிழ் விவிலியத்தில் 'இன்னருள்;' என்ற சொல் அழகான எபிரேய சொல்லை அப்படியே மொழிபெயர்க்கிறது. இதனை இனிமை மற்றும் மகிழ்ச்சி என்று கூட சொல்லலாம் (נָעֵם நஎம் இன்னருள், இனிமை, மகிழ்ச்சி). 


பிலமோன் 1,9-10.12-17

9அன்பின் பெயரால் வேண்டுகோள் விடுவிக்கவே விரும்புகிறேன். கிறிஸ்து இயேசுவின் தூதுவனாக அவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் 10பவுலாகிய எனக்குச் சிறையிலிருந்த போது பிள்ளையான ஒனேசிமுக்காக உம்மிடம் வேண்டுகிறேன். 11முன்பு உமக்குப் பயனற்றவனாக இருந்த அவன், இப்பொழுது எனக்கும் உமக்கும் பயனுள்ளவன். 12அவனை உம்மிடம் திரும்ப அனுப்புகிறேன். அவனை அனுப்புவது என் இதயத்தையே அனுப்புவது போலாகும். 13நற்செய்தியின் பொருட்டுச் சிறையுற்றிருக்கும் எனக்கு, உமது பெயரால் பணியாற்ற, அவனை என்னிடமே நிறுத்திக்கொள்ள விரும்பினேன். 14ஆனால் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினால் செய்யாமல், மனமாரச் செய்ய வேண்டுமென்று நினைத்தே, உம்முடைய உடன்பாடின்றி எதையும் செய்ய நான் விரும்பவில்லை. 15அவன் என்றும் உம்மோடு இருக்க உம்மைவிட்டுச் சிறிதுகாலம் பிரிந்திருந்தான் போலும்! 16இனி அவனை நீர் அடிமையாக அல்ல, அடிமையை விட மேலானவனாக, அதாவது உம்முடைய அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக்கொள்ளும். அவன் என் தனிப்பட்ட அன்புக்குரியவன். அப்படியானால் மனிதன் என்னும் முறையிலும் ஆண்டவரைச் சார்ந்தவன் என்னும் முறையிலும் அவன் எத்துணை மேலாக உம் அன்புக்குரியவனாகிறான்!
17எனவே, நமக்குள்ள நட்புறவைக் கருதி, என்னை ஏற்றுக்கொள்வதுபோல் அவனையும் ஏற்றுக்கொள்ளும்.

பவுலின் கடிதங்கள் என அறியப்படுபவற்றில் மிகவும் சிறியதும், அத்தோடு மிகவும் தனிப்பட்டதுமான கடிதம் பிலமோனுக்கு பவுல் எழுதிய இந்த கடிதமாகும். ஆனால் இந்த கடிதம் தனிப்பட்ட கடித தொடர்பையும் தாண்டி இறைவார்த்தைகளையும் தாங்கியுள்ளது என ஆழமாக நம்பி, திருச்சபை தந்தையர்கள் இதனை விவிலியத்தில் இணைத்துள்ளனர். அத்தோடு இது மற்றைய பவுலின் பெரிய கடிதங்களை ஒட்டி பல மறைபரப்பு போதனைகளையும் கொண்டுள்ளது. இந்த கடிதம் கிறிஸ்தவரான பிலமோனுக்கு எழுதப்பட்டுள்ளது, இவர் மனைவி அப்பியாவும் மற்றும் பவுலின் சக மறைபரப்பாளரான ஆர்கிபுசும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த கடிதம் பவுலின் தற்போதய துiணாயாளரான ஒனேசிமுசுக்கு மன்னிப்பு வழங்கி ஏற்றுக்கொள்ளும் படியாக எழுதப்பட்டுள்ளது. ஒனேசிமுஸ் எப்படி பிலமோனுக்கு தவிறிழைத்தார் என்று காணுவது கடினம். வசனம் 18இல் இருந்து ஒனேசிமுஸ் பிலமோனின் பணத்தை திருடியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் ஊகிக்கின்றனர். இப்படியான திருட்டு உரோமைய சட்டப்படி மரண தன்டனைக்குரிய குற்றமாகும். அடிமைகள் தப்பி ஓடுவதும், பின்னர் வேறு இடங்களில் மறைந்து வாழ்வதும் அக்கால உரோமைய-கிரேக்க முதலாளி-முதலைகள் உலகில் சாதாரணமாக இருந்தது. இப்படியாக ஒனேசிமுஸ் பவுலை சந்தித்து அடைக்கலம் தேடியிருக்கலாம். 
பவுல் சட்டங்களை மதிப்பவராக அத்தோடு பிலமோன் ஒரு நல்ல மனிதராக இருந்த படியினாலும், பவுல் ஒனேசிமுசை மீண்டும் அவர் தலைவரிடம் அனுப்புகிறார். அதேவேளை ஒனேசிமுசை எந்தளவுக்கு பவுல் அன்பு செய்தார் அத்தோடு பிலமோனை எந்தளவுக்கு மரியாதை செய்தார் என்பதும் இந்த வாசகத்தில் காணக்கிடக்கின்றன. பிலமோன் கொலோசேயில் வாழ்ந்திருக்கலாம் அவருக்கு பவுல் தன் சொந்த கையால் இதை எழுதினார் என்று இன்று வரை நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்கள் மிகக் குறைவாகவே உள்ளன. இதனுடைய காலம் கி.பி 60-61 ஆக இருக்கலாம். 
தூய பவுல் அடிமைத்தனத்தை ஆதரித்தார் என்ற சில பிழையான வாதங்கள் இருக்கின்றன. பவுலை நாம் அவர் கால உலகில் வைத்து பார்க்க தவறக் கூடாது. பவுல் எந்த இடத்திலும் அடிமைத்தனத்தையோ அல்லது மனித வர்த்தகத்தையே ஆதரிக்கவில்லை. பவுல்தான் உலக வரலாற்றில் முதல் தடவையாக, அதன் கறைபிடித்த இதயத்திற்கு, அடிமை ஒனேசிமுசை சகோதரனாக பார்க்கும் படி கட்டளையிட்டவர். யூதர்கள் எந்த யூத சகோதரனையும் அடிமையாக்க மாட்டார்கள், அவர்களை விடுவிக்க பல முயற்சிகளை செய்வார்கள். இயேசு, இந்த பவுல் என்னும் யூதனுக்கு, அனைத்து நபர்களும் சகோதரர்கள் என்று கற்பித்தார். இப்போது பவுல் அதனைத்தான் பிலமோனுக்கு கற்பிக்கிறார். பிலமோனுக்கு எழுதிய திருமுகம், அனைத்து அடிமைத்தன பிரச்சினையைப் பற்றி ஆராயவில்லை மாறாக ஒரு கிறிஸ்தவ சகோதரனை அடிமை வாழ்விலிருந்து விடுவிக்கும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. அடிமைத்தனத்தை இல்லாமல் செய்யக் கூடியது சட்டமல்ல மாறாக நல்ல உறவே. இன்றும் இந்த இலத்திரனியல் தொழில் நுட்ப உலகில் பல வடிவங்களில் பல இன மக்கள் அடிமைகளாக வாழ்கிறார்கள். நம் ஈழ உறவுகளில் பலர் ஈழத்திலும், புலத்திலும் அடிமைகளாகவே வாழ்கிறார்கள். அடிமைத்தனத்தை கழைய, பவுல் காட்டும் சமத்துவ சகோதரத்துவமே உதவும் என நம்புகிறேன்.

வவ. 9-10: ஒனேசிமுசுக்காக வேண்டும் இ;ந்தப் பகுதி, பவுலின் தனிப்பட்ட உறவு முறைகளைக் காட்டுகிறது. பவுலின் இதயம், அவர் வயதில் வளர வளர, இயேசுவின் படிப்பினைகளில் நன்கு பக்குவப்பட்டது என்பதனை இந்த வரிகளில் காணலாம். பவுல் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தாமல் தம் அன்புறவை பாவிக்க விளைகிறார். ஓர் பாதிக்கப்பட்ட அடிமை சகோதரனை மகனாக பார்பது அவரின் தூய்மையைக் காட்டுகிறது. இந்த வரிகள் நிச்சயமாக பிலமோனிடம் நல்ல தாக்கங்களை எற்படுத்தியிருக்கும். ஒன்பதாவது வசனத்திலுள்ள 'தூதுவன்' என்னும் சொல் கிரேக்கத்தில் 'முதியவர்' என்றே உள்ளது (πρεσβύτης பிரஸ்புடேஸ் - முதியவர், பெரியவர், முதிர்ச்சியுள்ளவர்). பவுல் ஒனேசிமுசை பிள்ளையென காண்கிறார். இதற்கு τέκνον தெக்னொன் என்ற கிரேக்க சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இது பிள்ளையென்பதையும் விட வாரிசு மற்றும் மகன்  என்ற அர்த்தத்களையும் கொடுக்கும்.   

வ. 11: ஒனேசிமுசின் புதிய வாழ்கை வடிவத்தைக் காட்டுகிறார். முன்னர் சட்டத்தை மீறிய அவர் இப்போது மனித சட்டங்களையும் தாண்டி இன்னொரு இயேசுவாயிருக்கிறார் என பவுல் பரிந்துரை செய்கிறார்.  

வ. 12: இந்த வரி பவுலின் மனித உணர்வுகளை படம்பிடிக்கிறது. சில வேறு முக்கியமான பிரதிகளின் வாசகங்கள் இந்த வரியை வித்தியாசமாக வாசிக்கின்றன. அதில்: 'நான் இப்போது அவரை உம்மிடம் தருப்பி அனுப்பியுள்ளேன், அவரை ஏற்றுக்கொள்ளும் அதாவது என் இதயத்தைப் போல' என்றுள்ளது. பவுல் இங்கே யாரை-எதை 'இதயம்' என்று சொல்கிறார் என்பதில் சில மயக்கம் உள்ளது. இதயம் என்ற தமிழ் மொழிபெயர்ப்பு, கிரேக்க மூலத்தில் σπλάγχνον ஸ்பிலாக்னொன் என்ற சொல்லைக் கொண்டுள்ளது. இது மனித உணர்வுகளைத் தரக்கூடிய உறுப்புக்களான இதயம், நுரையீரல், கல்லீரல் மற்றும் குடல் போன்றவற்றைக் குறிக்கும். முதல் ஏற்பாட்டிலும் (எபிரேயம்), ரகமிம் רַחֲמִים என்ற சொல்லும் இந்த சிந்தனைகளையே மையப்படுத்துகிறது.    

வ. 13: இந்த கடிதத்தை எழுதியபோது பவுல் சிறையிலிருந்தார் என்பதை இந்த வரியிலும் காணலாம். தன்னுடைய விருப்பத்தையும் இங்கே அவர் பதிவு செய்கிறார். (சில காலங்களின் பின்னர் ஒசேனிமுஸ் மீண்டும் பவுலை வந்தடைந்தார் என சில பாரம்பரியங்கள் கூறுகின்றன.)

வவ. 14-15: பவுல் உரோமைய-கிரேக்க சட்டங்களை மதித்தார் என்பதனை இந்த வரிகளில் காணலாம். அத்தோடு பவுல் ஒரு காலத்திலும் தன் திருத்தூதுவத்தை அதன் உரிமைகளை தன் சொந்த விருப்பத்திற்கு பயன்படுத்தவில்லை என்பதையும் காண்டுகொள்ளலாம். ஒனேசிமுசை தன்னுடன் வைத்திருக்க விரும்பினாலும் அவர் தன் தலைவருடன் இருப்பதே முறை என்று உணர்கிறார் போல. 

வ. 16: இந்த வரி, பிலமோன் திருமுகத்திலே மிக முக்கியமான வரி. அடிமை (δοῦλος துலொஸ் - அடிமை, பணியாளர்) என்பவர் அக்கால கலாச்சாரத்தில் தலைவரின் ஒரு 'மனித பொருளாக' காணப்பட்டார். இந்த அசிங்கமான மனித வரலாற்றை அழகான கிறிஸ்தவ விழுமியமான சகோதரத்துவத்தால் நிரப்பச்சொல்கிறார் பவுல். கிறிஸ்தவத்தில் சகோதரர் என்பவர், மனிதர் சார்பாகவும், ஆண்டவர் சார்பாகவும் அன்புக்குரியவர் என்ற வாதத்தை பவுல் எழுதுகிறார். (இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் இந்த அழகிய சகோதரத்துவம் நம் கிறிஸ்தவத்திலும் முழுமையாக வாழப்படவில்லை. அனைத்து பிரிவினை வாதங்களும் இந்த விழுமியத்திற்கு எதிரான பாவமே!!!). 

வ. 17: பவுல் ஒசேனிமுசுக்கு தன்னுடைய நிலையை ஒத்த நிலையை அளிக்கிறார். ஏற்றுக்கொள்ளும் என்பது 'வரவேற்றுக்கொள்ளும்' என்ற அர்த்தத்தையும் கொடுக்கும்.   

லூக்கா 14,25-33

25பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: 26'என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. 27தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது. 28'உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா? 29இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, 30'இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை' என்பார்களே! 31'வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? 32எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா? 33அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.

மான்புமிகு வைத்தியர் லூக்காவின் நற்செய்தியில், இந்த அதிகாரமும், எருசலேம் நோக்கிய பயணத்தின் போது வழங்கப்பட்ட நீண்ட உரையின் ஒரு பகுதியாகவே இருக்கிறது. சீடத்துவம் என்பதை நான்கு நற்செய்திகளிலும் தனித்துவமாக ஆராயப்படுகிறது. லூக்காவும் தனக்கே உரிய பாணியில் இயேசு கற்பித்த சீடத்துவத்தை விவரிக்கின்றார். இந்த பகுதி லூக்காவிற்கே உரிய தனித்துவமான பகுதி, மற்றைய நற்செய்தியாளர்களில் மத்தேயு இதனை சில வரிகளில் ஒத்திருக்கிறார் (ஒப்பிடுக மத் 10,37-38). சீடத்துவம் அக்காலத்தில் மிகவும் அறியப்பட்ட மற்றும் பிரதான கல்விக்கான உண்மையான வழிமுறையாகும். கிரேக்க-உரோமைய பெரும் மெய்யறிவு வாதிகள் பல சீடர்களை கொண்டிருந்தனர். அதிகமான இளைஞர்கள், முக்கியமான பெரும் மெய்யறிவு வாதிகளிடம் கற்று தங்கள் எதிர்காலத்தை நிச்சயிக்க முயன்றனர். அரிஸ்டோட்டிஸ் மற்றும் அலெக்சான்டர் சோடி இதற்கு நல்ல உதாரணம். இயேசுவை பின்பற்றிய கூட்டம் அனைத்தும், அவர் சீடர்கள் அல்ல என்பதை விளக்க லூக்கா முயற்சிக்கின்றார். இயேசுவை பின்னால் மூன்றுவிதமான குழுக்கள் சீடர்களாக வலம்வந்தனர். அவர்கள்:

அ. பொதுவான சீடர்கள், இவர்களில் பல பெண்களும் அடங்குவர்
ஆ. பன்னிரு திருத்தூதர்கள், இவர்களை இயேசுவே தெரிந்து கொண்டார்.
இ. முக்கியமான மூவர் கூட்டம் (பேதுரு, யோவான் மற்றும் யாக்கோபு). இவர்கள் மிக முக்கியமான நிகழ்வுகளில் இயேசுவோடு இருந்தனர்.    

வ. 25: இங்கே கூறப்படுகின்ற பெருந்திரளான மக்கள் என்பவர்கள் இயேசுவின் சீடர்கள் மட்டுமல்ல, மாறாக இயேசுவை பினபற்றிய மக்கள் கூட்டத்தைக் குறிக்கின்றது. இயேசுவை சுற்றி பெரிய கூட்டம் ஒன்று எப்போதும் இருந்ததை லூக்கா மீண்டும் மீண்டும் பதிவுசெய்வார். ஆண்டவர் இந்த கூட்டத்தை திரும்பிப் பார்த்து அறிவுரைகள் கூறுவது, முதல் ஏற்பாட்டில் கடவுள் தனது திரு முக ஒளியை காட்டுவதனை நினைவுபடுத்துகிறது. சாதாரணமான ஒருவர் திரும்பி பார்த்தல் என்பது, அவர் பார்க்கப்படுகிறவர்கள் மேல் கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகின்றது. 

வ. 26: இயேசுவின் சீடத்துவத்தின் மதிப்பு இங்கு மதிப்பீடு செய்யப்படுகிறது. இங்கே சீடர்கள் என்பவர்கள் திருத்தூதர்களை மட்டும் குறிப்பதாக எண்ண முடியாது. ஒரு மனிதனின் மிக முக்கிய உறுவுகள் இங்கே வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு, வாழ்வின் மிக முக்கியமான சொத்தான உயிரும் இங்கே சீடத்துவத்தின் குரு தட்சனையாக கேட்கப்படுகிறது. இந்து மதத்திலே சீடத்துவம் என்பது, குருவின் காலடிகளில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்பதாகும். இதனைத்தான் உபநிசாத் என்கின்றோம். இயேசுவின் சீடத்துவம், அனைத்தையும் இயேசுவிற்கு கீழாக வைக்கக் கேட்கிறது. பௌத்த மத பாரம்பரிய சீடத்துவம், சீடர்கனை அனைத்தையும் துறந்து, குருவின் தயவில் தங்கி அவர் கற்பிப்பதை கற்றுக்கொள்ள கேட்டது. 
இயேசு இந்த வரியில், தன்னிடம் வரும் சீடர்கள் தம் உறவுகளை அனைத்தையும் துறந்துவிட வேண்டும் என்று கேட்கவில்லை மாறாக, இவர்கள் அனைத்திற்கும் மேலான இடத்தை தனக்கும் தன் பணிக்கும் தரவேண்டும் என்றே கேட்கிறார். ஆரம்ப கால கிறிஸ்தவ சீடத்துவத்திற்கு சவாலாக குடும்ப உறவுகள் விளங்கியதையும், குடும்ப அதி-அன்பின் காரனமாக பல சீடர்கள் கிறிஸ்தவத்தை கைவிட்டு யூத உரோமைய மதங்களுக்கு திரும்பிச் சென்றதையும் இங்கே நினைவுகூர வேண்டும். இந்த சீடத்துவத்தின் அழைப்பு அழகாக விளங்கப்பட்டு, ஆரம்ப கால மற்றும் மத்திய காலத்தில் கிறிஸ்தவ சீடத்துவம், இயேசு கிறிஸ்துவிற்கே முக்கியத்துவம் கொடுத்தது. இன்று பல வியாக்கியானங்களினாலும், நவீன கால சமாளிப்புக்ளாலும் 
இயேசுவிற்கு இரண்டாம் இடத்தையே அதிகமான சீடர்கள் கொடுப்பதை கவலையோடு பார்க்கலாம். 

வ. 27: சிலுவை (σταυρός ஸ்தௌரொஸ் - சிலுவை) சமரசம் செய்யப்பட முடியாத சீடத்துவத்தின் 
ஆயூதம் என்பதை ஆண்டவர் விளக்குகிறார். சிலுவை என்பது உரோமையருக்கு தண்டனையின் அடையாளமாகவும், யூதர்களுக்கு சாபமாகவும் விளங்கியது. இந்த சிலுவைதான் ஒருவரை இயேசுவின் சீடர்களாக்குகிறது என்கிறார் மாண்புமிகு வைத்தியர் லூக்கா. பவுல் தன்னுடைய திருமுகங்களில் இந்த சிலுவையின் ஆன்மீகத்தை அழகாகவும் ஆழமாகவும் இறையியல்படுத்துவார் (ஒப்பிடுக 1கொரி 1,18✡). இங்கே லூக்கா குறிப்பிடும் 'தம் சிலுவை' என்பது நோக்கப்பட வேண்டும். அதாவாது சீடத்துவம் என்பது ஒருவரின் சொந்த சிலுவையாகும், இது ஒருவர் இயேசுவிற்காக செய்யும் இரக்கச் செயல் அல்ல மாறாக ஒவ்வொருவரும் தம் சொந்த வாழ்வையும் அதன் சவால்களையும் தமக்காக சந்திக்கவேண்டும். இதுவே சீடத்துவம் என்கிறார் லூக்கா. கிரேக்க-உரோமைய சீடத்துவம் விஞ்ஞான அறிவை மையப்படுத்தியது, ஆனால் கிறிஸ்தவ சீடத்துவம் சாதாரண வாழ்வை மையப்படுத்துவதை வியந்து பார்க்கலாம். 
(✡சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை. 19ஏனெனில், 'ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன், அறிஞர்களின் அறிவை வெறுமையாக்குவேன்' என்று மறைநூலில் எழுதியுள்ளது.).

வவ. 28-30: இந்த வரிகளில் கோபுரம் ஒன்று கட்டப்படுவதன் வழிமுறையை இயேசு சீடத்துவத்தின் உதராணமாக பார்க்கிறார். இங்கே இயேசு சீடத்துவத்தை சாதாரண கிறிஸ்தவ வாழ்வாகவே பார்கிறார் என்பதனையும் தொடர்ந்து நோக்க வேண்டும். அந்த காலத்தில் பல விதமான கோபுரங்கள் (πύργος புர்கொஸ்- கேபுரம்) பாவனையில் இருந்தது. வாயிற் கோபுரம், கோட்டையின் அரண் கோபுரம், இல்லங்களில் இருந்த கோபுரம், தொழில் இடங்களின் கோபுரம். இவ்வாறு கோபுரங்கள் அக்கால பாதுகாப்பின் அடையாளங்களாக இருந்தன. சண்டைகளின் போது முதலில் கோபுரங்களே தாக்கப்பட்டன. இன்று ஒரு வீட்டிற்கு எப்படி பாதுகாப்பு ஒளிப் பதிவுக்கருவி முக்கியமோ அப்படித்தான் அன்று கோபுரம் இருந்தது. இந்த கோபுரங்களின் வலிமை அதன் அடித்தளத்திலே அதிகமாக தங்கியிருந்தது. இதனால்தான் இதனை கட்டுகிறவர் முதலில் அதன் அடித்தள செலவை கணிக்க வேண்டும் என்று இயேசு ஆண்டவர் ஒப்பிடுகிறார். வீட்டிற்கு எப்படி கோபுரம் முக்கியமோ அதே போல் கிறிஸ்தவ வாழ்விற்கு சீடத்துவம் முக்கியம் என்கிறார் இயேசு.
யார் இந்த ஏளனம் செய்யும் மக்கள் கூட்டம் என்பது அவ்வளவு தெளிவாக விளங்கவில்லை. ஒருவேளை இவர்கள் ஆரம்ப காலத்தில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ வாழ்வை புறக்கணித்த போது அவர்களை ஏளனம் செய்த யூதர்களையோ அல்லது கிரேக்க-உரோமையர்களையோ குறிக்கலாம். 

வவ. 31-32: போர் தந்திரம் மற்றும் போர்த்திறன் போன்றவை அக்காலத்தில் நன்கு அறியப்பட்ட உவமைகள். இன்று போர் செய்யும் நாடுகளின் திறன் அவர்களின் இராணுவ ஆயுத பலத்தையும், அரசியல் பலத்தையும் கொண்டு ஒப்பிடப்படுகிறது. இயேசுவின் காலத்தில் இது, போர் வீரர்களின் எண்ணிக்கையை கொண்டு ஆராயப்பட்டது. இதனால்தான் லூக்கா 10000தையும் 20000தையும் ஒப்பிடுகிறார். அமைதி வழியை தேடுதல் அக்காலத்தில் பலமின்மையின் அடையாளமாக கருதப்படவில்லை மாறாக அதுவும் அரசியல் இராஜ தந்திரமாகவே பார்க்கப்பட்டது. கிறிஸ்தவ வாழ்க்கையும் இதனைப்போல, உலகரத்திற்கு எதிரான ஒரு போர் போன்றதே என்கிறார் லூக்கா. 

வ. 33: உடமைகள் என்பது இங்கே ஒருவரின் அசையும்-அசையா சொத்துக்கள் மற்றும் உரிமைகளைக்கூட குறிக்கலாம். உடமைகள் என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது கிரேக்க மூலத்தில் ஒருவரின் 'அனைத்தும்' என்றே உள்ளது (πᾶσιν τοῖς ἑαυτοῦ அவர்குரிய அனைத்தும்). 


இயேசுவின் சீடத்துவம் ஒரு மதம் அல்ல,
அது ஒரு மகத்தான அழைப்பு,
கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் ஒரே அழைப்பே கொடுக்கப்பட்டுள்ளது.
இயேசுவே கிறிஸ்தவ சீடத்துவத்தின் எல்லையும் முடிவும்.
இந்த சீடத்துவம் தாழ்ச்சியையும், சுய அறிவையும் எதிர்பார்க்கிறது. 
அத்தோடு இந்த சீடத்துவம் மனித அறிவில் தங்கியிருப்பதில்லை,
மாறாக மனித அறிவை பயன்படுத்துகிறது. 

அன்பு ஆண்டவரே!
உம்மை பற்றிக்கொண்டு உம் சீடராக முதலில் எமக்கு சுய அறிவை தாரும். 
எமது சிலுவைகள் சுமக்கப்படவேண்டிய
சொந்த மணிமுடிகள் என்ற அறிவையும் தாரும், ஆமென். 


மி.ஜெகன்குமார் அமதி
இலுபைக் குளம், வவுனியா

புதன், 31 ஆகஸ்ட், 2016

புதன், 24 ஆகஸ்ட், 2016

ஆண்டின் பொதுக்காலம்; இருபத்திரண்டாம் வாரம். (28,08,2016): The Twenty Second Suday in Ordinary Times

ஆண்டின் பொதுக்காலம்; இருபத்திரண்டாம் வாரம். 
(28,08,2016)

“இறுமாப்புக்கொண்டோரின் நோய்க்கு மருந்து இல்லை; ஏனெனில் தீமை அவர்களுள் வேரூன்றி விட்டது”


 முதல் வாசகம், சீராக்: 3,19-21.30-31
திருப்பாடல், திருப்பாடல் 68
இரண்டாம் வாசகம், எபி 12,18-19.22-24
நற்செய்தி, லூக்கா: 14,1.7-14










சீராக்: 3,19-21.30-31
 17குழந்தாய், நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்; அவ்வாறாயின், கடவுளுக்கு உகந்தோர் உனக்கு அன்பு காட்டுவர். 18நீ பெரியவனாய் இருக்குமளவுக்குப் பணிந்து நட. அப்போது ஆண்டவர் முன்னிலையில் உனக்குப் பரிவு கிட்டும். 19உயர்ந்தோர், புகழ்பெற்றோர் பலர் உள்ளனர். ஆயினும் எளியோருக்குத்தான் ஆண்டவர் தம் மறைபொருளை வெளிப்படுத்துகிறார்.20ஆண்டவரின் ஆற்றல் பெரிது ஆயினும், தாழ்ந்தோரால் அவர் மாட்சி பெறுகின்றார். 21உனக்கு மிகவும் கடினமாக இருப்பவற்றைத் தேடாதே உன் ஆற்றலுக்கு மிஞ்சியதை ஆராயாதே. 22உனக்குக் கட்டளையிடப்பட்டவை பற்றி எண்ணிப்பார்; ஏனெனில் மறைந்துள்ளவைபற்றி நீ ஆராய வேண்டியதில்லை. 23உனக்கு அப்பாற்பட்ட செயல்களில் தலையிடாதே ஏனெனில் உனக்குக் காட்டப்பட்டவையே மனித அறிவுக்கு எட்டாதவை. 24மாந்தரின் இறுமாப்பு பலரை நெறிபிறழச் செய்திருக்கிறது தவறான கணிப்புகள் தீர்ப்புகளை ஊறுபடுத்தியுள்ளன. 25கண் இல்லையேல் பார்க்க முடியாது. அறிவு இல்லையேல் அது இருப்பதாகக் காட்டிக் கொள்ளாதே.

26பிடிவாதம் கொண்டோர் இறுதியில் தீமைக்கு உள்ளாவர்; கேட்டினை விரும்புவோர் அதனால் அழிவர். 27அடங்கா மனத்தோர் தொல்லைகளால் அழுத்தப்படுவர்; பாவிகள் பாவத்தைப் பெருக்குவர். 28இறுமாப்புக்கொண்டோரின் நோய்க்கு மருந்து இல்லை; ஏனெனில் தீமை அவர்களுள் வேரூன்றி விட்டது. 29நுண்ணறிவாளர் உவமைகளைப் புரிந்துகொள்வர்; ஞானிகள் கேட்டறியும் ஆவல் மிக்கவர்கள்.

சீராக்கின் ஞானம் என்ற இந்த புத்தகம் எபிரேய மொழியில் கிடைக்காமையினால் இதனை யூதர்களும் மற்றும் அதிகமான கிறிஸ்தவ சபைகளும் தங்களுடைய விவிலியத்தில் ஏற்றுக்கொள்வதில்லை. கத்தோலிக்கருடையதும் கீழைத்தேயருடையதும் முதல் ஏற்பாடு, இணைத் திருமுறை நூல்களை உள்ளடக்கியிருப்பதனால் இந்த அழகான புத்தகம் நமக்கு கிடைத்திருக்கிறது. ஐம்பத்தொரு அதிகாரங்களை கொண்டுள்ள இந்த மெய்யறிவு நூல் வாழ்வின் ஒவ்வொரு அங்கங்களையும் ஆய்வு செய்து விளக்குகின்றது. இதனை பென்-சிரா என்று எபிரேயத்திலும் மற்றும் எக்கிலேசியாஸ்டிகுஸ் (Ecclesiasticus) என்று இலத்தினிலும் அழைப்பர். முதலில் இந்த நூல்  எபிN;ரயத்தில் எழுதப்பட்டதாகவும் பின்னர் யோசுவா பென் சீராக்கினால் கிரேகத்திற்கு மொழி பெயர்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. அண்மைய கால கும்ரான் மற்றும் மசாதா தொல்பொருளியல் கண்டுபிடிப்புக்களின் விவிலிய சுவடுகள் இந்த சீராக் நூலின் எபிரேய மூலத்தை ஏறக்குரைய 75 வீதம் மீட்டெடுத்திருக்கிறது. மக்கபேயர்களுடைய புரட்சிக்கு முன்னர் பென் சிரா இறந்திரு;க்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர் ஆனாலும் கிரேக்க ஆதிக்கத்திற்கு எதிரான சிந்தனைகளும் எபிரேய தேசியவாதமும் நிறைவாகவே இந்நூலில் காணக்கிடக்கிறது. இந்த புத்தகம் மெய்யறிவு (ஞான நூல்) இலக்கிய வகையைச் சார்ந்தது. 
இதன் மூன்றாம் அதிகாரத்தின் இன்றைய பகுதி பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வின் தேவைகளை விளக்குகின்றது. இந்த அதிகாரத்தின் முக்கிய கூறுகளாக

அ. வவ 1-16: பெற்றோர்பால் கடமை
ஆ. வவ 17-25: தாழ்ச்சி
இ. வவ 26-29: செருக்கு
ஈ. வவ 30-31: ஏழைகளுக்கு இரங்கல்

வ. 17: தாழ்ச்சி (πραύτης பிரவ்டேஸ்) கண்ணியம் என்று கிரேக்க மொழியில் பதியப்பட்டுள்ளது. இந்த வரி 'ஆல்' வகை இலக்கிய அமைப்பி;ல் அமைந்துள்ளது. இவ்வாறு முதலாம் பிரிவில் சொல்லபட்டுள்ள விழுமியம் இரண்டாவது பகுதியிலுள்ள செயற்பாட்டை எதிர்பார்கிறது. தாழ்ச்சி அல்லது கண்ணியம் என்கின்ற பண்பு எபிரேய சிந்தனையில் முக்கியம் பெற்றுள்ளது என்பதை இந்த வரியின் மூலம் ஊகிக்க முடியும். 

வ. 18: பெரியவனாக இருக்குமளவிற்கு பணிந்து நட என்பது புதிய ஏற்பாட்டில் தாழ்மையின் முக்கியத்துவத்தைப் பற்றிய இயேசுவின் சிந்தனையை நினைவூட்டுகிறது (காண்க மத் 23,12✺). இந்த வரியில் பரிவு என்று மொழிபெயர்கப்பட்டுள்ளது, கிரேக்க மூலத்தில் அருள் என்றுள்ளது (χάρις காரிஸ்- அருள்). 

வ. 19: எளியோர்கள் என்பவர்கள் இங்கே உருவகமாக பயன்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சிறியவர்கள் என்பதைவிட வலுக்குறைந்தவர்கள் என்ற அர்த்தத்திலே பார்க்கப்பட்டுள்ளனர். புகழ்பெற்றோர் என்று சீராக் கூறுவது யாரை என்பது இங்கே தெளிவாக இல்லை, ஒருவேளை இவர்கள் கிரேக்க மயமாக்கலை ஆதரித்த யூத அறிவாளிகளாக இருக்கலாம். புதிய ஏற்பாட்டிலும் இயேசு, கடவுள் மறைபொருளை சிறுவர்களுக்கு வெளிப்படுத்தியதாக அடிக்கடி கூறுவார் (காண்க மத்தேயு 11,25✺✺).
(✺தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.)
(✺✺'தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.)

வ. 20: இந்த வரிகளில் மீண்டும் மீண்டும் வருகின்ற 'தாழ்ந்தோர்' என்பவர்கள், உண்மையான யூத மறையை பின்பற்றியவர்கள் என வாதிடலாம். கடவுள் பெரியவர், அவர் இவர்களால் மாட்சியடைய தேவையில்லை, இருப்பினும் அவர் இவர்களையே தெரிவு செய்கிறார் என்று விளக்கி தன்னுடைய ஆழமான இறையியலை முன்வைக்கிறார் ஆசிரியர். 

வ. 21: திருப்பிக்கூறும் எபிரேய இலக்கிய அமைப்பில் இந்த வரிகள் எழுதப்பட்டுள்ளன. 
இந்த இலக்கிய வகையிலிருந்து சீராக் புத்தகத்தின் மூலம் எபிரேய மொழிதான் என வாதாடலாம். 

அ. கடினமானது -  ஆற்றலுக்கு மிஞ்சியது
ஆ. தேடாதே - ஆராயாதே.
இங்கே கடினமானது மற்றும் ஆற்றலுக்கு மிஞ்சியது என்பது ஒருவேளை இஸ்ராயேல் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட வேற்று நம்பிக்கைகள் எனலாம்.

வவ. 22-24: இந்த வரிகள் தாழ்ச்சியைப் பற்றி போதிக்கின்றன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆற்றல் கொடுக்கப்பட்டுள்ளது அவை மனிதனை சமூகப்பிராணியாக்கிறது என்பது இஸ்ராயேலரின் நம்பிக்கை. மறைவாய் இருப்பதை விளக்கவேண்டியது கடவுளின் வெளிப்படுத்தல். அவரின் உதவியின்றி வெளிப்படுத்தலை விஞ்ஞான முறையில் அக்கால கிரேக்கர்கள் செய்ய முயன்றனர், இதற்கு எதிராக ஆசிரியர் மறைமுகமாக வாதிடுவதை இங்கே காணலாம். அறிவு என்பது தெய்வீகத்துடன் சம்மந்தப்பட்டது. இறையற்றமே அறிவின் தொடக்கம் என விவிலியம் வாதிடுகிறது. தெய்வீக பயமற்ற அறிவு உண்மையான அறிவல்ல என்கிறார் சிராக் ஆசிரியர். 

வவ. 26-28: பிடிவாதம், அடக்கா மனம், மற்றும் இறுமாப்பு போன்றவை அழிவின் குணங்களாக விவிலியத்தால் சித்தரிக்கப்படுகிறது. இவைதான் மனிதனை அழிக்கிறது அத்தோடு இவைதான் மூடர்களை தாங்கள் அறிவாளிகள் என காட்ட வைக்கிறது என்கிறார் இந்த ஞானி. 'உன்னை அறி' என்ற சோக்கரடீஸின் வாதத்தை இங்கே காணலாம். 

வ. 29: கேட்டறிதல் அல்லது படித்தல் என்பது முக்கியமான விவிலிய விழுமியம். இதனாலேயே ஒருவர் நுன்னறிவாளராகிறார் அல்லது தன் நுன்னறிவை வளர்க்கிறார் என்பதில் ஆழமாக இருக்கிறார் சீரா.  


திருப்பாடல் 68
3நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர். 
4கடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பெயரை போற்றுங்கள்; மேகங்கள்மீது வருகிறவரை வாழ்த்திப் பாடுங்கள்; 'ஆண்டவர்' என்பது அவர்தம் பெயராம்; அவர்முன் களிகூருங்கள்.

6தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்; சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார்; ஆனால், அவருக்கு எதிராகக் கிளம்புவோர் வறண்ட நிலத்தில் வாழ்வர். 

9கடவுளே! உம் உரிமையான நாட்டின்மீது மிகுதியாக மழைபொழியச் செய்தீர்; வறண்டுபோன நிலத்தை மீண்டும் வளமாக்கினீர். 
10உமக்குரிய உயிர்கள் அதில் தங்கியிருந்தன கடவுளே! நீர் நல்லவர்; எனவே ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளித்தீர்.

திருப்பாடல் 68 ஒரு செபம்போல அறியப்படுகிறது. இந்த திருப்பாடலின் சாரம்சமாக மக்களுக்கு கடவுள் செய்த வியத்தகு செயல்கள், மக்களின் வாழ்கையில் கடவுளின் பிரசன்னம், கடவுளின் வெற்றி, அவர் ஆட்சியின் விரிவு, அத்தோடு அவர் மாட்சி போன்றவை பாடப்பட்டுள்ளது. கடவுளை வெறுத்து யாரும் வரலாற்றில் வெற்றியடைந்ததோ அல்லது நிலைபெற்றதோ இல்லை என்பதை இப்பாடல் காட்டுகிறது. கடவுள்தான் மக்களின் மகிழ்ச்சி, இதனால் அவர்கள் கடவுளின் முன்னிலையில் வரும்போது அவர்கள் சந்தோசப்படவேண்டும். 

வவ. 3-4: நேர்மையாளர் யார் என்ற கேள்விக்கு இன்னொரு வரைவிலக்கனம் கொடுக்கப்படுகிறது. மகிழ்சியடைதலும், ஆர்பரித்து கொண்டாடுதலும் நேர்மையாளருக்கான வேறு அடையாளங்கள்.  'மேகங்கள் மீது வருபவர்' לָרֹכֵב בּעֲרָבוֹת என்பது 'அவர் பாலைநிலத்தில் சவாரி செய்கிறவர்' என்ற அர்த்தத்தையும் கொடுக்கிறது. இது இங்கே வானங்களின் மீது பயணம் செய்தல் என்ற இணை. சட் 33,26 ✺ வாசகத்தை நினைவூட்டுகிறது. இஸ்ராயேலின் கடவுள்தான் மழை வீழ்ச்சியின் காரணம் என்ற நம்பிக்கையையும் இது பிரதி பலிக்கின்றது. இந்த அரபோத் (பாலைநிலம்-மேகம்) என்ற சொல் அககாடியன் 'பால்' என்ற புயல் கடவுளையும் நினைவூட்டுகிறது. 
இந்த பின்புலத்திலிருந்து, எவ்வளவு இஸ்ராயேலரின் நம்பிக்கையில் கானானிய-மொசேப்தேமிய கதைகளும் மற்றும் புராணங்களும் ஆதிக்கம் செலுத்தின என்பதைக் காணலாம். 
இங்கே நோக்கப்பட வேண்டியது, 'ஆண்டவர்' என்ற பெயரே. இந்த மேகங்களில் வருபவரை இஸ்ராயேலரின் இறைவன் என்று நினைவூட்டுகிறார் ஆசிரியர். 

(✺எசுரூபின் இறைவன்போல் எவருமில்லை; அவர் உனக்கு உதவிட வானங்களின் வழியாக தமது மாட்சியுடன் மேகங்கள்மீது ஏறிவருவார்.)

வ. 6: தனித்திருத்தல் என்பது இஸ்ராயேலின் சமூக உறவிற்கு எதிரான முக்கியமான பிரச்சினை. தனிமையில் இருந்து ஒருவரை மீட்பது கடவுளின் ஆசீர்வாதமாகக் கருதப்பட்டது. சிறைவாழ்வும் அக்கால மக்களின் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக கருதப்பட்டது. கடவுளுக்கு எதிராக கிளம்புவோர் வரண்ட நிலத்திற்கு செல்லுவர் என்பது நோக்கப்படவேண்டிய முக்கியமான அடையாளம். கானான் நாடு வளமான தேசமாக கடவுளால் வாக்களிக்கப்பட்டது. வரண்ட நிலம் என்பது இவர்களை விடுதலை பயண அனுபவத்திற்கு எடுத்துச்செல்கிறது. இப்படியாக கடவுள் தரும் வளமான வாழ்வும், தண்டனையும் எப்படி மனிதரின் நம்பிக்கைக்கேற்ப மாறுபடுகிறது என்பதைக் காட்டுகிறது. 

வவ. 9-10: இந்த வரிகள் இஸ்ராயேலின் பௌதீக அமைப்பைக் காட்டுகிறது. இஸ்ராயேல் தேசத்தில் மழைப்பொழிவு நிச்சயமாக கடவுளின் ஆசீர்வாதமாகப் பார்க்கப்படும். பத்தாவது வசனத்தில் உள்ள 'உயிர்கள்' என்பது இஸ்ராயேல் மக்களைத்தான் குறிக்கிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.  



எபி 12,18-19.22-24
18நீங்கள் வந்து சேர்ந்திருப்பது தொட்டுணரக்கூடிய, தீப்பற்றியெரிகின்ற, இருள்சூழ்ந்த, மந்தாரமான, சுழல்காற்று வீசுகின்ற சீனாய் மலை அல்ல. 19அங்கு எக்காளம் முழங்கிற்று பேசும் குரலொன்று கேட்டது. அக்குரலைக் கேட்டவர்கள் அதற்குமேல் தங்களோடு அது ஒரு வார்த்தைகூடப் பேசவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள்.

22ஆனால் நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் சீயோன் மலை வாழும் கடவுளின் நகர்; விண்ணக எருசலேம். அதனைப் பல்லாயிரக் கணக்கான வானதூதர் சூழ்ந்துள்ளனர். 23விண்ணகத்தில் பெயர் எழுதப்பட்டுள்ள தலைப்பேறானவர்களின் திருச்சபை விழாக் கூட்டமென அங்கே கூடியுள்ளது. நிறைவுபெற்ற நேர்மையாளர்களோடு சேர்ந்து, அனைவருக்கும் நடுவரான கடவுள் முன்னிலையிலும், 24புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசுவின் முன்னிலையிலும் நிற்கிறீர்கள். ஆபேலின் இரத்தத்தைப் போலன்றிச் சிறந்த முறையில் குரலெழுப்பும் இயேசுவின் இரத்தத்தினால் தெளிக்கப்பட்டிருக்கிறீர்கள்.

எபிரேயர் திருமுகத்தின் இந்த அதிகாரங்கள் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை முறைக்கான அழைப்பு என்ற தலைப்பில் அமைந்துள்ளது. இதற்கு முன்னுள்ள பகுதி (வவ 14-17), இறுதி எச்சரிக்கை என்ற பகுதியாகவும், இந்த பகுதி அதற்கான பதிலாகவும் அமைந்துள்ளது. எச்சரிக்கையிலிருந்து உற்சாகப்படுத்தல் என்ற தலைப்பிற்கு திரும்பும் ஆசிரியர், கடவுளின் அருளினால் நம்பிக்கை கொள்பவருக்கு கிடைக்கும் அனுகூலங்களை விளக்குகிறார். ஆனால் இந்த அனுகூலங்கள் நம்பிக்கையினாலும் கீழ்படிவினாலுமே கிடைக்கும் என்று செக் (பொறி) வைக்கிறார். சீனாய் மலையில் கடவுளைக் காண இஸ்ராயேலர் ஒன்று கூடியது ஒரு பயங்கரமான அனுபவம் (ஒப்பிடுக வி.ப 19). இந்த நிகழ்விலே இஸ்ராயேலருக்கு மேலதிகமாக எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இந்த நிகழ்வோடு கிறிஸ்தவர்களின் இன்னொருவிதமான சீனாய் அனுபவத்தை ஒப்பிடுகிறார். இங்கே பயங்கரத்திலல்ல மாறாக மகிழ்ச்சியில் கடவுள் மக்களை சந்திக்கிறார். மோசேயைப் போலல்லாது இங்கே இணைப்பாளராக இருப்பர் இயேசு, ஆக கடவுளே இங்கு இணைப்பாளராக இருக்கிறார். இதனால் இவரை வெறுக்கவே அல்லது புறந்தள்ளவோ மக்களுக்கு எந்த தேவையும் கிடையாது. முதல் ஏற்பாட்டு மிருக பலிகளைப் போல் அல்லாது இங்கே பலி ஒப்புக் கொடுப்பதும், பலியும் கிறிஸ்துவாகவே இருக்கின்றார். கிறிஸ்துவினுடைய இந்த பலியின் தன்மை கடவுளின் வல்லமையைக் காட்டுகிறது. 

வவ. 18-19: இந்த வரி வி.ப 36ம் அதிகார நிகழ்வுகளை நினைவூட்டுகிறது. இந்த நிகழ்வில் காணப்பட்ட பௌதீக தன்மை, இருள், மந்தாரம் சுழல்காற்று போன்றவற்றை இரண்டாம் தர அடையாளங்களாக காண்கிறார் ஆசிரியர். எகிப்திய சீனாய் மலையை இப்போது இயேசுவின் உறவால் ஏற்படுகின்ற இன்னொரு ஆன்மீக சினாய் மலையுடன் ஒப்பிடுகிறார். இந்த வரிகளில் முக்கியமான நிகழ்வாக குரல்களில் ஒலிகள் காணப்படுகின்றன. எக்காளங்கள் மற்றும் அசிரிரிகள் போன்றவை முதல் ஏற்பாட்டில் இறை வெளிப்பாட்டைக் காட்டின. இந்த அடையாளங்கள் 
யூதர்களுக்கு மிகவும் பரீட்சயமான அடையாளங்கள் அப்படியான அடையாளங்களையே இரண்டாம் தரமாக்குவதன் மூலம், எபிரேய ஆசிரியர் புதிய சீனாய் மலையின் அடையாளங்களின் மகிமையை உயர்த்த முயல்கிறார். 

வ. 22: இந்த வரியில் ஆசிரியர் விண்ணக எருசலேமின் அடையாளங்களை ஒப்பிடுகிறார். விண்ணக சீயோன் என்பது வாழும் கடவுளின் மலை என்கிறார். சீயோன் என்பது தாவீதின் நகர் என அறியப்பட்ட பழைய எருசலேம். இது இஸ்ராயேலருக்கு மிகவும் முக்கியமானது. இதுதான் மலைகளுக்கெல்லாம் மலை, இங்கேதான் கடவுளின் மாறாத இருப்பு இருந்ததாக அவர்கள் கருதினார்கள். இந்த சீயோன் என்னும் பெயர் யூதர்களின் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான பெயர். இந்தச் சொல் 199 தடவைகளுக்கு மேலாக விவிலியத்தில் பாவிக்கப்பட்டுள்ளது அதில் அதிகமான இடங்களில் இது பழைய எருசலேமை அதாவது தாவீதின் நகரை குறிக்கிறது 
( צִיּוֹן ட்சியோன்: Σιών ட்சிஓன்). ஈழத்தமிழருக்கு மடுவும், நல்லூரும் எப்படியிருக்குமோ அப்படித்தான் சீயோன் இருந்தது. இதனைத்தான் இரண்டாம் தர கடவுளின் நகராக காட்ட முயலுகிறார் ஆசிரியர். 
மண்ணக சீயோனில் கடவுள் இருக்கிறாரோ இல்லையோ, இந்த விண்ணக சீயோனில் கடவுள் வாழுகின்ற கடவுளாக  என்றும் இருக்கிறார் என்பதுதான் அவர் வாதம். 'வாழுகின்ற கடவுள்' என்பதும் முதல் ஏற்பாடு கடவுளுக்கு கொடுக்கும் இன்னொரு விவரணம், இதனையே எபிரேயர் நூல் ஆசிரியர் நன்கு கண்டு பாவிக்கிறார். மண்ணக சீயோனில் சாதாரண மக்கள்தான் சூழ்ந்து இருப்பார்கள் ஆனால் விண்ணக சீயோனில் வானதூதர்கள் சூழ்ந்து இருப்பார்கள். 

வவ. 23-24: இந்த வரிகளில் சில முக்கியமான இறையியல் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. 

அ. விண்ணகத்தில் பெயர் எழுதப்பட்ட தலைப்பேறானவர்கள்: 
வாழ்வென்னும் புத்தகம் ஒன்று இருந்ததாகவும் அதிலே நீதிமான்களுடைய பெயர்கள் எழுதப்பட்டதாகவும் இஸ்ராயேலரின் ஒரு நம்பிக்கை இருந்தது. இங்கே அந்த புத்தகத்தில் இடம் பெற்றிருந்த மக்கள் கூட்டம் திருச்சபையின் கிறிஸ்தவர்கள் என்கிறார் ஆசிரியர். 

ஆ. நிறைவுபெற்ற நேர்மையாளர்கள்: 
இது விண்ணக திருச்சபை அல்லது துயவர்களின் திருச்சபை (புனிதர்கள்) என்ற சிந்தனையின் ஆரம்பம் எனச்சொல்லலாம். நீதிமான்கள் எனப்படுவோர் இனி உன்னதமான கிறிஸ்தவர்கள் என்ற வாதத்தை முன்வைக்கிறார் ஆசிரியர். 

இ. அனைவருக்கும் நடுவரான கடவுள்:
சாதரணமாக புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் இயேசுவைத்தான் நடுவராக இறையியல்படுத்துவர். இங்கே, இயேசுவை இணைப்பாளராக காட்ட வேண்டிய தேவையிருப்பதாலும், அத்தோடு இந்த நடுவர் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பொதுவானவர் என்று காட்ட வேண்டிய தேவையிருப்பதாலும் இப்படியான சிந்தனையை ஆசிரியர் மையப்படுத்துகிறார் எனலாம். 

ஈ. புதிய இணைப்பாளர் இயேசு: 
முதல் ஏற்பாட்டின் மறக்க முடியாத இணைப்பாளர் மோசே அவர் இஸ்ராயேல் மக்களால் சமரசம் செய்யப்பட முடியாதவர். ஆனால் இயேசு மற்றும் அவர் தரும் உடன்படிக்கை வாழ்வின் முன்னால் அவர் இரண்டாம் தரமானவரே என்ற சிந்தனையை எபிரேயர் திருமுகம் முன்வைக்கும்.

உ. இயேசு-ஆபேலின் இரத்தம்: 
ஆபேலின் இரத்தம் காயினின் அநீதிக்கு எதிராக ஆண்டவரை நோக்கி குரலெழுப்பியது. (ஒப்பிடுக தொ. நூல் 4,10✺), ஆனால் அதனைவிட உன்னதமான இயேசுவின் இரத்தம் சிறந்த முறையில் குரலெழுப்புவதாக ஆசிரியர் வாதாடுகிறார். இரத்தத்தால் தெளிக்கப்படுதலும் உடன்படிக்கையை நினைவூட்டுகிறது. மோசே இவ்வாறு இரத்தத்தை மக்கள்மீது தெளித்துத்தான் உடன்படிக்கை செய்தார் (வி.ப 29,21✺✺)ஆனால் அவை உடைக்கப்பட்டன, இவ்வாறில்லாமல் 
இயேசுவின் உடன்படிக்கை உடைக்கப்படாது என்கிறார் ஆசிரியர். 

(✺அதற்கு ஆண்டவர், 'நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது.)
(✺✺பலிபீடத்தின் மீதுள்ள இரத்தத்திலும் திருப்பொழிவு எண்ணெயிலும் சிறிது எடுத்து, அவற்றை ஆரோன், அவன் உடைகள், அவன் புதல்வர்கள், அவர்களின் உடைகள் மீது தெளிப்பாய். இதனால் அவன் அவனுடைய உடைகளோடும், அவன் புதல்வர்கள் அவர்களுடைய உடைகளோடும் புனிதம் பெறுவர்.)



லூக்கா: 14,1.7-14
1ஓய்வுநாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்.

7விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை 8'ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். 9உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், 'இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்' என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். 10நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், 'நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்' எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். 11தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.'
12பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, 'நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும் போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். 13மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். 14அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்' என்று கூறினார்.

லூக்கா இந்த நிகழ்வு ஓய்வு நாளில் நடைபெற்றது என்று விவரிக்கும் போதே வாசகர்களின் அவதானிப்பை பெறுகிறார் லூக்கா. இந்த பகுதியும் எருசலேமை நோக்கிய நீண்ட பகுதியின் ஒரு அங்கமாகவே அமைந்துள்ளது. மேசையில் இயேசு என்னும் பகுதி பல அடையாளங்கள் கலந்த பேதனையை முன்வைக்கிறது. 

வ. 1: ஒய்வு நாளில் இயேசு தன்னை பல செயற்பாடுகளில் ஈடுபடுத்திக்கொண்டார் என்று இவ்வாறு காணலாம். அதேவேளை பல கண்கள் எப்போதுமே அவரை பார்த்துக்கொண்டிருந்ததையும் லூக்கா அழகாக சித்தரிக்கின்றார். கூர்ந்து கவனித்தல் என்பதற்கு உன்னிப்பாக அவதானித்தனர் என்ற கிரேக்கச் சொல் பாவிக்கப்பட்டுள்ளது (παρατηρέω பராடேரெஓ). இங்கே இந்த அவதானிப்பு இயேசுவிடம் பிழை கண்டுபிடிப்பதற்காக நடாத்தப்படுகிறது. 

வ. 7: இந்த விருந்து இறையரசின் விருந்தை பிரதிநிதிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வழமையாக விருந்தில் முதன்மையான இடம் தரப்பட வேண்டும், அவை தெரிந்தெடுக்கப்படும் இடம் அல்ல. 

வ. 8: அக்கால வழக்கத்தில் இக்காலத்ததைப்போலவே முக்கியமான விருந்தினர்கள் காலதாமதமாகவே விருந்திற்கு வந்தனர். அவர்கள் எப்போது வந்தாலும் அவர்களுக்குரிய இடம் அவர்களுக்கு கொடுக்கப்படவேண்டும் என்பது உரோமைய கிரேக்க நாகரீகமாக இருந்தது.
இதனைத்தான் இயேசு நினைவூட்டுகிறார். 

வ. 9: வெட்கத்தோடு கடைசி இடத்திற்கு போதல் இங்கே வெளிவேடத்தனத்தை குறிக்கின்றது. கடைசி இடத்திற்கு போதல்லல்ல ஆனால் தவறான முறையில் முதல் இடத்தை பிடிக்க முயல்வதே இங்கு கேள்வியாக இருக்கிறது. 'இடத்தை விட்டுக்கொடுத்தல்' என்பது இங்கே உரிமையை விட்டுக்கொடுத்தலுக்கு சமனாகும். இதனைத்தான் எசா யாக்கோபுவிற்கு விட்டுக்கொடுத்தார், இதனால் தன் தலைச்சான் உரிமையை இழந்தார்.

வ. 10: இங்கே கடைசி இடத்தில் இருப்பதனால் விருந்தாளியாக வந்தவர் நண்பராகிறார். அத்தோடு அவர் அனைவர் முன்னிலையிலும் பெருமையும் அடைகிறார். முதல் இடத்திற்கு வருதல் அவரின் ஆசீர் நிலையைக் குறிக்கிறது. 

வ. 11: இதுதான் இந்த நற்செய்தியின் மையப்பகுதி அத்தோடு மற்றைய மூன்று வாசகங்களும் 
இந்த விழுமியத்தையே மையப்படுத்தியுள்ளன. இந்தச் செய்தி ஆரம்ப காலத்தில் ஒரு குறிப்பிட்ட குழுவினர்க்கு விசேடமாய் சொல்லப்பட்டதாகக்கூட இருக்கலாம். 

வ. 12-14: சகோதரத்துவம் யூதர்கள் மத்தியிலிருந்த முக்கியமான உறவு. ஆனால் இந்த சகோதரத்துவத்திற்குள் யூதர்கள் தங்கள் சக யூதர்கனை மட்டுமே உள்வாங்கினர் எனலாம். ஆனால் இயேசு இந்த வரையறையை விசாலமாக்குகிறார். அத்தோடு அவர் நோயாளிகளையும் 
இணைக்கிறபோது, நோயாளிகள் பாவிகள் என்ற சிந்தனையை உடைக்கிறார். அதேவேளை அவர்களை நேர்மையாளராக்கி அவர்கள் நிச்சயமாக உயிர்ப்பார்கள் அதோடு அவர்கள் மற்றவர்களுக்காக பரிந்து பேசுவார்கள் என்கிறார். 

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும் (குறள் 121)

அன்பு ஆண்டவரே, இந்த உலகம் பெரியது, 
இவ்வுலகில் இருப்பவை அனைத்தும் பெரியவை, ஆச்சரியமானவை,
என்ற பணிவையும் தாழ்ச்சியையும் தாரும். ஆமென். 

மி. ஜெகன் குமார் அமதி
கற்பிட்டி, இலங்கை
வியாழன், 25 ஆகஸ்ட், 2016



தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) Pentacost Sunday

தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) Pentacost Sunday தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) மி . ஜெகன்குமார் அமதி , சங்கமம் , அமதிகள் ஆன்மீக...